சாய்ந்து கொள்ள

அன்று ஏனோ
குளிரவில்லை தென்றல்

பச்சைத் தண்ணீரும்
சுடுகின்ற
கசப்பானதொரு
நாளில்
வாலினை
பின்னங்கால்களில்
ஒடுக்கிய
நாயொன்றின்
மனநிலையோடு

கயிறுகள்
இற்றுப்போன
கட்டுமரம்
எப்படியோ கரை
சேருகின்ற
நிலையினில்

படபடத்து சிறகுகள்
அசைத்து
உயர எழும்பிடும்
நீர்ப் பறவைகள்
புரிதல்களோடு
புன்னகைக்க

வரவேற்கும்
மணல் திட்டுக்கு
இரவென்ன ..
பகலென்ன..
சாய்ந்து கொள்ள
தோள் கொடுப்பதற்கு?

அப்படித்தான்
ஆகிப் போய்விடுகிறது
ஆலய மணியின்
நாதம்
காற்றில் வந்து
தழுவும் போது !

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (23-Apr-16, 2:19 pm)
Tanglish : saaynthu kolla
பார்வை : 332

மேலே