என் செல்லக் கண்மணி
அலைபாயும் மேகக் கூட்டமாய்
விரிந்து கிடக்கும் உன் கூந்தல்...
கவிழ்த்து வைத்த
வெண்பிறையாக தோன்றும் உன் நெற்றி...
அதில் கீற்றாக காட்சியளிக்கும்
சந்தனமும் மெல்லிய சாந்தும்....
மழைத்துளி பட்டால்
உருண்டு ஓடும் சந்தனக் கன்னங்கள்
அழகின் அழகாய் கனி இதழ்..
பார்க்கும் எவரையும் காந்தமாக இழுக்காத
அதே நேரம்
என் மனத்தை கவர்ந்த அழகு இடை....
கத்தரி வெயிலுக்கும் இதமளிக்கும்
நுங்கின் மென்மையான உன் விரல்கள்...
நடந்தால் மண்ணுக்கு வலிக்குமோ
மரத்திற்கு வலிக்குமோ என்று
எதிலும் நோகாமல் மிதிக்கும் பஞ்சு பாதங்கள்....
உன்னில் பொதிந்திருக்கும்
அழகுப் பொக்கிஷம் இவை எல்லாமே
என் உடலின் ஒவ்வொரு அணுவையும்
சிலிர்க்க செய்தாலும்
பார்க்கும் ஒரே பார்வையிலேயே
பல கோடி கதை சொல்லும்--
அன்பு, பாசம், காதல், இரக்கம்,
கருணை,பரிதாபம்,
கோபம், வெறுப்பு என்று
அத்தனை உணர்வுகளையும்
தேக்கி வைத்திருக்கும்
உன் கயல்விழிகள்தான்
என் ஆயுளைக் கூட்டும்
மந்திரக்கோல்...
அதனால் பத்திரமாக பாதுகாத்துக்கொள்
என் செல்லக் கண்மணி.....