கொஞ்சம் ராட்சஸிகளும் நிறைய தேவதைகளும் - கட்டுரை- கவிஜி

பெண் என்பவளின்... மனதுக்குள்தான்..எத்தனை எத்தனை ஜன்னல்கள்.. ஆனால்.. பெரும்பாலும் அவைகள் அடைத்தே கிடைக்கின்றன...
பெண்ணை பற்றி எழுதுங்கள் என்று எனக்கு ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை போகிற போக்கில் தந்து விட்டு போன என் தோழி... 'மித்து'வுக்கு முதலில்...என் கவிதை ஒன்றை எழுதாமலே பரிசளிக்கிறேன்.... அது பெண் பற்றிய கவிதை.. அது மென்மையின் சாரல் கொண்ட... பெருங்காட்டு தனிமை.... அவள்... நனையக் கூடும்.... நனையட்டும்....தேவதைகளில்...தேவதை கவனிக்கக் கூடும்....
காலத்தின் மறுபரிசீலனை எப்போதும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.... அதில் பெண் என்பவள்.. பெரிதினும் பெரியவள்......சிரிதினும் சிறியவள்....வானங்களால் விரிபவள்.... அதே நேரம் புள்ளிகளால் குவிபவள்...புதிர்களாலும்.. புன்னகைகளாலும்.. தங்களை மூடியே வைத்திருப்பவர்கள்தான் பெண்கள்.. அவர்களின் தீரா உலகினில் நான் நிறைய கண்டடைந்திருக்கிறேன்... புனைவுகளால் ஒரு போதும் பெண்களை பூர்த்தி செய்து விடவே முடியாது.... அதற்கு புதிர் தேவைப்படுகிறது.... பூக்கள் வீசப்பட வேண்டும்...கனவுகளை அள்ளிக் கொட்டிய போதிலும் அவர்கள் அழக் கூடும்.. அது வலிகளின் திறவு.....புரிந்தவர்கள் திறக்கிறார்கள்.... உணர்ந்தவர்கள் பூஜிக்கிறார்கள்...ஆம்.. என் உலகம் பெண்களுடனான தொடர்பிலேயேதான் இருக்கிறது.....அது தீர்க்க சிந்தனையின் சிலிர்ப்பான உறவுகள்...
எனக்கு மிக அருகாமையில்....எனக்கான பெண்கள் கூட்டம் எப்போதுமே இருக்கிறது.. அல்லது அவர்களை சுற்றும் ஒரு ரசனை என்னிடம் இருக்கிறது.. எப்படி எடுத்துக் கொண்டாலும்.. ஒரு புள்ளியில்.. நான் அவர்களை கவனித்தே இருக்கிறேன்... அல்லது கவனிக்கப் பட்டே இருக்கிறேன்.... கவனிப்பதும் கவனிக்கப் படுவதுமே... முதல் நிலை ஆண் பெண் உறவில்... நிலை கடந்த நிலைக்கு செல்ல.. நிலை மாறுவது நிலையாமை அல்ல. நிலைப்பாடு. எப்படியாவது... சேர்த்துக் கொள்ளும் கரங்களை கொண்டவர்கள் அவர்கள்...அவர்களால் நான் விரும்பவும்.... வெறுக்கவுமான நிகழ்வு நடந்து கொண்டேதானிருக்கிறது...பேய் பிடித்ததை போலது அவர்களின் காதல்...அன்பு..... பாசம்...அது சொர்க்கங்களையும்.. நரகங்களையும்.. மாற்றி மாற்றி செய்கிறது... அற்புதங்களின் வாயிலாக.. பசியாற்றி விட்டு மறைந்து விடும் மாயங்களின் திறவுகள்.. அல்லது பூட்டுகள்...
