அந்த ஒரு வார்த்தை

அந்த ஒரு வார்த்தை

நீயென்னை ஏற்றுக்கொண்டதும்
நாம் இணைந்தும்
என்னை இழந்ததும்
என் வாழ்வை
நரகமாக மாற்றுவதற்கு அல்ல

நீ என் சதைகளைத் தாண்டி
சிந்திக்கவே இல்லை

நீண்ட இரவுகளில்
ஓநாய் ஊளையிட்டுக்கொண்டே
இரத்தம் வழிய
சதைகளை குதறிக்கொண்டிருப்பதை
என் உயிர்
வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தது

அதிகாலையில்
மீதமிருந்த குற்றுயிரையும்
பருத்தக் கால்களை கொண்ட மதயானை மிதித்து சென்றது

உடம்பு முழுவதும் நாற்றம்
என் வீடு முழுவதும் கழிப்பறைகள்

வேலிக்கு வெளியே நின்று
அனைவரும் வேடிக்கைப் பார்க்கின்றனர்

கண்களை மூடிக்கொண்டிருந்த
கடவுள்
கடைசிவரை கண்களை திறக்கவே இல்லை

ஒவ்வொரு இரவும்
வெவ்வேறு மிருகங்களின்
உருவம் கொண்டுத் தாக்குகிறாய்

நரக வேதனையிலிருந்து
என்னை நானே மீட்டெடுக்க
வெளியேறுகிறேன்
ஒரு மாலைப்பொழுதில்...

அத்தனையும் தாண்டி வாழ்ந்திருப்பேன்
நான் உன்னை நேசிக்கிறேன்
என்று சொல்லியிருந்தால்...

எழுதியவர் : சூரியகாந்தி (7-Jul-15, 4:33 am)
Tanglish : antha oru vaarthai
பார்வை : 98

மேலே