வேறு நிலாக்கள் 30 நா முத்துகுமார்

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொரு முறை
விசேஷமாய் நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்குச்சி, கோலி,
கரண்டி ,
கட்டையோடு உள்விழுந்த
துருபிடித்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர் ,
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே .

சேறுடா.... சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோசம் கலைக்க
யாருக்கு மனம் வரும் ?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள் .
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க .

-----நா. முத்துகுமார்

எழுதியவர் : நா.முத்துகுமார் (16-Mar-16, 4:45 pm)
பார்வை : 269

மேலே