மனம்குளிர உதவிட வேண்டும்

​வருமானம் இல்லா வயதான மூதாட்டி
தேய்மானம் மிகுந்த தேகமுள்ள பாட்டி
தன்மானம் நினையாது தன்பசி போக்கிட
கையேந்தும் நிலைகண்டு கசியுது விழிகள் !

​வாழ்வில் இணைந்தவன் வானிற்கு சென்றிட
வயிற்றில் பிறந்தவர்கள் பாசமின்றி கைவிட
வாழ்ந்திட வழியின்றி பாதையில் அமர்ந்து
வாழ்வை நகர்த்தும் வருத்தமிகு காட்சியிது !

நெஞ்சம் வலிக்கிறது உள்ளமும் உருகுது
விழிகளும் வழிகிறது வழிதேடி துடிக்குது !
நிலவிடும் இந்நிலை நிலையாய் நீங்கிட
வழியொன்று காண்போம் வாழும் நாமும் !

முதியோர் இல்லங்கள் மூடப்பட வேண்டும்
மூத்தோர் மனம்குளிர உதவிட வேண்டும் !
அன்புமிகு அன்னைக்கு ஆவனச் செய்வோம்
அரணாகக் காப்போம் ஆளாக்கிய அவரை !

முதியோரை துறக்கும் மதியிலார் மறைந்து
முற்றிலும் மனதினில் இரக்கமே நிறைந்து
முதுமை காலத்தில் பெற்றவரை போற்றி
முழுநேரம் காத்திடும் நிலையும் வருமோ !



பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Apr-16, 7:08 am)
பார்வை : 1297

மேலே