சொல்லாத சொற்களின் சாயல்களை எனக்கு தந்து விட்டு எழுத சொல்லும்... பெண்களும் உண்டு... என்னைக் கடந்த பின்னும்.. என்னை கடக்காமல் செய்த பெண்களும் உண்டு... அன்பாலும்.. முத்தங்களாலும் நனைத்த பெண்களும் உண்டு....எனக்காகவே எல்லாம் துறந்த பெண்களும் உண்டு... என்னை முதுகில் குத்திய பெண்கள் சிலரும் உண்டு..... ஆனாலும் அவர்களின் மனதுக்குள் என் சிம்மாசனம்..... ஒரு நதியைப் போல.. சல சலத்துக் கொண்டேயிருப்பதில்தான்..... நான் பெண்களை ஆச்சரியத்துடனும் அழகியலுடனும் பார்க்கிறேன்.... நான் ஒருபோதும் பெண்களை வெறுப்பதே இல்லை... மாறாக ஆழமாக கவனிக்கிறேன்.... உற்று நோக்குகிறேன்....... அவர்களுக்குள் ஒரு குழந்தையைப் போல நுழைந்து விடுகிறேன்.... என் தர்க்கங்களை ஒருபோதும் அவர்கள் மேல் சுமத்துவதில்லை.... அதே சமயம்... அவர்களின் வெளிப்பூச்சுகளில் நான் மயங்கிடுவதும் இல்லை.......அவர்களின் இருட்டுக்குள் நானும் வெளிச்சமின்றி உலவுகிறேன்.. அவர்களின் தூக்கத்தின் முழுமையை அருகில் அமர்ந்து வெறிக்க கவனிக்கிறேன்.. அது தீண்ட தீண்ட தகும் கனவுகளை கொண்டவை.. நிறம் பூசிக் கொண்டே திரியும் வாசல்களை அவர்கள் பார்த்து பார்த்து பராமரிக்கிறார்கள்......அந்த வாசலெங்கும்.... என் பாதங்களை...மயிலிறகால் மட்டுமே செய்கிறேன்.... மௌனித்து புன்னகைக்கிறார்கள்...... என் நேசப் பெண்கள்...அல்லது நேசம் பிடித்த பெண்கள்...
பத்து வயதில்... பாசாகி விட்டோம் என்று கன்னத்தில் பதிந்து விட்ட கிள்ளலை 20 வருடங்களுக்கு பிறகும்... உணர்கிறேன்.. அவள் ஒரு கட்டத்தில்... 'நன்' ஆகிப் போனாள்.. பெரிதாக அலட்டிக் கொள்ளாத, எந்த விளையாட்டுகளிலும் கலந்து கொள்ளாத அவள்.. இன்னமும்.. என் பால்ய கால நினைவுகளில்..தேவதையாகவே இருக்கிறாள்.... நினைவுகளுக்கு வயதாவதே இல்லை... அவள் இன்னும் சிறுமியாகவே கிராப் வெட்டிக் கொண்டு... என் அம்மாவிடம் ரசச்சோறு கேட்டு, வாய் திறக்கிறாள்...... நான் மண்டை உடைந்து ரத்தத்தில் நனைகையில், கத்தி கூச்சலிட்டு ஓடிச்சென்று வாத்தியாரை அழைத்து வந்து என்னை காப்பாற்றிய ஒரு தேவ தரிசனமாகவே இருக்கிறாள்......நான் அவளுடன் அவ்வளவாக மொழி கொண்டு பேசியதே இல்லை.... நான் தினமும் கூறும் கதைக்கு ஒரு வட்டம், அதன் பிறகு ஒரு வட்டம்.. என ஒரு நான்கடுக்கு வட்டம் அமர்ந்திருக்கும்..... அவள் மட்டும் வட்டத்தில் இல்லாமல் பள்ளி வளாக கொய்யா மரத்தினடியில்.. ஒரு பட்டாம்பூச்சியைப் போல பட்டும் படாமல் அமர்ந்திருப்பாள்...காட்சியைக் கலைத்து போட்டு மீண்டும் கூட்டும் ஒரு தருணத்தில் தெரிய வந்தது அவள் 'நன்' ஆன விஷயம்.. என்ன சொல்ல.... ஏன் எப்படி..எதற்கு.. ஒன்றும் புரியவில்லை... அல்லது நான் புரிய முற்படவில்லை.. அவள் வெளியில் அவள் ஓடத் துவங்கி இருக்கிறாள்.... அந்தப் பெண் மன வானில்... எத்தனை தூரமோ நட்சத்திரம்... தெரியாததாலே உளவியலாக இருக்கிறது.... தெரிவதாலே பிரிவாகி நிற்கிறது...ஆகட்டும் என .. நான் கடக்கவில்லை.. கவனிக்கிறேன், இன்னும்... அவள் பெயர் ஜெனிபர்...
