நான்கு நண்பர்கள்

நான்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர். அவர்களது பஞ்சுக்கடையில் ஏராளமான எலிகள் சேர்ந்து பஞ்சுப் பொதிகளை நாசமாக்கி விட்டன.

எலிகளை ஒழிப்பதற்காகப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவன் அபிப்பிராயம் சொன்னான். மற்ற மூவரும் அவன் கருத்தை ஆதரித்தனர்.

நால்வருமாகச் சேர்ந்து ஒரு பூனையை வளர்க்க ஆரம்பித்தனர். பூனை வந்ததிலிருந்து எலிகளின் உபத்திரவம் குறைந்தது. இதன் காரணமாக நால்வருக்கும் பூனையின் மேல் மிகுந்த அன்பு ஏற்ப்ட்டு விட்டது. பூனைக்குச் சகலவித உபசாரங்களும் செய்ய ஆரம்பித்தனர்.

அத்துடன் நில்லாமல் அதன் கால்களுக்குத் தண்டை கொலுசு முதலியன்வைகளை அணிவித்து அழகுபடுத்த நினைத்தார்கள்.

இதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பல சிக்கலகள் வந்தன. எனவே வியாபாரிகள் நால்வரும் பூனையின் நான்கு கால்களை ஆளுக்கு ஒன்றாகப் பங்கிட்டுக் கொண்டனர். அவரவர்க்குச் சொந்தமான கால்களில் தங்களுக்கு விருப்பமான அணிகலன்களைப் பூட்டி மகிழ்ந்தனர்.

ஒரு நாள் பூனை நொண்டிக் கொண்டே வந்தது. இதைப் பார்த்த வியாபாரிகளில் ஒருவன் தன் நண்பனிடம், "நண்பா, உனக்குச் சொந்தமான காலில் அடிபட்டு விட்டது. ஜாக்கிரதையாக மருந்து போட்டு குணப்படுத்து" என்றான்.

அந்தக் காலுக்கு உரியவனும் பூனையின் காயத்தைத் துடைத்து எண்ணெய்த் துணியால் அதைச் சுற்றி வைத்தான்.

அன்று இரவு பூனை விளக்குப் பக்கம் போகவே அதன் காலில் சுற்றியிருந்த துணியில் நெருப்புப் பிடித்துக் கொண்டது. தன் காலில் சுற்றப்பட்டிருந்த துணியில் நெருப்புப் பிடுத்துக் கொண்டதும் பூனை மிரண்டு போய்ப் பஞ்சு மூட்டைகளின் மேல் ஓடியது. உடனே பஞ்சு மூட்டைகள் அனைத்திலும் நெருப்பு பிடித்துக் கொண்டது.

இதனால் அந்த பஞ்சு மூட்டைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

வியாபாரிகளில் மற்ற மூவரும் துணி சுற்றியவனைப் பார்த்து, "நீ எண்ணெய்த் துணி சுற்றி வைத்ததால் தான் இந்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நீதான் கொடுக்க வேண்டும்" என்றனர்.

அவனோ தான் வேண்டுமென்றே செய்யவில்லை, எதிர்பாராவிதமாக நடந்து விட்டதற்குத் தன்னை மன்னிக்க வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டான்.

ஆனால் மற்ற மூவரும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. பிரச்சனை மரியாதை ராமனிடம் சென்றது. மூவரும் பூனையின் இவனுக்கென்று பிரித்துக் கொடுக்கப்பட்ட கால்களால் தான் இத்தனை நஷ்டம். ஆகவே இவன் தான் அந்த நஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்று கூறினர்.

விஷயம் முழுவதையும் கேட்ட மரியாதை ராமன் இவ்வாறு தீர்ப்பு சொன்னான் 'பூனையின் ஒரு காலில் அடிபட்டுள்ளது. அந்தக்காலால் நடக்கவோ, ஓடவோ அதனால் முடியாது. அந்த சமயத்தில் அது மற்ற மூன்று கால்களால் தான் ஓடியிருக்க வேண்டும். எனவே உங்கள் மூவருக்கும் சொந்தமான கால்களால் ஓடித்தான் அது நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, நீங்கள் மூவரும் தான் இந்த நாலாமவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினான்.

வேறு வழியில்லாமல் மூவரும் நஷ்டத்தை பகிர்ந்து மீண்டும் கடையை நடத்த துவங்கினர். மரியாதை ராமனின் சமயோசிதமான தீர்ப்பை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர்.

எழுதியவர் : (9-Sep-15, 4:12 pm)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : naanku nanbargal
பார்வை : 1325

மேலே