ஞானக்குழந்தை சுகபிரம்ம ரிஷி

மகாபாரதம் தந்த வியாசரின் புத்திரர் சுகபிரம்மர் பிறந்ததில் இருந்து தந்தையை விட்டுப் பிரிந்ததில்லை. ஒருநாள், திடீரென காட்டுக்குள் ஓட ஆரம்பித்தார். பின்னால் ஓடிய வியாசர் "மகனே! மகனே' என கூவி அழைத்தார். உடனே அங்கிருந்த மரங்களெல்லாம் "என்ன என்ன' என்று கேட்டதாம். அதாவது சுகபிரம்மர் வேறு, தாங்கள் வேறு அல்ல என்று காட்டிக் கொண்டன.

மரங்கள் மட்டுமல்ல, அங்கிருந்த பறவைகள், விலங்குகள், மலைகள், நதிகளும் "என்ன என்ன' என்றதாம்.
சுகப்பிரம்மரும் தாங்களும் ஒன்றே என்ற மனநிலையை கொண் டிருந்தன.

அதனால், அவரது பிரதிநிதியாக அவை பதிலளித்தன. இந்த உலகிலுள்ள "எல்லாமே அவர்' என்ற வகையில் அவர் மேம்பட்ட நிலையில் இருந்தார். "சர்வபூத ஹ்ருதயர்' என்று அவரை அழைத்தனர்.

வியாசர், பஞ்சபூதங்களைப் போன்ற வலிமையான மனமுள்ள புதல்வனைத் தமக்கு அருள வேண்டுமென பரமேஸ்வரரைக் குறித்துக் கடும் தவம் செய்து வரம் பெற்றார்..

அக்னியைத் தோற்றுவிக்க இரண்டு வன்னிமரக் குச்சிகளை எடுத்து உரசின வேளையில் காந்தர்வ மங்கை ஒருத்தி அவரருகிலே கிளிவடிவிலே வந்தாள். கிளியை நோக்கிய வண்ணம் வியாசர் இருந்ததால் அந்த ஒளிப்பொறி கிளி முகத்துடன் கூடிய குழந்தையாயிற்று.

வியாசரின் குழந்தையாகப் பிறந்த அக்குழந்தையே சுகர். தெய்வ அருள் பெற்ற அக்குழந்தையை கங்கா தேவி வாரி அணைத்து தன் புனித நீரால், நீராட்டி மகிழ்ந்தாள்.

ஞானக்குழந்தையாக அனைத்தையும் அறிந்த தெளிவுடன் தேஜஸுடன் வளர்ந்து வந்த சுகருக்கு உரிய வயது வந்ததும் பரமேஸ்வரர் உமையுடன் வந்து உபநயனம் செய்வித்தனர்.

பால பிரம்மச்சாரிக்கு வேண்டிய தண்டமும் மான் தோலும் வான் வெளியிலிருந்து அவரருகே வந்து விழுந்தன.

சுகஹா என்னும் வடமொழி சொல்லுக்கு கிளி என்று பொருள்
------------------------------------------------------------------------------------

எவரும் கற்றுத்தரவில்லை என்றாலும் இயல்பாகவே வேத வேதாங்கங்களைச் சுகப்பிரம்மரிஷி அறிந்திருந்தார்.

எதையும் குருமுகமாக அறிய வேண்டும் என்ற நியதிப்படி வேதவியாசருடைய தவப்புதல்வர், பரகஸ்பதியின் சீடனானார்.

கற்க வேண்டியது அனைத்தையும் கற்றார். மிகச் சிறந்த ஞானமும் அடக்கமும் பெற்றிருந்த போதிலும் சுகர், தம்மை ஞானமில்லாத ஒருவராகவே நினைத்துக் கொண்டிருந்தார்.

வியாசரின் அறிவுரையை ஏற்று, சுகர் நடைப்பயணமாகச் சென்று மிதிலையை அடைந்து ஜனக மகாராஜாவிடம் சுகர் தம் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டார்.

மனம் அலைபாயாத ஞானத்தால் நிறைந்த சுகருக்கு தான் கற்றுத்தர வேண்டியது எதுவுமில்லை என ராஜரிஷியான ஜனகர் உணர்ந்தார்.

ஆசைகளிலிருந்து விடுபட்டு பொன், பெண், மண் எந்த இச்சையும் இல்லாத நிலை பரிபூரண ஞானநிலை. மோக்ஷத்திற்கு உரிய நிலை.” என்று ஜனக மகாராஜா கூறியதும் சுகர் தன்னிலை உணர்ந்தார்.

தந்தையிடம் வந்து விடை பெற்றுக் கொண்டு வானத்தில் பறந்து பறந்து, மலைகளைக் கடந்து உயரே உயரே சென்று பிரம்மத்துடன் கலந்தார்.

வியாசர் மகாபாரதத்தை சுகருக்கு உபதேசித்த பிறகே தம் சிஷ்யர்களான வைசம்பாயனர் போன்றோருக்கு உபதேசித்தார். பஞ்சபூதங்களைப் போன்ற மன உறுதி படைத்த சுகரின் புகழ் என்றும் நிலைத்ததாகும்

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (25-Jan-16, 10:16 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 89

மேலே