கடவுளும் கனவு கண்டார்

வசந்த காலத்தை நோக்கி
நீண்டுகொண்டிருந்த கனவில்
இடைமறித்த கடவுள்
சிறப்புரையாற்ற ஆரம்பித்தார் .
கனவென்பது ஆழ்மன
எண்ணங்களின் வெளிப்பாடென்ற
முன்னுரையுடன் தொடங்கினார் .
கடவுளுக்கும் கனவுக்கும்
தொடர்பில்லை என்றார் .
பேய்க் கனவினால் படுக்கை நனைந்ததற்கும்
பேய்களுக்கும்
தொடர்பு இல்லாதது போல் .
கனவுக்கும் வாழ்வுக்கும்
சிறிதும் தொடர்பில்லை என்பதால்
கனவுகளை கனவாகவே பாவிக்கச்சொல்லி
உரையை நிறைவு செய்தார்
கனவில் வந்த கடவுள் .
தொடர்ந்த கனவில்
கனவு கண்டு கொண்டிருந்தார் கடவுள் .
கேட்கும் வரத்தை
பக்தர்களுக்கு கொடுப்பது போல ....
கடவுளின் சிறப்புரை
கனவை பற்றியதா ......
கடவுளைப் பற்றியதா என்ற சந்தேகம்
உங்களை போலவே
எனக்கும் எழுந்தது .