ஒயிற்கும்மி

சின்னச்சின் னப்பதம் மெல்லவைத் துக்கண்ணன்
சிங்கார மாய்நடை போட்டுவந் தான்
சிரமீதினில் மயில்பீலியும் திருமேனியில் மணியாரமும்
செவ்வாயில் வெண்ணையும் உண்டுவந் தான்!

புல்லாங்கு ழல்கையில் வைத்திருந் தான்மாயப்
பூங்காற்றை ஊதியே கட்டிப்போட் டான்
புகழாரமும் மலர்மாலையும் தினம்சூடிட வருவானுளம்
பூரிப்பில் கொஞ்சிம கிழ்ந்திடு வான் !

பின்னல்ச டைதனைப் பற்றியி ழுத்திட்டுப்
பெண்டிர்ம னந்தனைக் கொய்துவிட் டான்
பிருந்தாவனந் தனில்கோபியர் இவன்லீலையில் அலைபாய்ந்திடப்
பெற்றது பேறென எண்ணவைத் தான் !

கள்ளச்சி ரிப்புடன் செய்யுங்கு றும்புகள்
கண்கள்ர சித்திட ஆனந்த மே
கனிவாய்நிதம் புகழ்பாடிட மதுராபுரி களித்தாடிடக்
கற்கண்டாய் நெஞ்சமும் தித்திக்கு மே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Apr-16, 1:23 am)
பார்வை : 139

மேலே