இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
எல்லாம் போனது என்னை விட்டு,
கையில் இருந்தது உன் இசை மட்டும்தான்.!
அது நம்பிக்கை கொடுத்து - எனை
நடக்க செய்தது எட்டுத்திசைமட்டும்தான்.!
*******************
உன் பாட்டு வருடும் அளவுக்கு..
பாவிமக விரல் எதுவும் வருடவில்லையே.!
இசைக்கு ஈடா..
இதயத்தை யாரும் திருடவில்லையே..!
********************
நேசத்த நினைச்சு..உந்தன்
இசைய பருகுறேன்..!
நெருப்புல விழுந்த..
நெய்யா உருகுறேன்..!
********************
தாய் செத்த விழிநீர இறக்கிவைக்க..
தாங்காத சோகத்த பரப்பி வைக்க..
உன்இசைதான் எனக்கு மடிதந்தது.!
வாழ்கையின் மீது ஒரு பிடிதந்தது.!
********************
உன் இசை ஒரு மாயவிரல்
கண்ணீர் துடைக்கின்றது.! - அது
இசையாத இதயத்தில் கூட
இறைவனைப்படைக்கின்றது..!
*******************
பசியோடு இருந்தபோது செவியிரண்டில்,
இசை ஊற்றி வயிறு வளர்த்தேன்.!
உறவுகள் உறங்கியபின்
உன்னோடுதானே நான் உயிர் கரைத்தேன்.!
******************
மீளமுடியா இராகம் ஒன்றில்,
ஒரு புல்லாங்குழல் துளையாகிறேன்.! - உன்
நகரமுடியா இசைதனிலே..
நான் ஒரு சிலையாகிறேன்.!
***************
இசை ஒரு வலை - நடுவே
விரும்பி மாட்டிக்கொள்கிறேன்.!
இசை ஒரு மாளிகை - உள்ளே
விரும்பி பூட்டிக்கொள்கிறேன்..!
*****************
நான் வாழ்ந்தாலும்..
உன் இசையோடு வாழ்வேன்.!
செத்தாலும்..
செவி கொண்டுபோவேன்.!
**********