அண்ணலும் அவளும்

’வடக்கு வாசல்’ ஆகஸ்ட் 2012 இதழ் தொடங்கி ’கம்பனின் வார்த்தைகள்’ என்ற தலைப்பில் நான் எழுதத் தொடங்கியிருக்கும் பத்தியின் முதல் அத்தியாயம் இது. கம்ப ராமாயணத்தில் நாடக அம்சம் நிறைந்த சில பகுதிகளை எடுத்துக்கொண்டு, முடிந்தவரை கம்பனின் வர்ணிப்புடன் கட்டுரையாகத் தரும் முயற்சி. கவி நுட்பங்களை ஆழமாக எழுதுமளவு எனக்கு வாசிப்பு இல்லை. இது ஓர் அறிமுகமாகமட்டுமே அமையும்.

விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் அவன் தம்பி லட்சுமணனும் பின்னால் வருகிறார்கள். மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள்.

அந்த ஊர் மதில்கள்மீது கொடிகள் பறக்கின்றன. அவை ராமனை நோக்கிக் கை அசைத்து ‘வா, வா’ என்று அழைப்பதுபோல் தோன்றுகிறதாம்.

ராமன் ஏன் மிதிலைக்குள் வரவேண்டும்?

காரணம் இருக்கிறது. ‘மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்’ என்று அந்தக் கொடிகள் சொல்வதாகக் கம்பர் வர்ணிக்கிறார்: குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள். ஆகவே, ராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்!

சீதை அப்பேர்ப்பட்ட அழகியா?

பின்னே? ‘மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை’ என்கிறார் கம்பர். அந்த மன்மதனால்கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம்.

மன்மதன் யோசித்தான், மற்ற வண்ணங்களெல்லாம் சீதையைப் படமாக வரையை போதாது என்று, அமுதத்தை எடுத்தான், அதில் தூரிகையைத் தோய்த்தான், படம் வரைய நினைத்தான்.

ம்ஹூம், அப்பேர்ப்பட்ட அமுதத்தால்கூட அந்தப் பேரழகைப் பதிவு செய்ய முடியவில்லையாம். மன்மதன் திகைத்துப்போய் நிற்கிறான். ‘ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும்!’

இப்படிக் கம்பர் வர்ணித்துக்கொண்டிருக்கும்போதே, ராமரும் லட்சுமணரும் விசுவாமித்திரருடன் மிதிலைக்குள் நுழைந்துவிடுகிறார்கள். பல காட்சிகளைக் கண்டபடி நடக்கிறார்கள்.

அங்கே ஒரு நடன சாலை. அதில் ‘ஐயம் நுண் இடையார்’, அதாவது இடை இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் வரும்படி நுட்பமான இடுப்பைக் கொண்ட பெண்கள் நடனமாடுகிறார்கள்.

இன்னொருபக்கம், சில பெண்கள் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறார்கள், எப்படி? ’மாசு உறு பிறவிபோல் வருவது போவது ஆகி’, தவறு செய்தவர்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பூமியில் பிறப்பதைப்போல, அவர்களுடைய ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆடுகிறதாம். அதைப் பார்த்த ஆண்களின் உள்ளமும் அதோடு சேர்ந்து தடுமாறுகிறதாம்.

வேறொருபக்கம், சில பெண்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள், சில பெண்கள் பூப்பறிக்கிறார்கள், பந்தாடுகிறார்கள், குளிக்கிறார்கள்… ஆனால் இவர்களில் யாரையும் ராமன் நிமிர்ந்து பார்க்கவில்லை. சமர்த்தாக முனிவரின் பின்னே நடந்துகொண்டிருக்கிறான்.

சிறிது நேரத்தில், அவர்கள் அரண்மனையை நெருங்குகிறார்கள். அங்கே கன்னிமாடத்தில் சீதை நிற்கிறாள். அந்தக் காட்சியைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்:

பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்

தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.

சீதையைப் பார்த்த மனிதர்களெல்லாம் ‘அடடா, தேவர்களைப்போல நமக்கும் இமைக்காத விழி கிடைத்தால் இவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே’ என்று ஏங்குகிறார்களாம். அந்தத் தேவர்களோ ‘நமக்கு இரண்டு கண்கள்தானே இருக்கிறது, சீதையைப் பார்க்க இவை போதாதே, இன்னும் ஏழெட்டுக் கண் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று தவிக்கிறார்களாம். (’இமையா நாட்டம் பெற்றிலம் என்றார், இரு கண்ணால் அமையாது என்றார் வானத்தவர்’)

கன்னிமாடத்தில் சீதையின் அருகே பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் சீதையுடைய அழகுக்கு இணையாகமாட்டார்கள். ‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ என்கிறார் கம்பர். நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்ற ‘மின்னல் அரசி’யாம் சீதை!

