காதலை சாகடிக்கும் காதலி வினோதன்

அவன் விழி வழி...
கருவிழியின் நாவால்
நீ நவிழ்ந்த காதலால்
கருவுற்றது என் கண்ணும் !
என் நாவில் காதல்
பிரசவிக்க வைத்தாய்
என்னை தாயாக்கி !
காதலைப் பெற்றதால்
பெற்றோர் ஆனோம்
மணமாகும் முன்பே !
வளர்ந்த காதலை
வார்க்கத் துடித்தோம்
அழகிய ஓவியமாய் !
வண்ணமாய்
வானமாய் - மகிழ் வனமாய்
மாறிற்று வாழ்வு !
ஒரே குருதிவகைதான்
சாதி வேறென
சாதி வேர்கள் சூழ்ந்தன !
அவள் விழி வழி...
அரசியல் வாதிகள்
கலாசார காவலர்களாக
உருமாறிக் கொண்டிருந்தனர் !
தளவாடம் கொணர்ந்து
தலை வாங்கி
தண்டவாளம் வீச
தயாராகியது அப்படை !
உயிர் விட வேண்டாம்
காதல் துறப்போம்,
நிதானமாய் சொன்னேன் !
கதறினான் ஏனென,
உடலளவில் தானே பிரிகிறோம்
மனது உனதே என்றேன் !
மற்றொன்றும் சொன்னேன் !
விடாப்படியாக உயிரற்று
போகவா பிறந்தோம் ?
வாழ்வோம் வெவ்வேறாய் !
ஒரு திருந்திய சமூகத்தை
உருவாக்க முற்படுவோம் !
நம் மகவுகளுக்காவது,
சாதி என்றோன்றின்
கால்தடம் தெரியாமல்
வளர்த்து எடுப்போம் !
உன்னை பிரிகிறேன் !
உன் உயிர் பிரியாமலிருக்க
மரணமொத்த வலியோடு !
ஒரு முட்டாள் சமூகத்தின்
கோரப் பிடியில் - நீ
கொலையாவதை
காணச் சகிக்காமல் !
மரண நொடிகளில் கூட
நீ மட்டுமே - விழிகளில்
நிறைந்திருப்பாய்
அதே காதலோடு !
இப்படிக்கு...
சாதி வெறிபிடித்த சமூகத்தில்
காதலன் சாகாதிருக்க
காதலை சாகடிக்கும் காதலி !