தமிழழகி
அடுக்கு மொழி தொடுத்து
அழகழகாய் தமிழ் பொழிந்து
கவிச்சரமாய்
தொடுத்துவிட்டால்
வானத்து விண்மீனை
வடித்து வந்து கொடியாக்கிய
வண்ணமாய்
ஜொலிக்குமம்மா ....
வாழ்வாங்கு வாழ்ந்த
வள்ளல்களும் புலவர்களும்
தெரிந்தெடுத்த தமிழ் மலரால்
தொடுத்து வைத்த
பாமாலை கேட்டு அன்று
வானம் பொழிந்ததம்மா
பூமியும் விளைந்ததம்மா....
நடமாடும் தெய்வமது
நளின மொழியதனால்
நாவினிக்க ஆராரோ
நவில்கையிலே
பூமியில் பூத்த புது மகவும்
புன்னகை பூக்குமம்மா
மதுரத்தில் மழலையும்
மயங்கி தூங்குமம்மா...
ஏழ்கடலும் அலை அடக்கும்
எரிமலையும் குளிர் சுரக்கும்
எம் தமிழ்அன்னையவள்
எழிலினிலே....
இத்துணை அழகியவள்
இயல் அழகை
எல்லை இல்லா அவள் எழிலை
செந்தேனில் விஷமாக
தீம் பாலில் கள்ளாக
அந்நிய மொழிகளினால்
அசிங்கம் செய்வானேன்
ழகர லகர மொட்டெடுத்து
நறுமலராய் செந்தமிழில்
தேன் சொட்டும்
தமிழ் பெயரை
தித்திக்க அழைக்கையிலே
கூவும் குயிலும் ஒருகணம்
தன் குரல் நிறுத்திக் கேட்குமம்மா...
முத்து முத்தாய் அவள்
முல்லைக்கு தேரளித்த பாரியாய்
வாரிவழங்கும் வண்ணத்தமிழில்
அழகழகாய் பெயரிருக்க
அடுத்தவரிடம் கடன்வாங்கி
வரம் வாங்கி ஈந்த வைரத்தை
வாயார அழைப்பானேன்...
தன்மானம் பேசும்
தமிழ் மகள் மகவுகள் நாம்
தமிழறியா தேசத்திலும்
மார்தட்டி தலைநிமிர்த்த
தாயவள் ஈந்த தமிழ்
நாமம் போதுமம்மா.....