இன்னும், சீதையின் அழகைக் கண்டு ‘குன்றும், சுவரும், திண் கல்லும், புல்லும்’ உருகுகின்றன, அவள் அணிந்திருக்கிற நகைகளால் சீதைக்கு அழகு இல்லை, சீதையால்தான் அந்த ஆபரணங்களுக்கு அழகு (’அழகெனும் மணியுமோர் அழகு பெற்றவே’), பெண்களே அவளைக் கண்டு காதல் கொள்கிறார்கள் (’மங்கையர்க்கு இனியது ஓர் மருந்து’)… இப்படிக் கம்பர் அடுக்கிக்கொண்டே போகிறார்.

அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:

எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்
கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்

நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.

இந்தக் காட்சி வால்மீகியில் இல்லை. அங்கே ராமன் வில்லை உடைத்தபிறகுதான் சீதையைப் பார்க்கிறான். அதிலிருந்து சற்றே மாறுபட்டு, தமிழுக்காகக் கம்பர் வடித்துத் தந்த அற்புதமான பகுதி இந்தக் ‘காட்சிப் படல’ப் பாடல்கள். ஒவ்வொன்றும் அற்புதமான அழகு கொண்டவை.

’நோக்கு எனும் பாசத்தால் பிணித்து’, கண் பார்வை என்கிற கயிற்றினால் ஒருவரை ஒருவர் கட்டி ஈர்த்துக்கொள்கிறார்கள். ராமன் மனம் சீதையை இழுக்க, சீதையின் மனம் ராமனைத் தன்னருகே இழுக்க… ’இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ என்று முடிக்கிறார் கம்பர்.

என்ன இது? சினிமாவில் வருவதுபோல் முதல் பார்வையிலேயே காதலா?

முதல் பார்வையா? யார் சொன்னது? திருமால் அவதாரம் ராமன், திருமகளின் அவதாரம் சீதை, இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்தவர்கள்தான். இந்தப் பிறவியில் ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கிறார்கள், அதனால், சட்டென்று காதல் பற்றிக்கொள்கிறது. ‘பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ’ என்று உருகுகிறார் கம்பர்.

இதெல்லாம் முனிவர் விசுவாமித்திரருக்குத் தெரியுமா? அவர்பாட்டுக்கு நடக்கிறார். ராமனும் அவருக்குப் பின்னே சென்றுவிடுகிறான்.

சீதை துடித்துப்போகிறாள். அதைச் சொல்லும் கம்பன் வர்ணனை: ‘கண் வழி புகுந்த காதல் நோய், பால் உறு பிரை என எங்கும் பரந்தது.’

பாலில் ஒரு துளி மோரைதான் பிரை ஊற்றுகிறோம். அது பால்முழுவதும் சென்று அதனைத் தயிராக மாற்றிவிடுகிறது அல்லவா? அதுபோல, கண்களின்வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. அவள் துடிதுடித்தாள்.

இதைப் பார்த்த தோழிகள் சீதைக்கு ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள். மலர்ப் படுக்கையில் படுக்கவைக்கிறார்கள், சந்தனம் பூசுகிறார்கள், சாமரம் வீசுகிறார்கள், திருஷ்டி கழிக்கிறார்கள்.

ம்ஹூம், எந்தப் பலனும் இல்லை. சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள். அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!

’என்னை வருத்துவது எது? இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? நிலவைப் போன்ற முகமா? நீண்ட கைகளா? அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’

‘இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’

இங்கே ‘தாழ்ந்த கைகளும்’ என்ற பிரயோகத்தைக் கவனிக்கவேண்டும். அதாவது, நீண்ட கைகள், அதனை ராஜ லட்சணம் என்று சொல்வார்கள்.

என்னதான் ராஜாவானாலும், காதல் வந்துவிட்டால் அவன் நிலைமையும் பரிதாபம்தான். சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.

‘பொருள் எலாம் அவள் பொன்னுருவாயவே’ என்கிறார் கம்பர். ‘பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா’ என்று பாரதி பாடியதுபோல, ராமனுக்கு எதைப் பார்த்தாலும் சீதையின் பொன் வடிவம்மட்டுமே தெரிகிறதாம். அவளையே நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறான்.

திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம். ‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்? என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’

மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான். ‘நல் வழி அல் வழி என் மனம் ஆகுமோ?’… என்னுடைய மனம் எப்போதும் கெட்ட வழியில் போகவே போகாது, ஆகவே, இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல்வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.

ராமன் இப்படிப் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், பொழுது விடிகிறது. விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது. யாராலும் தூக்கக்கூடமுடியாத அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.

அந்த ஓசை, மூன்று உலகங்களில் இருந்த எல்லாருக்கும் கேட்டதாம், இதற்குச் சாட்சி, ராமனின் தந்தை தசரதன்!

ராமன் வில்லை முறித்தபோது, தசரதன் ஏதோ ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறான். திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. ‘என்ன அது?’ என்று குழம்புகிறான்.

பின்னர் ஜனகனின் தூதுவர்கள் அவனை வந்து சந்தித்து விஷயத்தைச் சொன்னபிறகு, தசரதனுக்கு அந்த மர்மம் விளங்குகிறது. ‘வில் இற்ற பேரொலி கொல் அன்று இடித்தது ஈங்கு’ என்று வியப்பாகச் சொல்கிறான்.

ஆனால், எங்கேயோ அயோத்தியில் இருக்கும் தசரதனுக்குக் கேட்ட இந்த ‘வில் முறியும் சத்தம்’, அதே மிதிலை நகரில் இருக்கும் சீதைக்குக் கேட்கவில்லை. காரணம், அவள் ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கிறாள். ஆகவே, அந்த ராமன் வில்லை முறித்த செய்தியும் அவளுக்குத் தெரியவில்லை.

அப்போது, மிதிலை நகரெங்கும் கொண்டாட்டம். ’இவ்வளவு நாளாக ஜனகனின் சிவதனுசை வளைக்கும் ஆண் மகன் யாருமே இல்லையா என்று ஏங்கினோமே, அப்படி ஒரு பெரிய வீரன் வந்துவிட்டான், சீதையின் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். மணப்பெண் சீதையிடம் செய்தியைச் சொல்லவேண்டாமா? ‘மாலை’ என்ற தோழி உற்சாகத்துடன் சீதை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள்.

முன்பு சீதையை ‘மின் அரசு’ என்று வர்ணித்த கம்பர், இப்போது அதே உவமையைச் சற்றே மாற்றிப் பயன்படுத்துகிறார், ’நுடங்கிய மின் என’, துவண்ட மின்னலைப்போலப் படுக்கையில் கிடக்கிறாள் சீதை.

அப்போது, தோழி உள்ளே நுழைகிறாள். நடந்ததை விவரிக்கிறாள்:

மாத்திரை அளவில் தாள் மடுத்து, முன்பயில்
சூத்திரம் இதுவெனத் தோளின் வாங்கினான்,
ஏத்தினர் இமையவர் இழிந்த பூமழை,
வேந்து அவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே!

’இளவரசியே, யாரோ ஒருவன், ராமன் என்று பெயராம், தம்பியோடும் முனிவரோடும் வந்தான், பெரிய சிவ தனுசைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கையில் பிடித்துத் தூக்கினான், ஒரு பக்கத்து முனையைக் காலால் மிதித்தான், ஏற்கெனவே பலமுறை பழகிய ஒரு வில்லைக் கையாள்வதுபோல் சுலபமாக வளைத்தான், அதைப் பார்த்து வியந்த தேவர்கள் பூமாலை தூவிப் பாராட்டினார்கள், மறுகணம், அந்த வில் முறிந்து விழுந்தது, நம் அவையில் உள்ள எல்லாரும் நடுக்கத்துடன் அவனைப் பார்த்தார்கள்!’

சீதைக்கு மகிழ்ச்சி. காரணம், ‘யாரோ ஒருவன், தம்பியோடும் முனிவரோடும் வந்தான்’ என்கிற வர்ணனை, அவள் மனத்தில் உள்ள அந்த ஆணுக்குப் பொருந்திப்போகிறது. வில்லை முறித்தவன் அவன்தானா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனாலும், அவனாகதான் இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது.

முன்பு ராமன் ‘என் மனம் கெட்ட வழியில் போகாது’ என்று யோசித்துத் திருப்தி அடைந்தான் அல்லவா? அதுபோலதான் சீதை அடைந்த மகிழ்ச்சியும். ‘நான் அவனை மனத்தில் நினைத்திருக்கிறேன், உடனே ஒருவன் தோன்றி என்னுடைய சுயம்வர வில்லை முறிக்கிறான், அப்படியானால் இருவரும் ஒருவராகதான் இருக்கவேண்டும்’ என்று திருப்தி அடைகிறாள்.

