துளிப்பா ஹைக்கூ கவிஞர் இரா இரவி

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

உற்றுக் கேளுங்கள்
பேசுவது கேட்கும்
மலர்கள் !

இரண்டே நிமிடத்தில் தயார்
என்று சொல்லி விற்றனர்
உயிர்க்கொல்லி !

ஆபத்து
நவீன உடையும்
நவீன உணவும் !

உணர்த்திடும்
அடுத்தவர் வலி
மனிதநேயம் !

மடிகிறார்கள்
மனிதர்கள்
மண் சண்டையால் !

சிறகுகள் இருந்தும்
பறக்காததால்
வாத்து மடையன் !

காற்றுடன்
போராடியே எரிகிறது
மெழுகுவர்த்தி !

அடங்குவதே இல்லை
பணக்காரனின்
பணப்பசி !

ஒளி வர இருள் ஒளியும்
தன்னம்பிக்கை வர
துன்பம் ஒழியும் !

போரில் மட்டுமல்ல
அரசியலிலும் தொடர்கிறது
முதுகில் குத்துதல் !

வேண்டாம் மூட நம்பிக்கை
சனிப்பிணம் கேட்காது
துணைப்பிணம் !

இறுதிப்பயணத்தில்
நெருப்புச்சட்டி ?
மின்சாரத்தகனம் !

புகை வரும்
நெருப்பின்றியும்
பனிமூட்டம் !

கண்கள் இரண்டு அதிகம் பார்
காதுகள் இரண்டு அதிகம் கேள்
நாக்கு ஒன்று குறைவாகப் பேசு !

பூனைகளிடம் பால் காவல்
அரசியல்வாதிகளிடம்
நாடு !

கண்டிக்க வேண்டும்
தவறு செய்தது
அன்பானவரானாலும் !

செவி வழி
சிந்தையில் காயம்
வன்சொல் !

எதையும் சாதிக்க
இனிதே உதவும்
இன்சொல் !


--

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-Jun-15, 4:21 pm)
பார்வை : 201

மேலே