எத்தனை வருடங்களுக்கு வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பது

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவிருக்கிறதாம்..

எத்தனையோ லட்சம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள்..

கடந்த திமுக ஆட்சியிலும் இப்படித்தான்.. தினமும் ஏதாவது ஜப்பான், கொரியக் கம்பெனி ஆட்கள் அப்போதைய முதல்வர் கலைஞரைச் சந்தித்துப் பொன்னாடை போடுவார்கள், “நேரடியாகவும் மறைமுகமாகவும் 20000 பேருக்கு வேலை” என்று செய்தியில் சொல்வார்கள்.. ஆனால் அதன் பின் அதில் பாதி பேருக்காவது வேலைக் கிடைத்ததா என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை..

இப்போது நடக்கவிருக்கும் மாநாடும் அந்த வகையில் ஒன்று தான்.. வரி விலக்கு, சல்லிசு விலையில் நிலம், மின்சார தாராளம் என அனைத்தையும் கொடுத்து, கெஞ்சி, அவனை இங்கு தொழில் தொடங்க அழைப்போம். அவனோ நமக்குக் கொடுத்த எந்த ஒப்பந்தத்தையும் பின்பற்றாமல் சப்பை மூக்கு ஆட்களை இறக்குமதி செய்து வேலையை முடித்துவிட்டு, வரி விலக்குக் காலம் முடிவடையும் போது, அடுத்த மாநிலத்திற்கோ நாட்டிற்கோ ஓடிவிடுவான்.. வேலைவாய்ப்பும் முழுதாகக் கிடைக்காமல், அந்தத் தொழிலால் நாட்டிற்குப் பயனும் இல்லாமல், அவனுக்குக் காட்டிய சலுகைகளால் நஷ்டம் தான் மிஞ்சும். ஸ்ரீபெரும்புதூர் ரோட்டில் இதற்கு உதாரணமாய்ச் சொல்வதற்கென்றே பல நிறுவனங்கள் உள்ளன..

ஏன் எவனோ ஒரு பெரிய முதலாளிக்குக் காட்டும் சலுகையை இங்கிருக்கும் சிறு முதலாளிகளுக்குக் காட்டக் கூடாது? திருப்பூர், சிவகாசி மாதிரியான ஊர்களின் தொழில்களைப் பெருக்க ஏன் ஒரு மாநாடு, சலுகைகள், விலக்குகள் எல்லாம் அளிக்கக் கூடாது? ஒரு நாட்டின் பொருளாதாரம் பெருக வேண்டுமானால் அந்த நாட்டில் சிறுதொழில்கள் வளர வேண்டும் என்பது அடிப்படை.. ஏனென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் டாலர்களில் பணப்பரிமாற்றம் செய்து தொழில் நடத்தும். உள்ளூர் சிறுதொழில்கள் நம்மூர் ரூபாயில் தொழில் நடத்தும். இதனால் ரூபாய் மதிப்பு உயரும், பொருளாதாரம் முன்னேறும். அந்தந்த ஊரில் அதை சார்ந்த வேலைவாய்ப்புக்கள் பெருகும்.

அந்த சிறு தொழில்கள் சுற்றுப்புறத்தையும் இயற்க்கையையும் பாதிக்காத மாதிரியும் அதே நேரத்தில் முன்னேற்றம் அடைவது மாதிரியும் ஒரு sustainable developmentஐ நோக்கிச் செல்ல என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என அரசும் அதிகாரிகளும் யோசிக்கலாம்..

ஒவ்வொரு ஊருக்கு என்று அதன் புவியியல், மற்றும் வாழ்க்கை முறையைச் சார்ந்து ஒவ்வொரு சிறுதொழிலை ஒதுக்கி அதற்கு மானியம் கொடுத்து உள்ளூர் உற்பத்தியைப் பெருக்கலாம்..

இன்னமும் எத்தனை வருடங்களுக்கு வெளிநாட்டானையே ஆஆஆஆவென வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பது?



_____________________
முகநூலில்:
ராம் குமார்

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (10-Sep-15, 1:06 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 125

மேலே