நினைவுக் கதம்பத்தில் மேல் எழும்பிக் கொண்டேயிருப்பதில்...... இந்தப் பெண்களைப் போல ஒரு நகருதல் எங்கும் எதிலும் இல்லை என்றே கருதுகிறேன் ... எனக்காக 12வது பரிட்சையைக் கூட துறக்க தயாராக இருந்த மல்லிகாவை நினைக்கும் போதெல்லாம் கனம் செய்கிறேன்.....இரு கைகளையும்... விரித்து... என்னை ஒப்புக் கொடுக்கிறேன்... அங்கு காலம் கடந்த ஒரு நேசம் இருக்கிறது.....எந்த சிறகுக்குள்ளும் சிக்காமல் அன்பை பொழிய அவளால் முடிந்தது....அன்பால் நெய்யப் பட்டவள் அவள்... என் பதின் பருவத்து... காடுகளின் உயரம் தொட்டவள்...அவள் திறந்து வைத்திருந்த நட்சத்திர தூவல்களில் தூதுக்களாகி இருக்கிறது, மலர்களின் ததும்பல்... மௌனங்களை ஒளி ஆண்டுகளாய் கடத்திக் கொண்டே இருக்கும் அவளின் உணரல்கள்... இன்னும் எனக்கு அதிர்வுகள்... அவள் கொண்டாடப் பட வேண்டியவள்... நான் இன்னும் கூட காதலிக்கிறேன்.....இந்த மூக்குத்திக் காரியை....
அன்பைக் கொடுக்க முடிவெடுத்த பின் பெண்கள் நாணம் கொள்வதில்லை...... உடைக்க முடிவெடுத்த பின்..... அவர்களின் உடல் பற்றிய அக்கறை அவர்களிடம் இல்லை.. ஆனால் முடிவெடுப்பதில் சூட்சுமங்கள் செய்கிறார்கள் ....அவர்களன்றி தெரியாத தூரத்தில் அவர்களை வைத்தே யோசிக்கிறார்கள்....வேண்டுமானால் தியாகம் செய்யவும் தயங்குவதில்லை.... சிறு சுயநலம் கொண்டு திட்டமிடுவதிலும் பெண்கள் வல்லமை வாய்ந்தவர்கள்...தியாகத்துக்குள் நிற்பவர்கள் கடவுளை சுமக்கிறார்கள்... ராட்சஸம் செய்பவர்கள்... திட்டமிட்டு கழுத்தறுக்கிறார்கள்....அவர்கள் அறுத்து எறியும்... இடமெல்லாம்... கூட.. வர்ண ஜாலங்கள் நிகழ்வதில்தான்... அவர்கள்.... அப்படியும் காதலிக்கப் படுகிறார்கள்... ஒருபோதும் கலைக்கவே முடியாத கனவுகளை பெண்களே காண்கிறார்கள்...அது கனவாக இருப்பினும்... அப்படியே வைப்பதில் ஆளுமை கொண்டவர்கள்.....கலைவதாக கூறுவதெல்லாம்... கனவு.. அவ்வளவே.....நிலை ஒன்றில் நின்ற பெண்ணும் அன்பையே தருகிறாள்...... இரண்டு நிலை கொண்ட பெண்ணும் அன்பையே தருகிறாள்...... இந்தப் புள்ளியில்தான்.. நீங்கள் செய்த கற்பனை அவர்களை உடைத்து போடுகிறது.. புரியாமைச் சிக்கல்கள் மெல்ல தவழுகிறது.. புரிந்த முட்கள் மெல்ல புலம்புகிறது... அன்பின் ஆழம்... காயம்... அமிர்த சூனியம் விஷம்.. அது பெண்களுக்கும் பொருந்தும்...பெண்களுக்கே பொருந்தும்....
தலை வலிக்குதென்று கூறிய நாளில்.. இரவு 1 மணிக்கு மேல், வீதியில் கயிற்றுக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் என் நெற்றியில் தைலத்தோடு பதிந்த மாலினியின் ரகசிய கைகளில் இரவு நேர கடவுளின் உலாவலைக் காண முடிந்ததே.. அதனை இன்றும்.... சுமந்து கொண்டிருக்கிறேன், ஆழ்மனப் பிளவுக்குள்.... அர்த்த ராத்திரி அலைக் கற்றையாக..... இப்போதும்.. ஒரு பெண் தன்னை முந்திக் கொண்டு போனால் காரணமே இல்லாமல் வேகமெடுத்து அவளை முந்தி விட்டு பின் மெதுவாக போகும் மனநிலைக்கு என்னை தள்ளாத உயிர்ப்பு மேற் கூறிய நிகழ்வுக்கு உண்டு.. அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்......அவர்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்....அவர்களின் மறுபக்கம்...வண்ணங்களாலும்.... வானங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன...அவர்களின் ஆசைகள், பேராசைகள்.. புத்தனையும் தாலி கட்ட வைத்து விடும் பித்து மனங்கள்........ அவர்களின் தீவிரங்கள்.. சரியாக இருப்பதனால் எத்தனையோ மடிகளில் நான் தூங்கியிருக்கிறேன்.. உண்மைக்கு சரி நிகர் நிற்கையில் அவிழ்த்து விட்டு அணைத்தவளும் உண்டு... அவள்... பேரன்பின் சுவாசத்தில்... என்னை கொண்டாடியவள்... என் கனவுகளுக்கு.... கொஞ்சம் கூட பொய் காட்டாமல் நேர்மையை விட்டெறிந்தவள்...... அவள் தர மட்டுமே விரும்பினாள்.. மாறாக எடுத்துக் கொள்ள கூட விரும்பாத அன்புக்காரி...
ஆசையாக வளர்ந்த நகங்களை உடைத்து விட்டு சிரிக்கையில்.... என்னை ஒரு குழந்தையைப் போல.. 'தாடிக்காரன் எப்பவும் இப்டிதான்.." என்று கொஞ்சி விட்டு நான் கடந்த பிறகு வலியில் அழும் சாவித்ரியை எப்படி மறக்க முடியும்.....? கல்லூரி நாட்களில் என் பித்து மனதுக்குள் ஒரு நீரோடையாய் இருந்தவள்...... அவள், நான் பிடிக்க வேண்டும் என்றே மீன்களை கொண்டு வந்து நீந்த விட்டவள்..... நான் பிடித்து கரையில் வீசி எறிந்த மீன்களை ஒரு போதும் அவள் அப்படியே மரணிக்க விட்டதில்லை... அவளின் அருகாமையில்.. தேவதைகள் இல்லாமல் எப்படி சமைக்கப் பட்டிருக்கும் இந்த பூமி...ஒரு விதமான பூக்களால் ஆனவள் போலதான்.. அவள் இருந்தாள்.... எப்போதும் தலை சாய்த்து புன்னகைத்தே கிடந்தவள்... ஒருபோதும் என்னை அழ விட்டதே இல்லை.... பெண்களின் குணத்தில்.. மிக நுட்பமான இடம் இது....நான் கண்ட வரையில் பெரும்பாலும் பெண்கள்.. ஆண்களை அழ விடுவதில்லை.....மாறாக மார்பில் முகம் புதைத்து அழுது விடுகிறார்கள்...அவள் அழுதிருக்கிறாள்...
அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு முடியும் தருணத்தில் என் பாலைவனத்தில் மிதந்த தென்றல்...ரேகா... அவள் ஒரு முறை கூட என்னை மறுத்து பேசியதே இல்லை.. அவளின் உலகத்தில்.. நான் ஒரு மிகப் பெரிய கவிஞன்...இப்போது நினைத்தால் சிரிப்பு வரும்.. என் எல்லாக் கவிதைகளையும்(?) படித்து விட்டு... அவளின் வகுப்புக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டேயிருப்பாள். நானும் மதியம்.. இடைவேளை..மற்றும் எப்போது நேரம் கிடைத்தாலும் ஓடிச்சென்று அந்த ஜன்னலின் வெளிப்பக்கம் நின்று விடுவேன்.. எங்களை கேலி செய்யாத நண்பர்களே கிடையாது..... அவளின் உலகம் மிகச் சிறியது என்று கூறி இருக்கிறாள்.. அங்கே நான் மட்டுமே உலவுவதாக அவள் மௌனித்துக் கிடந்ததை நான் அறிவேன்... அறிவதில்... ஆகாயமும்... அழகாகும்... அந்தி மாலை.. அவளோடு... கொஞ்சம் தேநீர்...குதிக்கும்.. வயதின் தளும்பல்.... ஒரு மென்சோகக்காரி அவள்...நான் வந்து விடுவேன் என்பதற்காகவே எத்தனையோ நாட்கள் மதியம் சாப்பிடாமல் காத்திருப்பதாக அவளின் தோழி ஒருத்தி எனை அழைத்து திட்டியபோது ரேகாவின்...அருகாமையை இன்னும் இன்னும் நேசித்தேன்.. அது.. நீண்டு கொண்டே செல்லும்... ஜீவநதி.. நதிகளின் ஆழம் நிறமற்ற தெளிவாய் இருப்பதை, அவளே....தன் புன்னைகையால்...வீசி நிற்பாள்....... அவளோடு நானிருந்த அந்த 6 மாதங்கள்.. அற்புதங்களின் நிகழ்வுகளால் செதுக்கப்பட்ட ஓஷோவின் வாக்குகள்.... வலது பக்க நேர் பிடிக்கும் என்பேன்... மறுநாள்.. அப்படியே வந்து நிற்பாள்...நீ கொஞ்சம் சார்ட் இல்ல...என்ற நாளின் அடுத்த நாள்..ஹீல்சில் வந்து நிற்பாள்... இனம் புரியாத... ஒரு வகை பனித் துளிகளை அவள் சொட்டிக் கொண்டேயிருந்தாள்....அவளோடு நானும் தென்றலாகிப் போன நாட்களின் வசம்....அவளால் செய்யப்பட்ட, நெய்யப்பட்ட திரையால்... நான் பாதுகாக்கப்பட்டேன்... போதும் என்ற காலத்தின் நிரம்புதலை அவளிடத்தில் நான் கண்டடைந்தேன்.... அதைப் போல ஆன்ம நிரப்புதல்.. மீண்டும் கிடைத்தது... ஆனால்... வேறு பூக்களில்.. வேறு வாசங்கள்... வேரின் சுவாசங்கள்...
அவள் ஒரு போதும் என்னை பெயர் சொல்லி அழைத்ததே இல்லை......"ங்க" தான்...
எல்லா சூழலிலும் பெண்கள் என்னை அரணாக காத்திருக்கிறார்கள்..... அவர்களின் கூட்டுக்குள்....... சூட்டுக்குள்.... நான் சிறுவனாக, வாலிபனாக, நடுவயதுக்காரனாக.......இன்றுவரை இருந்து கொண்டுதானிருக்கிறேன்... எத்தனை எத்தனை தோழிகள்... கல்லூரியில், ஒரு ஜூனியர் பெண்ணின்... குடும்பமே என் எழுத்துக்கு ரசிகர்களாக இருந்தார்கள்...... வாழ்வில் மறக்க முடியாத வாழ்த்தை அந்த தோழியின் அம்மா எனக்கு தந்திருக்கிறார்...... ஒரு பாட்டி... என்னை புதுப்பதி என்ற மலை கிராமத்தில்..... "உன்னை என்னமோ பிடிக்குதுப்பா.. நீ இங்க அடிக்கடி வரனும்" என்று மனதாரக் கூறிய வார்த்தைகள் இன்னமும் மரங்களையும் செடிகளையும் காடுகளையும் எனக்குள் நிரப்பிக் கொண்டேயிருக்கிறது......
எனக்கு தெரியும்.. இன்னும் பத்து வருடங்கள் கழித்தும் ஒரு பெண்ணை நான் காதலிக்கக் கூடும்.. அத்தனை வசீகரமானவர்கள் பெண்கள்....அவர்களின் ஆற்றில் கரைகளே இல்லை....அவர்களின் மீன்கள்... மரணிப்பதே இல்லை... ஒற்றையடிப் பாதைகளால் நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள், ஏதாவது ஒரு கடவுளின் வருகையை..... மென் விரல்களால்.. மென் முலைகளால்.. மென் இதழ்களால்...மென் இதயங்களால் அவர்கள் நிறைந்து நிற்கிறார்கள்..... நான் அவர்களை... கனம் பண்ணுகிறேன்.. ஒரு காத்திருப்பவனாக.....இரு கைகளும்... விரிந்தே கிடக்கிறது... அணைப்பவர்கள்.... கடவுளாகிறார்கள்... ஆணி அடிப்பவர்கள்... அனுபவமாகிறார்கள்...
எனை பள்ளிக்கு, கூட அழைத்துக் கொண்டு போன.. மேனகா அக்காவை எப்படி மறக்க முடியும்... பசித்த பொழுதெல்லாம்.. தன் டிபன் பாக்ஸை தந்த அந்த காந்தக் குரல் காரியை நினைத்து விடும் கண்ணீருக்குள்.. நான் சூடாக இந்த பூமியை உணர்கிறேன்...இந்த வாழ்வின் அர்த்தத்தை விதைக்கிறேன்...'பர்வீனா 'வுடனான சண்டையை சரி செய்து விடும்... காலத்தின் பின் சக்கரம் எனது கனவாக இருக்கிறது...அத்தனை கம்பீரமானது அவள் தோழமையின் நினைவு.......
சந்தியாவின் அன்பை கூறாமல்... என் வாழ்வின் ஆழம் நிறைவடையாது..... அது பெருங்காவியக் கதை.. அவள் அன்புக்காகவே படைக்கப் பட்டவள்.. அன்பினாலே.. வளர்க்கப் பட்டவள்.. தேடி வந்து சேர்ந்து கொண்டவள்.... நான் காணாமல் போக இருந்த ஒரு நேரத்தில் எனைக் கச்சிதமாக அரவணைத்து... என் இருட்டுக்குள் என்னை மீண்டும் தள்ளி விட்டவள்.. நான் இருண்மையின் பிள்ளை.... இருட்டில்தான் என் கதவுகள் திறக்கின்றன என்பதை அழகாக, வெகு நேர்த்தியாக புரிந்தவள்.. என்னை ஒரு போதும்... அழ வைக்க சம்மதிக்காத தாயின் ஸ்பரிசம் அவள்.....அவளாக இருப்பது வரம்.... இருக்கிறது வரம்.... தவம் என்னுடையது...
