தினமணி இணையம் தந்த தலைப்பு கவிதையின் டைரி கவிஞர் இரா இரவி

தினமணி இணையம் தந்த தலைப்பு !

கவிதையின் டைரி! கவிஞர் இரா .இரவி !

காதல் அரும்பியதும் கவிதை வந்தது
கவிதை வந்ததும் காதலியின் பாராட்டு !

பாராட்டைக் கேட்டதும் கவிதைகள் கொட்டியது
பாடல்கள் முழுவதும் காதலால் நிரம்பியது !

கவிதையில் காதல் இருக்கலாம் தவறில்லை
கவிதை முழுவதும் காதலென்பது தவறென்றனர் !

சமுதாயத்தின் பக்கம் பார்வை திரும்பியது
சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் பிறந்தது !

புதுக்கவிதையிலிருந்து ஹைக்கூவிற்குப் பயணம்
புதுப்பாதை என்பதால் வரவேற்பு அதிகம் !

சொந்தமாக கவிதை நூல்கள் வெளியீடு
சொற்பமாக ஆயிரம் பேர் மட்டும் படிப்பதால் !

சிலலட்சம் பேர் படிக்க வைக்க வழி சிந்திப்பு
சில நாட்களில் கவிமலர் இணையம் உதயம் !

உலக அளவில் கவிதைகள் சென்று அடைந்தன
உலகம் முழுவதும் நல்ல நட்புகள் கிடைத்தன !

ஆயிரம் ஹைக்கூ நூல் அழகாய் மலர்ந்தது
அடுத்தபதிப்பும் வானதியில் விரைவாய் வந்தது !

கவிதை மட்டும்தான் வருமா ? கேள்வி வந்தது
கவனம் மதிப்புரை எழுதுவதில் விழுந்தது !

புத்தகம் போற்றுதும் மதிப்புரை பூத்தது
புத்தகம் பார்த்ததும் மனம் பூரித்தது !

தினமணியின் கவிதைமணி கவனம் ஈர்த்தது
தித்திக்கும் தலைப்பு வாராவாரம் தந்தது !

குடத்து விளக்காக இருந்த கவிஞர்களை
குன்றாது விளக்காக ஒளிர்ந்திட வைத்தது !

கவிதைபாட மேடையின்றி வருந்துவோருக்கு
கவிதையை இணையத்தின் மூலம் பரப்பியது !

வாராவாரம் கவிதைப் பசிப் போக்கியது !
வண்டமிழ் வளர்க்கும் தினமணிக்கு பாராட்டு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (31-May-16, 8:09 pm)
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே