தாய்மையின் துணிவு --கயல்விழி

'மாமோவ்... எங்க இருக்கீங்க...'
தொலைபேசி சிணுங்கியது.
பார்த்ததும் அழைப்பில் மனைவி... மூக்களவில் இருந்த கோபம் அதிகமாகியது தர்மராஜ்க்கு

தர்மராஜ். ஊரில் மரியாதையானவர். பெரும் பணம் படைத்தவர் இல்லை. பாசக்காரர். ஊரில் உள்ளவர்களுடன் வேற்றுமை பாராது சகஜமாக பழகும் இனிய எளிய மனிதர் தான் இந்த தர்மராஜ்.
மனைவி மோகனா. கொஞ்சம் கோபக்காரி. பிடிவாதகுணம் கொண்டவள். ஆயினும் அன்பு செலுத்துவதில் அந்த அன்னை தெரேசாவை மிஞ்சுபவள்.
மகன் கிருஷ்ணன். பார்ப்போர் மனங்களில் பிள்ளைக்கு வரைவிலக்கணம் இவன் என பொறாமை கொள்வர்.
மகள் கனிமொழி. வீட்டின் தேவதை. பெயருக்கு ஏற்றால் போல கனிவானவள்.
எல்லாம் படைத்த அந்த கடவுள் கூட வந்து வாழ ஆசைப்படும் அன்பு உலகம் தான் தர்மராஜின் வீடு.



'ஆசைப்பட்ட எல்லாத்தையும்...' கிருஷ்ணனின் தொலைபேசி அழைத்தது.

"கிருஷ்... அம்மா கால் பண்ணுறாங்கடா..." - நண்பன் குமார் கேட்டான்
"நீயே ஏதாச்சும் சொல்லு மச்சி..." - பதிலளிக்கும் நிலையில் கிருஷ்ணன் இருக்கவில்லை.
"எனக்கு முடியாதுடா... உங்க அம்மா என்னையும் திட்டுவாங்க... எங்க மேல அவங்க வைச்சிருந்த நம்பிக்கையை உடைச்சிட்டம்ல... எப்பிடி அவங்க முகத்தில முழிக்க போறமோ தெரியலை..." குமார் கூறினான்
இரண்டு மூன்று முறை அழைத்தும் யாரும் பதிலளிக்கவில்லை.

அப்பிடி என்னதான் நடந்தது...
கிருஷ் தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேல்படிப்பை தொடர்வதற்கு நகரத்தில் உள்ள கல்லூரியில் சேரவேண்டும் என்பது அவனின் ஆசை. ஆனாலும் தாய் மோகனாவுக்கு மகன் தன்கூடவே அருகில் இருக்க வேண்டும் என்று ஆசை.
"அப்பா... அப்பா... பிலீஸ் அப்பா... அம்மாகிட்ட எடுத்து சொல்லுங்க அப்பா. நான் அங்க போயி படிக்கிறன். நல்ல ஸ்கூல்... நல்ல படிப்பு... அம்மாகிட்ட நீங்க தான் சொல்லி அனுமதி வாங்கித்தாங்கப்பா... " கிருஷ் கெஞ்சினான்.
"சரிடா... உன்னோட ஆசை தான் எங்கட ஆசையும். நான் பார்த்துகிறண்டா..." அவனின் தோளை தட்டிகொடுத்தார்.

ஆனால் மோகனா,
"இல்லை... இல்லை... இல்லை... இங்கயே படிக்கட்டும். எங்கயும் போகத்தேவையில்லை... " பிடித்த பிடியில் நின்றார்.
"ப்ளீஸ் அம்மா... என் செல்ல அம்மா ல.... ப்ளீஸ் மா..." கிருஷும் சேர்ந்து கெஞ்சினான்.
"முடியவே முடியாது... நீ என்கூடவே இருக்கணும்... அங்க போனா அவளவு தான் u.. நீ என் கண்ணுக்கு முன்னாடியே தான் இருக்கணும்..." - அம்மா மோகனா

இருப்பினும் எறும்பு ஊர கல்லும் தேய்வது போல இருவரின் விட முயற்சியில் வெற்றி கொண்டான் கிருஷ்.

கிருஷ் கல்லூரி படிப்பை தொடர்ந்து 8 மாதங்களே கடந்திருந்தது. இன்று நண்பனின் பிறந்த நாள் பார்ட்டி.
"மச்சான்... கொஞ்சம் குடிடா..."
"வேணாம் மச்சி... எனக்கு பழக்கம் இல்லைடா... நான் குடிக்க மாட்டன்..." விலகிக்கொண்டான் கிருஷ்ணன்
"கொஞ்சம் டா மச்சி... இண்டைக்கு மட்டும் தாண்டா... பர்த்டே பாய் ய பாரு... அவனுக்காக சரி கொஞ்சம் ட்ரை பண்ணுடா கிருஷ்.... "

நண்பர்களின் தொல்லை தாங்காமல் கொஞ்சம் குடித்தான். புது பழக்கம் என்பதால் போதையேறியது. அதே நேரம் அம்மாவிடம் இருந்து அழைப்பும் வரவும் அம்மாவிடம் மறைக்கவா முடியும்.
"கிருஷ்... ஏன் ஒரு மாதிரி பேசுறாய்... ஏதும் சுகம் இல்லையா..."
"இல்லையே... ஆமா... ஆமா... ஆ..மா..."
கிருஷின் உளறலில் புரிந்து கொண்டாள் விபரீதத்தினை.
"நீ குடிச்சிருக்கியா... சொல்லுடா... குடிச்சிருக்கியா... " தாய் அழத்தொடங்கினாள்.
"இல்லையே... இல்லை... இல்லை..." தடுமாறிய கிருஷ் தொடர்பினை துண்டித்துக் கொண்டான்.
மோகனா துடித்துப் போனாள்.
"மோகனா... மோகனா... " அழைத்தவாறு வீட்டினுள் நுழைந்த கணவன்
"அட.. இங்க இருக்கிறியா..." என்றவாறு அருகில் சென்றார்.
மனைவியின் முகத்தை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து தான் போனார்.
"என்னாச்சுமா... ஏன் அழுகுறாய்... என்ன நடந்தது... " மனைவியின் தலையை தடவியவாறு கேட்டார்.
பட்டென்று கையை தட்டிவிட்ட மோகனா
"இப்ப சந்தோசம் தானே... இப்ப சந்தோசம் தானே உங்களுக்கு... படிச்சு படிச்சு சொன்னான். கேட்டீங்களா... ஐயோ.. ஐயோ... " தலையில் அடித்துக் கொண்டாள்.
"என்னாச்சுமா... என்ன நடந்திச்சு... நடந்ததை சொல்லுமா முதல்ல..." கலவரப்பட்டார்
"இதுக்கு மேல என்ன நடக்கணும். இண்டைக்கு எண்ட புள்ளை குடிச்சிருக்கான். இதுக்கு காரணம் நீங்கள் தான். அங்க அனுப்ப வேண்டாம் அனுப்ப வேண்டாம் என்று சொன்னான். கேட்டீங்களா... இப்ப சந்தோசம் தானே..."

"மோகனா... என்னசொல்லுற... கிருஷ் குடிச்சிருக்கானா... இருக்காது... ஒருக்காலும் இருக்காது. எண்ட புள்ளை அப்பிடி செய்திருக்க மாட்டான்... எனக்கு அவனை நல்லா தெரியும்..."
"அதுசரி... என்ன உங்க புள்ளையா...? இதுவே உங்க பிள்ளையாய் இருந்தா அனுப்பியிருப்பீங்களா" - வார்த்தைகளை நெருப்பை கக்கினாள் மோகனா.
"அட கடவுளே..." தலையில் அடித்துக்கொண்டு தரையில் இருந்தார் தர்மராஜ்

இதுவரை காலமும் எதை நினைவு படுத்தாமல் வாழ்ந்தாரோ அது... அது... இன்று மோகன வாயில் இருந்து வெளிப்பட்டு விட்டது.
ஆம்... மோகனா ஏற்கனவே திருமணமானவள். கிருஷ் ஒரு மாத கைக்குழந்தையாக இருந்த போது விபத்து ஒன்றில் கணவனை பலி கொடுத்துவிட்டாள். அதன் பின்னர் பெரியவர்களால் கூடி எடுத்த முடிவு தான் தர்மராஜ் - மோகனா வாழ்க்கை.