என் அண்ணியின் மடியில் தூங்கிய நாட்கள் இன்னும் பொக்கிஷங்கள் எனக்கு..எனக்கும் சேர்த்து அடி வாங்கும்... என் மூத்த சகோதரி. என்னிடம்.. கோபமே படாத என் வசந்திக்கா...... அத்தனை சோகத்தையும் உள் வைத்து... அதே கீச்சுக் குரலில்... எனை கொண்டாடும் பெண்......"என் தம்பி... நல்ல படிப்பான்..." -என்று என் சிறு வயதில் எனை எங்கும் பெருமைப் படுத்தியவள்..."என் கூட வேலை செய்யற பொண்ணு உன் போன நம்பர் கேக்குது.... குடுக்கவா" என்று கேட்கும் வெள்ளந்தி மனுஷி...இப்போதும் நான் ஊருக்கு போனால்... விடியும் நேரம் வரை கதை சொல்கிறேன்.... கேட்கிறாள்...பாவம். ஒன்றும் புரியாத மொழி அவளுடையது.... என் ஆத்தாவின் கடைசி நாட்களின் நான் சிறு குழந்தை.. இன்னும் அவள் உலகத்தில் நான் குட்டிப் பையனாகவே இருப்பதில்... முதுமை எனக்கு வாராது தத்துவம்... மெய்ப்பிக்கப் படுகிறது... என் பாட்டியின் மடி வாசம்.. இன்னும் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது....... நான் மீண்டும் மீண்டும் ஆசிர்வதிக்கப் பட்டவன்...என் பெண்களின்... இயல்புக்குள்... நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன்.... நிறைந்து ஓடும் நதியின் தோற்றம்... காணும் வரை.. அணை இல்லை...
அன்பால் நனைந்து சுகமூட்டிய பெண்களே என்னை வெயிலில் வாட்டவும் செய்திருக்கிறார்கள்... நம்பினோர் கை விடப் படும் என்ற துரோகத்தையும் செய்தவர்கள் இருக்கிறார்கள்.. ஆனாலும் நான் எப்போதும் அவர்களை நிந்திப்பதில்லை..... மறுபக்கத்தின் வாசலில்... கள்ளிச் செடியும் வளர்ந்தே நிற்கும்.. என்பதில் தெளிவு கொண்டவன்...... மன்னிக்க.... மறக்க....ஒன்றுமில்லை......அவர்களை ராட்சஸியாக்கியும் ரசித்துக் கொண்டே எனக்கு பிடித்த வெளிச்சங்களில் உலவ விடுகிறேன்..... கண் கூசி சுத்தமாகி விடுகிறார்கள்.......அப்படி ஒரு காணாமல் போகும் வரத்தை தருவதால்.. அவர்களும்.. என்னை அவர்களுக்கே தெரியாமல் நேசிக்கிறார்கள்... துரோகத்தின் வஞ்சத்தின் நீண்ட புள்ளி நிற்கும் இடமும் பாசத்தின் வேரில் தான்...அன்பின் சுவரில்தான்......
வக்கிரம்.. குரோதம்.. வஞ்சம்... பொய்... அறியாமை எல்லாமே.... தேவையின் சுயத்தின் வெளிப்பாடுதான்.. அதன் பின்னே.. ஒரு விசும்பலைக் காண முடிந்த என் வெளியில்.. ராட்சஸிகளையும் தேவதைகளாக்கி விடுகிறது என் சிறகு.......என் ஜன்னல் திறந்து விடப்பட்ட நேரத்தில்...சூனியக்காரிகள் கூட அழகானவர்கள்....... காற்றோடு போகிறார்கள்.. அல்லது.. வருகிறார்கள்.....இரண்டின் நிலைக்குள்.....நித்தியம்... கம்பிகளின் இடைவெளி..... நான் உண்மைக்கு நிகரானவன்.. சரி என்ற பொறுமையோடு தவறுகளையும் சரியாக்கியே தீருவேன்.......
