என்ன ஆச்சு ஏதாச்சு எப்படிங்க இப்படியாச்சு - - - ஒரு பாமரத் தமிழனின் பாமரச் சிந்தனைகள் -- - சக்கரைவாசன்
என்ன ஆச்சு ! ஏதாச்சு ! எப்படிங்க இப்படியாச்சு !! ( பாமரத் தமிழனின் பாமரச் சிந்தனைகள் )
******************************************************************************************************************************************
மாடுகட்டி போரடிச்ச களத்துமேட்டு செய்கள் எல்லாம்
வீடுகட்டி நாறடிக்கும் அடுக்குமாடி குடில் ஆச்சு !
கூடுகட்டி இனம்பெருக்கும் குருவிவகைக் கூட்டமெலாம்
நாடித்தேடி மரங்களின்றி வீட்டுக்குள்ளே பூந்துரிச்சு !
காடுவெட்டி கழனிகண்ட வெள்ளாமைப் பெரியோர்கள் -- கடன்
ஈடுகட்ட முடியாது தற்கொலையே முடிவாச்சு !
பாடுபட்டு உழைத்திட்ட நம் நாட்டு மனிதவளம்
கிட்டிவரும் காசுக்காய் சாப்ட்வேரில் அடங்கியாச்சு !
நடைகட்டி காததூரம் கடந்திருந்த மானுடமோ
கடைகண்ணி போவதற்கே வாகனத்தில் ஏறியாச்சு !
சீறியெழும் கலை ஆன சிலம்பாட்டம் நின்னுபோயி
சீரழிக்கும் சீட்டுக்கட்டு சூதாட்டம் பெருகிடுச்சு !
கணக்கிட்டு செலவிட்ட நம்மவரின் குடும்பங்கள்
கனவு எனும் பகட்டாலே நல்லாவே கவுந்து போச்சு !
தீர்த்தமாட சேத்திரங்கள் போயிவந்த மனித இனம்
தீர்த்தமிடும் டாஸ்மாக்கே கதியென்று நின்னாச்சு !
வீடு கெட்டுப் போகாது காத்துவந்த சாரங்கள்
கேடுகெட்ட செயலாலே முழுசாவே அழிஞ்சிருச்சு !
தொட்டிகட்டி பிள்ளையினை கொஞ்சுகிற காட்சிபோயி -- சினிமாவில்
அட்டிக்கட்டி எச்சியிடும் ' இச்' சுக்கள் மிச்சமாச்சு !
எட்டுக்கட்டும் எட்டுக்கட்டை எசப்பாட்டு மறைஞ்சுபோயி
மெட்டுக்கிட்ட குத்துவகை பாட்டதுவும் வந்திருச்சு !
புதினங்கள் ஏகமாக மனிதமனம் மாறிப்போயி
புத்தம்புது செல்போன்கள் சிறுவர்கள் கையிலாச்சு
உண்பதுக்கு சோறு இல்லே அண்டர்வேர்க்கே துணி இல்லே
கண்டதை பாத்துவிட இண்டர்நெட்டே துணையாச்சு !
என்ன ஆச்சு ஏதாச்சு எப்படிங்க இப்படியாச்சு
முந்தாநாள் இருந்ததெல்லாம் திரும்பவே திரும்பாதோ !!
(பாமரத் தமிழனின் பாமரத் தமிழில் பாமரச் சிந்தனைகள் )