'இறைவா... என்ன வார்த்தை சொல்லிவிட்டேன்... இதுவரை என்னை தாங்கியவரின் மனதை புண்ணாக்கிவிட்டேனே...' மனதில் துடித்தவள் ராஜ் அருகில் சென்று
"... என்னை மன்னிச்சிடுங்க... ப்ளீஸ்... வாய்தடுமாறி சொல்லிட்டன்..." இருகரம் கூப்பினாள்
மனத்தால் உடைந்தவரிடம் மன்னிப்பு எப்பிடி கிடைக்கும்.
முகத்தை திருப்பிக்கொண்டார். எவ்வளவு கெஞ்சியும் கண்டுகொள்ளவில்லை.

ஏற்கனவே மகனை பற்றி யோசித்து துடித்துக்கொண்டு இருப்பவளுக்கு இப்போ கணவனின் ஆறுதலும் இல்லாதுபோக துடித்துவிட்டாள் மோகனா.

"கனி.. அப்பாவை கொஞ்சம் பார்த்துக்கமா... கோயில் வரைக்கும் போயிட்டு வந்திடுறன்... " என்று மகளிடம் கூறிவிட்டு நடக்க தொடங்கினாள்.

சிந்தனைகள் எல்லாமே ஒன்று கூடி மூளையை குழப்ப என்ன செய்வது அறியாது தன்னை மறந்து கால்கள் நடு வீதியில் நடை போட்டன.
ஏற்கனவே போதையில் வந்த லாரி மிக வேகமாக கட்டுப்பாட்டை மீறி வந்துகொண்டிருந்தது.




'மாமோவ்... எங்க இருக்கீங்க...'
'மாமோவ்... எங்க இருக்கீங்க...'
அம்மா அழைப்பில்....

வைத்தியசாலையினருக்கு எதுவும் புரியவில்லை. மோகனவிடம் இருந்தது இந்த தொலைபேசி மட்டும் தான். அதில் இருந்த தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பார்த்தார்கள். யாரும் பதிலளிக்கவில்லை

அந்த வேளையில் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
"மோகனா அக்கா... வள்ளி பேசுறன். எங்க நிற்கிறீங்க... வீட்ட போனன் நீங்க இல்லை என்று கனி சொன்னாள்..."
வள்ளியிடம் பக்குவமாக நடந்தவற்றை எடுத்து சொன்னார்கள் வைத்தியசாலையில் நின்ற காவல் துறையினர்.
"மோகனா..." செய்தி அறிந்த தர்மராஜ் கத்தினார்.
கிருஷ்க்கும் செய்தி சொல்லிவிட்டு வைத்தியசாலைக்கு விரைந்தனர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி....
ஆம்... அங்கே... அங்கே... வைத்தியசாலை கட்டிலில் சிரித்தபடி அமர்ந்திருந்தாள் மோகனா.
அருகில் சென்றவர் மோகனாவை அள்ளி அனைத்துக் கொண்டார் தர்மராஜ்.
பயந்தே போயிட்டன்மா... என்ன நடந்திச்சு... நீ எப்பிடி இங்க வந்த..."

வீதியில வந்துட்டு இருக்கும் போது ஒருத்தன் குடிச்சிட்டு வண்டியை ஓட்டிட்டு வந்தான். நடு வீதியில நின்ற நான் அவனை கண்டதும் ஒதுங்கிக் கொண்டேன். அவன் அருகில நின்ற மரத்தோட மோதிட்டான். ஒரு நிமிஷம் பயந்திட்டன். ஆனா உடனே எனக்கு கிருஷோட நினைப்பு வர ஒரு தாயாய் மகனை காப்பாத்த நினைச்சேன். எப்பிடியோ உயிருக்கு போராடிட்டு இருந்தவனை இங்க கொண்டுவந்து சேர்த்து ரத்தமும் கொடுத்து காப்பற்றிட்டன். இடையில் கொஞ்சம் மயக்கம் வந்துட்டுது. அந்த நேரத்தில தான் உங்களுக்கு கால் வந்திருக்கு."
தர்மராஜ் மனைவியின் துணிச்சலில் பெருமை கொண்டார்.
கிருஷ் அன்னையின் பாதங்களில் இருந்தான்.
மன்னிச்சிருமா... இனிமேல் இது போல தப்பு பண்ணமாட்டன். இது சத்தியம்... கொஞ்சம் தவறியிருந்தால் என் அம்மாவை இழந்திருப்பான்... "
மண்டியிட்டு விம்மிய மகனை மார்போடு அணைத்துக் கொண்டாள் மோகனா.

எழுதியவர் : கயல்விழி (12-Oct-15, 11:28 am)
பார்வை : 658

மேலே