எல்லாவற்றையும் தாண்டி அம்முவின் வருகை என்னை கடவுளாக்கியது..... நான் பெண்களை முழுதாக புரிய முற்பட்ட இடத்தில் என்னை கை பிடித்து அழைத்து சென்றவள்...வேறு வேறு கதவுகளைத் திறந்து விட்டவள்.. என் எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துக் கொண்டேயிருப்பவள்..... அவள் ஒரு போதும் என் வானத்தில் பறப்பதில்லை..... அவன் வானம் வேறு.. அவள் பறவையா என்றாலும் அது வேறு என்று சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுபவள்.. என்னை கடந்து கொண்டே இருக்கும் வித்தையை ஒரு வகை மாய யதார்த்தமாக காட்டிக் கொண்டே இருப்பவள்... என் கோபங்களை எனக்கு சுட்டிக் காட்டி வேதமாகிப் போனாள்.....காயங்கள் வரும்...... போகும்..... ஓவியங்கள் செய்து பிழை என்று விருட்சத்தின் விதையை தூவிக் கொண்டே இருப்பதில் பெண்களின் நிலைப்பாடு பற்றிய கேள்விகளை எனக்குள் துவங்கியவள்..... நான் யாருமற்ற வெளியை அவளுக்காக செய்து கொண்டேயிருக்கிறேன்.. அவளும் அதையே செய்வதில்.. வெளிகளில்..... வெளி நுழைந்து, சேர்ந்து, பால் வீதியில்...முளைத்துக் கிடக்கிறது, மயான அமைதின் பேரிரைச்சலோடு, எங்கள் அன்பு.... இல்லாமலும் இருப்பது பெண்ணின் குணம்....என்று புரிய புரிய அறிய அறிய தெரிய தெரிய.. விரிந்து கொண்டே நகர்கிறது... ஒன்றை உணர்தல்...
அன்பும் நேசமும்.. கொட்டிக் கொண்டே இருக்கும் மழையில், பெண்கள்.. எதை விதைத்தாலும் வளர்கிறது.... அவர்களின் பாலைவனத்தில்கூட தூரத்து கிணற்றில் நீர் வற்றுவதேயில்லை...பெண்ணை போலொரு நீட்சிகள்.. எங்கும் இல்லை... பெண் இல்லாத சுவர்களில்.. சாத்தியமில்லை.. எந்த ஓவியமும்... அது வண்ணங்களின் சிதறல்.. வாசல் அடைத்து நிற்கும்.. வாயாடியின் நினைவுக்குள் ஒரு வகை சூடிக் கொள்ளும் பூரணம் இருக்கிறது... ஏமாற்றி புறம் பேசி....வஞ்சம் செய்யும் பெண்ணுக்குள்ளும் வளர்ந்து நிற்கிறது.... கற்பனை... தேவைகள் எதுவெனினும்.. பாதைகள் நீளும்.. காதைகளின் சுவர்க்குள்ளும் மேதமை செய்யும் யதார்த்தத்தில், பெண்களிடத்தில்... நான் கதகதப்பாகி ஒரு குழந்தையாகிறேன்.....கிள்ளுவோர் கிள்ளலாம்... அள்ளுவோர் அள்ளலாம்......ஒன்றாகி.... .. கடந்து விடுவதில்.... இதோ அடுத்த பெண் ஒருத்தி... என்னைப் பார்த்து புன்னகைகிறாள்.. நான் பெண்களினால் ஆனவன்......
எத்தனை முறை திறந்தாலும்...இன்னும் மிச்சம் இருக்கும் கதவு பெண்களுக்கானது.... அது தட்டப் படாமல் ரசிக்கும் நொடியில்.. மீண்டும் நீள்கிறது ராட்சஸ தேவதைகளின்....வானம்....
கவிஜி