புனித மிலாதுன்நபி நல்வாழ்த்துகள்

திருமறை சொல்லும் திகட்டாத அன்பு
திருநபி கூறும் திடமான வாக்கு .
உருவமு மில்லா உலகாளு மல்லா .
கருவினில் காப்பார் கனிந்து .



கனிந்து மனமும் கசிந்து ருகியே
குனிந்து வணங்கி குவித்தே தொழுவோம் .
மனிதம் தழைக்க மருந்தாம் நபிகள்
புனிதம் பொழியும் புவி .



புவியினைக் காக்க புதுநெறி தந்து
செவியுனுள் புக்கச் செழிப்புடன் வாழ்வை
நவின்றிடும் நாளாம் நலந்தனைச் சேர்த்துத்
தவிர்த்திடும் தீமை தனித்து .



தனித்துப் பிறந்தார் தரமாம் நபிகள்
பனிபோல் ' மிலாதுன்நபி' பார்த்திடும் நாளாம்.
முனிவர் தகையவும் முற்றுமா யின்றே
மனிதம் புகுத்தினார் மண் .


மண்ணில் பிறந்தார் மகத்துவ நாயகம்
கண்ணில் நிறுத்தியும் காத்தார் நமைநாளும்
விண்ணில் விடிவெள்ளி விந்தை இவரன்றோ
பண்ணில் வனைவோம் பணிந்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Dec-15, 5:26 pm)
பார்வை : 82

மேலே