நாஞ்சில் நாடன் நாவல்களில் பெண்கள்

நாஞ்சில் நாடன் நாவல்களில் பெண்கள்
முன்னுரை
சமூகப் பின்புலத்திலிருந்து தோற்றம் கொள்ளும் இலக்கியப் படைப்புகள் ஏதோ ஒரு வகையில் சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப இலக்கியங்களில் பாடுபொருள் மாற்றம் அடையும் என்பதை இலக்கிய வரலாறு உணர்த்துகின்றது. சமூக அக்கரையுள்ள படைப்பாளிகள் மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தி படைப்புகளை உருவாக்குகின்றனர். இதில் குறிப்பிடத்;தக்கவர் நாஞ்சில் நாடன்;. இவர் யதார்த்த நாவலாசிரியர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். மண், மண்சார்ந்த மக்கள், மக்களின் வாழ்வியல் போன்ற செய்திகள் இவருடைய புனைவுகளில் காணலாம்.
பெண்ணியம்
பெண்ணியம் என்பது சமூக அக்கரையின் வெளிப்பாடு. பெண்விடுதலை பெண் முன்னேற்றத்தை மையப்படுத்தும். தற்காலத்தில் வாழ்வியலிலும் படைப்பிலக்கியத்திலும் பெண்நிலை பெரிதும் கவனிக்கப்படுகிறது. பாரதிதாசன், பெரியார் போன்றோரின் படைப்புகள் பெண்களின் விடுதலைக்காகக் குரல்கெடுப்பவையாக அமைகின்றது. இன்றைய நிலையில் பெண்களின் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் சென்றிருந்தாலும் சில பெண்கள் சமூகத்தில் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றார்கள். இதன் அடிப்படையில் நாஞ்சில் நாடன் நாவல்களில் வரும் பெண்களின் நிலைகளைப் பற்றிய செய்திகள் பின்வருமாறு விளக்கப்படுகின்;றது.
நாஞ்சில் நாடன் மொத்தம் ஆறு நாவல்கள் எழுதியுள்ளார். இந்நாவல்கள் அனைத்தும் யதார்த்த வகையைச் சார்ந்தவை. அனைத்து நாவல்களிலும் ஆண் பாத்திரங்களையே முதன்மைப்படுத்தியிருந்தாலும் பெண்ணைப்பற்றிய புனைவு இல்லையென்றால் நாவலுக்கு வடிவம் என்பது இல்லாமல் போயிருக்கும். நாவல்களில் ஆண் கதாப்பாத்திரங்களுக்கு வரும் பிரச்சனைகள் பெண்களினால்;; சில சூழ்நிலைகளில். இதனால் ஆண்கள் குற்றவாளியாக்கப்படுகிறார்கள்.
நாஞ்சில் நாடன் கதைக்கு இரண்டு களங்களைத் தேர்வு செய்துள்ளார். ஒன்று கிராமம், மற்றொன்று நகரம். கிராமத்தை விளக்கும் போது கிராமப்பெண்கள் பற்றிய செய்திகளுக்கும், நகரத்தை விளக்கும் போது நகரப்பெண்களைப் பற்றிய செய்திகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. இந்த இரண்டு களங்களுக்கும் தொடர்பு இரயில் பயணங்கள் தான். ஆசிரியரின் நாவல்களில் இரயில் பயணங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இரயில் பயணங்களின் போது பெண்கள் இருப்பு பற்றியும், செயல்கள் பற்றிய செய்திகளும் நாவல்களில் இடம்பெற்றுள்ளது.
நாவல்களில் பெண்களின் புனைவு
‘தலை கீழ் விகிதங்கள்’ என்ற நாவலில் பார்வதி வசதிபடைத்த வீட்டைச் சார்ந்தவள். பார்வதிக்கும், படித்த வேலையில்லா விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த சிவதாணுவுக்கும் திருமணம் நடக்கின்றது. வேலையில்லாத காரணத்தால் வீட்டோடு மாப்பிள்ளை ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. மாமனார் வீட்டில் இருப்பது விருப்பமில்லாத காரணத்தாலும், மாமனாரின் கடையைப் பார்ப்பதற்கு மனமில்லாத காரணத்தாலும் சுயமாக வேலை தேட ஆரம்பிக்கின்றான் சிவதாணு. இந்நிலையில் இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்படுகின்றது. பார்வதி தன் தாய் நிலாப்பிள்ளையின் பேச்சைக் கேட்டு சிவதாணுவுக்கு எதிராக குரல்கெடுக்கவும், அவனுடன் போகவும் மறுக்கின்றாள். சிவதாணுவுக்கு ஒரே ஆதரவு பார்வதியின் தங்கை பவானி மட்டுமே.
விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த படித்த இளைஞனை பணக்கார வீட்டில் மாப்பிள்ளையாக்கிக் கொண்டால் கௌரவமாக இருக்கும் என்று நினைக்கின்றனர். இந்நாவலிலும் அதேபோல் தான். சிவதாணுவை மாப்பிள்ளையாக்கிக் கொண்டால் நம் சொல்படி கேட்டு நடப்பது மட்டுமல்லாமல், தன் மகளையும் கூடவே வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகின்றாள் பார்வதியின் அம்மா நிலாப்பிள்ளை. நடுத்தர வயதுள்ள படித்த இளைஞனின் மனதைப் புரியாத பெண்ணாக நிலாப்பிள்ளையைப் படைத்துள்ளார் ஆசிரியர். தன் மகளின் வாழ்க்கை முக்கியமென்று நினைத்திருந்தால் சிவதாணுவுடன் அனுப்பி வைத்;திருப்பாள் நிலாப்பிள்ளை. சிவதாணுவை அடிமையாக்கவே எண்ணுகின்றாள். இறுதியில் பார்வதி தன் தவறை உணர்ந்து தன் கணவனுடன் செல்கின்றாள்.
பணக்காரன் ஏழையை அடிமையாக்குவது, பெண் ஆணை அடிமையாக்குவது போன்ற செய்திகள் இந்நாவலில் இடம்பெற்றுள்ளது. ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணத்தில் நிலாப்பிள்ளை தனது மகளை தன்னுடன் வைத்திருந்தாலும், பார்வதி தன் கணவனுடனே செல்கின்றாள். ஒரு ஆண் சுயமாக சம்பாதித்தால் மட்டுமே சமூகத்தில் மதிப்பு என்ற கருத்தை இந்நாவல் முன்வைக்கின்றது.
‘என்பிலதனை வெயில் காயும்’ என்ற நாவலில் ஆவுடையம்மாள் பண்ணையார் வீட்டுப்பெண். வில்வண்டி மெத்தையில் அமர்ந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று வருபவள். அவளை நினைத்து மருகும், விலகும் கால்நடையாளராக பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று வருபவன் சுடலையாண்டி. தான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்ததினால் பணக்காரப் பெண்ணாண ஆவுடையம்மாளை திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. சுடலையாண்டி ஆவுடையம்மாளிடம் தன் காதலை வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், இளமைப் பருவத்தில் வரக்கூடிய உணர்ச்சி அவனுக்குள்ளும் இருக்கின்றது. இறுதியில் ஆவுடையம்மாள் பணக்கார வீட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கௌ;கின்றாள். காதல் என்பது கீழ்மக்கள் மேல்மக்களைப் பார்த்து வருவதில்லை. ஒருவேளை ஆவுடையம்மளும் சுடலையாண்டியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் இணைதிருப்பார்கள். ஆவுடையம்மள் பணக்கார வீட்டுப் பெண் என்பதனால் தன் காதலை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம். தன் தகுதியை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றியிருக்கலாம். சுடலையாண்டியை திருமணம் செய்துகொண்டால் அந்தஸ்து குறைந்து விடுமோ என்று கூட நினைத்திருக்கலாம்.
‘மாமிசப்படைப்பு’ என்ற நாவல் வேளாண்மைத் தொழிலையே பின்னணியாக வைத்துப் புனையப்பட்டுள்ளது. இந்நாவலில் ஊர் பண்ணையார் கங்காதரம்பிள்ளை. சாந்தப்பன் கங்காதரம்பிள்ளையின் வேலைக்காரன். கங்காதரம்பிள்ளையின் வசதிக்காக இசக்கியம்மாள் என்ற பெண்ணை சாந்தப்பனுக்கு மனமுடித்து வைக்கின்றார். சாந்தப்பன் வெளியே செல்லும் வேளையில் கங்காதரம்பிள்ளையும் இசக்கியம்மாளும் தவறாக நடந்துகொள்கின்றார்கள். “இசக்கியம்மாள், இரவிப்புதூரில் ஓர் வெள்ளாளனுக்கு வைப்பாட்டியாய் இருந்த ஈழவத்திக்கு மகளாய் பிறந்தாள்” என்ற செய்தி நாவலில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். மேல் மட்டத்தினர் கீழ் மட்டத்தினரை அடிமைப்படுத்துவது, பெண்களைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற செய்திகளை ஆசிரியர் இந்நாவலில் விளக்கியுள்ளார்.