ராமனுக்கும் அதே போன்ற ஒரு குழப்பம்தான். ‘வில்லை முறித்துவிட்டேன், அதற்காக ஓர் இளவரசியை எனக்குத் திருமணம் செய்து தரப்போகிறார்கள். ஆனால், இந்த இளவரசியும், நான் அன்றைக்குக் கன்னிமாடத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் ஒருவர்தானா? அதை எப்படி உறுதிசெய்துகொள்வது?’

இதற்கான வாய்ப்பு ராமனுக்கோ சீதைக்கோ உடனே கிடைக்கவில்லை. நெடுநேரம் கழித்து, சீதையைத் தசரதன்முன்னால் அழைத்துவந்து அறிமுகப்படுத்தும்போதுதான், அவளும் ராமனும் மறுபடி சந்திக்கிறார்கள்.

ராமன் சீதையை நிமிர்ந்து பார்க்கிறான். குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியடைகிறான். அந்தக் காட்சியை ஒரு மிக அழகான பாடலில் தொகுக்கிறார் கம்பர்:

அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன்னு உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்

சீதையை அங்கே பார்ப்பதற்கு முன்புவரை, ராமனின் மனத்தில் ஒரே தடுமாற்றம், ‘நான் அன்றைக்குப் பார்த்த பெண்ணும், இப்போது என் மனைவியாகப்போகிற இந்தப் பெண்ணும் ஒருவர்தானா? இல்லையா?’ என்று தவிக்கிறான்.

இப்போது, அவளை நேரில் பார்த்தாகிவிட்டது. ‘அவள்தான் இவள்’ என்று ஆனந்தம் அடைகிறான். இங்கே ராமனை இந்திரனுக்கு ஒப்பிடுகிறார் கம்பர்.

இந்திரனுக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்?

பாற்கடலில் அமுதத்தைத் தேடிப் பல காலம் கடைந்தார்கள். அதிலிருந்து அமுதம் எழுந்து வந்தது. அதைக் கண்ட இந்திரன் மகிழ்ந்தான்.

அதுபோல, இன்றைக்குச் சீதை சபையில் எழுந்து நிற்கிறாள். அவளைக் கண்ட ராமனுக்குக் குழப்பம் தீர்ந்தது ஒருபக்கம், இன்னொருபக்கம், அவளைப் பார்த்து உறுதி செய்துகொண்டுவிட்ட காரணத்தால், போன உயிர் திரும்பக் கிடைக்கிறது, அதனால்தான் சீதையைக் ‘கன்னி அமிழ்தம்’ என்கிறார் கம்பர்.

ராமனின் சந்தேகம் தீர்ந்தது, சந்தோஷம். சீதையின் நிலைமை என்ன?

சாதாரணமாகப் பெண்கள் ஆண்களை நிமிர்ந்து பார்ப்பது அந்தக் காலத்தில் வழக்கம் இல்லையே. ஏதாவது தந்திரம்தான் செய்யவேண்டும்.

எய்ய வில் வளைத்ததும், இறுத்ததும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடல் உற்றாள்,
ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும்
கை வளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள்

’ஒருவன் வில்லை வளைத்தான், உடைத்தான்’ என்கிற செய்தி கேட்டதுமே சீதையின் சந்தேகம் பெருமளவு தீர்ந்துவிட்டது. என்றாலும், தன் மனத்தில் உள்ள அவன்தான் இங்கே நிஜத்திலும் இருக்கிறான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அவள் விரும்பினாள். கையில் இருக்கும் வளையல்களைச் சரி செய்வதுபோல், ஓரக்கண்ணால் ராமனைப் பார்த்தாள், ’அவனே இவன்’ என்று மகிழ்ந்தாள்.

அப்புறமென்ன? காதல் நோயால் வாடிக் கிடந்த சீதையின் உடல் மீண்டும் பழையபடி ஆகிறது. ‘ஆரமிழ்து அனைத்தும் ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்’ என்கிறார் கம்பர். ‘அரிய அமுதம் முழுவதையும் தனி ஆளாகக் குடித்துவிட்டவளைப்போலப் பூரித்துப்போனாள்.

இப்படியாக, அன்றைக்குக் கன்னிமாடத்தில் தொடங்கிய பார்வை நாடகம், இங்கே ஓர் ஓரப்பார்வையில் வந்து இனிதே முடிகிறது!

***

என். சொக்கன் …
15 07 2012

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி மூலம்:என (6-Nov-15, 1:33 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : annalum avalum
பார்வை : 176

மேலே