இப்படிக்கு -- காதலி

காற்றினில் கரைந்து
காதலாகி வருகிறேன். . . . .
காளையுன் இதயம்
கனிவுடன் வருடுகிறேன் . . .

பாட்டினில் மறைந்து
மெட்டாக மலருகிறேன் . . . .
ஏட்டினில் வரைந்த
கவிதையாகக் கலப்பாயா . . .

தென்றலில் தவழ்ந்துன்
தேகம் தடவுகிறேன் . . . .
தேடிய கண்களின்
தேவை என்ன அறிவாயா . . . .

நேற்று வரை நான் கண்ட
ஊற்று நிறை கனவுகள் கூடிப்
போற்று கின்ற வகையில்
கூற்று ஒன்று அருள்வாயா . . . .

தாளமிடும் பாதம்
தள்ளாடி நடக்கையில்
மேளம் ஒன்று கொட்டி
மேன்மை தன்னைத் தருவாயா . . . .

கோலமிட்ட கைகள்
கொண்டாடத் துடிக்கையில்
ஞாலம் போற்றும் நல்ல
விடியலைக் கொடுப்பாயா . . .

போதி மரம் தந்த
புத்தனும் வியந்திடுவான். . .
தாலி மணம் கண்ட
தாமரை என் முகம் பார்த்து . . . .

இப்படிக்கு காதலி
இனி என்றும் என்னைக் காதலி . . . .








*=* - - - *=* - - *=*

எழுதியவர் : மல்லி மணியன் (29-Dec-15, 11:08 pm)
பார்வை : 147

மேலே