அதெல்லாம் இப்படித்தான்
"பெண் பாவம் பொல்லாதது "
கட்டியமனைவிக்கு பொட்டெனும்
வாங்கிக்குடுக்காத
வெட்டிக் கணவன் விபச்சாரி வீட்டு விருந்தோம்பலில்
வீராப்பாய் பேசுகின்றான்
பெண் பாவம் பொல்லாதது .!
"தர்மம் தலைகாக்கும் "
தண்டிய பணத்தில் வேட்டி சேலை
வாங்கிக்கொடுத்து
வோட்டுபிச்சைகேட்கும் அரசியல்வாதி
மேடையில் கொடை வள்ளலாய் பேசுகின்றான்.
தர்மம் தலை காக்கும் .!
"அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் "
முதியோர் இல்லத்தில் பெற்றவர்க்கு இடம் பெற்றுக்கொடுத்த பட்டதாரி ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் அன்னை தந்தை தான் கடவுளென .
"சான் ஏற முழம் சறுக்கும்"
சாக்கடையில் வேலை செய்பவன்
மட்டும்
சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டிருந்தான்
பழமொழியை .