‘மிதவை’ என்ற நாவல் முற்றிலும் வேறுபட்டவை. இதில் முதன்மைக் கதாப்பாத்திரம் சண்முகம். புpழைப்புக்காக மும்பை செல்கின்றான். அங்கு வாடகை வீட்டில் குடியிருந்த சமயத்தில் பக்கத்து குடியிருப்பிலுள்ள முஸ்லீம் அக்காள், பிராமணத்தி அக்காள், அன்னம்மாள் ஆகியோருடன் நட்பு ஏற்படுகின்றது. நாட்கள் செல்லச் செல்ல அன்னம்மையிடம் காதல் ஏற்படுகிறது. இது காதலா காமமா என்று சொல்ல முடியாது. ஆசிரியர் இவர்களின் நட்பைப் பற்றி நாவலில் தெளிவாகக் கூறவில்லை. எனினும் ஒரு இளைஞனுக்கும், வயது வந்த பெண்ணிற்குமுள்ள உறவைப் பற்றிக் குறிப்பிட்டாலும் இவர்களுடைய காதல் மிக குறுகிய நாட்கள்தான். ஆசிரியர் கூறுகின்ற கருத்தை வைத்துப் பார்க்கும் போது காமத்திற்காகவே இருவரும் பழகினார்கள் என்பது தெளிவாகின்றது. இந்நாவலில் வரும் மூன்று பெண்களும் மூன்று மதத்தைச் சேர்ந்தவர்கள். சண்முகத்திடம் பரிவு, பாசம் காட்டும் சராசரிப் பெண்கள். இதில் அன்னம்மையைத் தவிர மற்ற இருவரும் திருமணம் ஆனவர்கள். அன்னம்மைக்குத் திருமணம் ஆகாதக் காரணத்தினால் காம உணர்ச்சிக்கு ஆட்பட்டிருக்கலாம். இவள் தவறான பெண் என்றும் கூற முடியாது ஏனென்றால் யாரிடமும் காட்டாத ஒரு உரிமையை சண்முகத்திடம் மட்டுமே காட்டியுள்ளாள்;
‘எட்டுத்திக்கும் மதயானை’ என்ற நாவலில் ஒரு பெண்ணைப் பற்றிய கதையின் புனைவே முக்கிய வெளிப்பாடாக அமைகின்றது. பூலிங்கம் தான் செய்யாத குற்றத்திற்காக ஊரைவிட்டே ஓடிப்போக வேண்டிய நிலமை. பிழைப்பைத் தேடி அல்ல, உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக. தெய்வநாயகம் பிள்ளையின் மகள் செண்பகம், கல்லூரி இறுதி நாளில் “என்ன பெறப்பட்டாச்சா” என்று பூலிங்கம் கேட்க பிரச்சனைகள் தொடங்குகின்றது. முதலாளித்துவ ஆதிக்கம் இதில் வெளிப்படுகின்றது. புணக்கார வீட்டுப்பெண்ணிடம் கேட்டதனால் வந்த வினை. பூலிங்கம் ஊரை விட்டு ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்க்கின்றான். இரவு நேரம் இரயில் நிலையத்திலேயே படுத்துக்கொள்கின்றான். இந்நேரத்தில் சில ஆண்கள் பெண்களை தவறாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அங்கு அழைத்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியை பூலிங்கம் நேரே பார்க்கின்றான். இக்கதையில் விலைமாதர்களை ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். பெண்கள் தங்கள் வறுமைக்காக தங்களையே விற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
இந்நாவலில் நான்கு விதமான பெண்களை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஊடல் பருமன் கூடியதால் கணவனிடமிருந்து ஒதுக்கப்பட்ட பெண் பாபி, ஆடம்பரமாக செலவு செய்யும் பாபியின் மகள், தன் சுய மரியாதைக்காகவும்,பணபலத்தினாலும், முதலாளித்துவ ஆதிக்கத்தினாலும் தன் பெண்ணென்றும் பாராமல் ஆண்மைக் குறைவு உள்ளவனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துவைத்து , வாழ்க்கையைத் தொலைத்த செண்பகம்.தன் கணவனுக்குத் துரேகம் செய்யும் சுசிலா. இவ்வாறு பெண்களின் நிலையை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுரை
நாட்டில் பலவித குணமுள்ள பெண்கள் காணப்படுகின்றார்கள். குணம் என்பது ஒன்றே. ஆனால் செயல்கள் ஏராளம். ஒருவருடைய செயலின் அடிப்படையில் அவர்களின் குணத்தை அறிய முடியும். அந்த வகையில் இக்கட்டுரையில் தன் சுயநலத்தை விரும்பும் பெண்கள், முதலாலளித்துவ ஆதிக்கத்தினால் அடிமையாகும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆடம்பர வாழ்க்கை வாழும் பெண்கள், விலைமாதர்கள், கட்டாயத்திருமணத்திற்கு ஆட்பட்ட பெண்கள் போன்ற பெண்களைப் பற்றிய செய்திகள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

எழுதியவர் : பெ. பால்முருகன் (30-Oct-15, 11:57 am)
சேர்த்தது : கவி பாலு
பார்வை : 348

புதிய படைப்புகள்

மேலே