உப்புக்கண்டம்

மாரீஸ்வரனுக்கு அன்று பள்ளி மதியம் மட்டுமே. பள்ளியின் வளாகத்தில் உள்ளயே அமைந்திருக்கும் பெண்கள் பள்ளியில் 12 வது படிக்கும் அக்காமார்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு. பள்ளி விடுமுறை என்பதால் காலையிலே 7 மணிக்கே குறுக்குப்பாதை மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்று விட்டான். விளையாண்டு விட்டு வீட்டுக்கு வந்தால் பாட்டி சமைத்துக் கொண்டிருந்தாள். காலை இட்லி தோசை எல்லாம் கிடையாது. காலையிலும் சோறு தான். அன்று என்ன கொழம்பு வைப்பது என்று பாட்டிக்கு புரியவில்லை. பானைக்குள் காய்ஞ்ச கறி என்று அவர்கள் கூறும் உப்புக்கண்டம் இருந்தது. அதை எடுத்து சுரைக்காய் மஞ்சள் உப்பு மிளகாய் கலந்து எளிய முறையில் ஒரு கொழம்பு. இது வழக்கமான ஒன்று தான். வீட்டின் நடுவில் உள்ள நீளமான பனைமர சட்டத்தில் கொடி போல கறி காய்ந்து கொண்டிருக்கும். அது காய்ந்த பின்பு பானையில் எடுத்து போட்டு வைத்துக் கொள்வார்கள். அதை இரண்டு முறையில் செய்யலாம். சுரைக்காய் கலந்து குழம்பு வைக்கலாம்‌. தக்காளி உடன் கறியை கலந்து வதக்கி கூட்டு வைத்துக் கொள்ளலாம். அப்படி கூட்டு வைத்தால் சுடு சோற்றுக்கு உடன் ரசம் வைத்துக் கொள்ளலாம். அல்லது பழைய சோற்றை பிழிந்து காய்ஞ்ச கறி தக்காளி கூட்டுடன் சாப்பிட்டால் பார்ப்பவர்களுக்கு எச்சி ஊரும். அன்று குழம்பு மாதிரி செய்திருந்தால் பாட்டி. தெரு முழுக்க மண மணக்கும் அளவிற்கு கொழம்பு வாசம். காலையிலே கிரிக்கெட் விளையாட போய் வந்ததால் நல்ல பசி வேறு. தனக்கு பிடித்த தட்டில் பாட்டி வைத்து தர வராந்தாவில் உட்கார்ந்து ஒரு வாய் எடுத்து வைத்தான் மாரிஸ்வரன். தானதந்த தானதந்ந தனனா என்று இளையராஜா பிண்ணனி இல்லாத குறை தான். அப்படி ஒரு சுவையாக இருந்தது அந்த குழம்பு.

எழுதியவர் : பாண்டி (24-Jun-25, 11:45 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 22

மேலே