தங்கமாரியிடம் சானியா மிர்சா தோல்வி
தப்பே ஒன்று
தாழம்பூ ரெண்டு
என்று ஒற்றைக் கல்லை உயரே போட்டு
தரையில் இருக்கும் கல்லையும் லாவகமாக எடுத்து
கலச்சி கல் விளையாடும்
தங்கமாரியிடமும்
வானம் பார்த்து கண்ணை மூடி
ரைட்டா ரைட்டா என்று
கட்டங்களின் கோடுகளில் கால்படாமல்
பாண்டி ஆட்டம் ஆடும்
செல்வியிடமும்
தாயம் போட்டால் பழம் எடுக்கலாம்
என்று சொல்லிக் கொண்டே
கையில் மந்திரம் வைத்து
தாயம் போடும் ஜானகியிடமும்
எதிராளியின் புளியமுத்து கஜானாக்களை
கண்ணெதிரே களவாடி
தன் பக்க பள்ளங்களையெல்லாம் நிரப்பி
பள்ளாங்குழி ஆட்த்தில் பட்டம் சூட்டும்
முத்துப்பேச்சியிடமும்
தோற்றுதான் போகிறார்கள்
இந்த
சானியா மிர்சாவும்
சாய்னா நெக்வாலும்
ஜூவாலா கட்டாவும்