விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

இந்த முறை ஊரில் இருந்து வரும்போது கொண்டு வந்த பெட்டி மாறிய கதையை பகிர்ந்துக்கலாம் என்றுதான் இந்தப் பகிர்வு.

எப்போது ஊருக்குச் சென்றாலும் திரும்பி வரும்போது சந்தோஷ மனநிலை இருப்பதில்லை என்பதை குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வாழும் எல்லோரும் மறுப்பதில்லை. எனக்கும் எப்போதும் அதே நிலைதான் என்றாலும் இந்த முறை இங்கு... அங்கு... என கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் குடும்பத்துடன் செலவிட்டு விட்டு தனியாக திரும்புவதென்பது மிகப்பெரிய கஷ்டமாக இருந்தது. எப்பவும் கைப்பை போக, லக்கேஜில் எனக்கு உறவினர்களுக்கு என பொருட்கள் கொண்டு வருவேன். இந்த முறை சோகமே உருவாக வரும் நிலை என்பதால் எதுவும் வாங்கவில்லை. மனைவி வற்புறுத்தியும் எதுவும் வாங்க விரும்பவில்லை.

எனவே கைப்பையில் எனக்கும் உறவுகளுக்குமான பொருட்களை எடுத்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு ஐத்தானுடன் வந்து சேர்ந்தேன். உள்ளே நுழைந்ததும் மிஷினில் பையை சோதனை செய்த அதிகாரி உள்ள என்னமோ இருக்கு... திறங்க பாக்கணுமென்றார். மாம்பழம், டிரஸ், இனிப்புக்கள் என்னோட சான்றிதழ்கள் இருக்குன்னு சொன்னாலும் திறக்கச் சொல்லி நின்றார். எனவே திறந்து காண்பிக்க, மின்சாதனம் எதுவும் வச்சிருக்கீங்களா? காட்டுதே... அப்படின்னு மறுபடியும் கேட்டார்... இல்லைங்க இதுதான் இருக்கு என்று சொல்லவும் சரி போங்க என்றார்.

எடை போட்டு நமக்கான பயணச்சீட்டு கொடுக்குமிடத்தில் எடை போட்ட பையன் கையில கொண்டு போறதை விட கொஞ்சம் எடை கூடுதலா இருக்கு நீங்க லக்கேஜ்ல போட்டுடுங்க என்றதும் எப்பவும் போல் சரி என்று சொல்லிவிட்டேன். அது பூட்டியிருப்பதால் சான்றிதழ்களுக்கு பிரச்சினை இல்லை என்ற தைரியத்தில் கொடுத்துவிட்டு ஐத்தானுக்கு கைகாட்டி போகச் சொல்லிவிட்டு இமிக்கிரேஷன் பக்கம் சென்றேன். திருச்செந்தூருக்கு மொட்டை போட்டிருந்ததால் அடையாளம் தெரியலைன்னு திருப்பி விடமாட்டானான்னு ஒரு நப்பாசையுடன் இரவு ஒரு மணிக்கு கிளம்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்க்காக 11.30 முதல் காத்திருந்தேன்.

ஒரு வழியாக ஒரு மணிக்கு விமானம் கிளம்பியது. பின்னர் தூக்கம்தான்... திடீரென விமானப் பணிப்பெண் எல்லோரையும் உசுப்பி விட்டு சாப்பிட கொஞ்சம் இடியப்பம், ஒரு லட்டு, சின்ன பப்ஸ், குருமா மாதிரி கடலை போட்டது கொஞ்சம்... அப்புறம் இமயமலை அடிவாரத்தில் எடுத்த தண்ணீர் என்ற கதையுடன் பெயர் பொறிக்கப்பட்ட, குடிக்கவே முடியாத அலண்ட தண்ணீர் கொடுத்தார். அந்த நேரத்தில் எவன் சாப்பிடுவான்... அதுவும் இடியப்பம்... பெரும்பாலானோர் வாங்கி வச்சிட்டு மீண்டும் தூங்க ஆரம்பிக்க நானும் அப்படியே.

இறங்கியாச்சு... பஸ்ஸில் ஏறி இமிக்கிரேஷன் போனா சந்தையில நிக்கிற மாதிரி கூட்டம்... அதுல நீந்தி எல்லாம் முடிந்து லக்கேஜ் எடுக்கப் போனா... கன்வேயர் பெல்ட்டில் வந்தவற்றை பேர் பார்த்து நிறையப் பேர் எடுத்துக்கிட்டுப் போக... பலர் காத்திருந்தோம்... ஒவ்வொரு ஆளாகப் போக ஆரம்பிக்க... எனக்கு என்னடா இது இன்னும் நம்ம பேக் வரலையே என்ற குழப்பத்துடன் காத்திருந்தேன். கூட்டம் காலி... அப்போதுதான் ஒரு பேக் வந்தது... என்னோட பேக் போல... இருந்தாலும் இது நம்ம பேக் இல்லையே என ஒரு முறை சுத்த விட்டேன்.. பின்னர் எதுவும் வராததால் ஒரே மாதிரி இருக்கவும் மாத்தி எடுத்துக்கிட்டுப் போயிட்டானுங்களோன்னு அந்த பேக்கில் ஒட்டியிருந்த ஏர்போர்ட் பேப்பரில் பேரைச் பார்க்க குருசாமி திவாகர்ன்னு இருந்துச்சு... ஆஹா.... மாத்திக் கொண்டு பொயிட்டான்டான்னு பார்த்தா... பேக்குல திவாகர்ன்னு கொட்டை எழுத்துல எழுதி வச்சிருக்கான் அந்த அறிவாளி.

சான்றிதழ்கள் எல்லாம் இருக்கேன்னு ஒடிப்போயி ஒரு அரபிக்கிட்ட என்னோட பேக் மிஸ்ஸாயிடுச்சுடான்னு சொன்னே... ஒகே... நோ பிராப்ளம்ன்னு சொல்லிட்டு ஒருத்தனைக் காட்டி அவன் இந்தியன் அவனுக்கிட்ட கேளு உதவுவான்னு சொன்னான். உடனே அந்த மலையாளிக்கிட்ட போயிச் சொன்னேன். அவன் அருகிருந்த நம்ம தமிழனிடம் சொல்ல, ஒண்ணும் பயமில்லைங்க... தினம் தினம் இது நடக்கிறதுதான்... தெரியாம மாத்தி எடுத்திருப்பாங்க... வந்துரும்... அந்தா அந்த ஆறாவது பெல்ட் இருக்குல்ல அதுக்குப் பக்கத்துல ஆபீஸ் இருக்கு... அங்க புகார் பண்ணுங்க... என்றார். சான்றிதழ் எல்லாம் இருக்குங்க அதான் பயமா இருக்கு என்றதும் ஒண்ணும் பிரச்சினை இல்லை... அந்தாளோட பேக் இங்கதானே இருக்கு... கண்டிப்பா வருவாங்க... போங்க போயி புகார் பண்ணிட்டுப் போங்க என்றதும் ஒண்ணாம் நம்பர் பெல்ட்டின் அருகில் நின்ற நான் வேகவேகமாக ஆறாம் நம்பர் பெல்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

(மீதிப் பகிர்வு மாலை...)
-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (26-Jun-15, 7:53 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 165

மேலே