முட்டாளின் பேராசை

நில்லாது தொடர்வேனோ நிலையின்றி குலைவேனோ
பொல்லாத சிந்தையை நிலைநிறுத்த முயல்வேனோ
கல்லாத நிலைவருமோ கற்றதும் கரைந்திடுமோ
இல்லாத ஞானத்தை இனியேனும் பெறுவேனோ!!

கள்ளாக சுவைக்கின்ற கலைசெல்வம் அத்தனையும்
முள்ளன மலரென்று கைவிட்டு நகர்வேனோ
கல்லான கனியென்று முயற்சிதான் தளர்வேனோ
நில்லாத ஞாலத்தில் நில்லாமல் திரிவேனோ
.
மெல்லவும் இயலாது விழுங்கவும் முயலாது
கல்லாக நிற்கிறேன் கலங்கிதான் நிற்கிறேன்
சொல்லாத சோகம் நெஞ்சோடு போகும்
இல்லாத பாகம் இருப்பதை நோகும் சிறு

புல்லாக எண்ணி புறந்தள்ளி வைப்பாரோ
எல்லைகாணா கலைகள் என்னைகாண வாராதோ
முல்லைபூ சிரிப்பில் கலைமணம் கொண்டவளே
வல்லமை தாராயோ வையத்தலைமை கொள்ள!!!!

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (23-Apr-16, 3:05 pm)
Tanglish : muttaalin peraasai
பார்வை : 102

மேலே