மரண ராகம்

என் பெயர்…. ஹ்ம்ம்….. வேண்டாம்…. ஏன் வேண்டாம் என்று பிறகு தெரிந்து கொள்வீர்கள்….

நான் அந்த டீக் கடையில் நின்றிருந்தேன்…. என் கையில் தற்காலிகமாக ஒரு டீ கிளாஸ் முளைத்திருந்தது….. அப்பொழுதுதான் எதேச்சையாக அந்த டீக்கடையின் உள்ளே இருந்த டி.வியை கவனித்தேன்…. சன் செய்திகள் ஓடிக் கொண்டு இருந்தது….

அந்த டி.வியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்….
பட்டப்பகலில் கொடூரம்….. வளசரவாக்கம் ரயில் நிலையத்தில் கீர்த்தி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை…… கொலையாளி அரிவாளை தண்டவாளத்தில் வீசிவிட்டு சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓட்டம்…. என அந்த செய்தியில் ஒரு வீடியோ காட்சியினை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்…. அதில்……..

ஒருவன் அந்த இரயில்வே ஸ்டேசனில் இருக்கும் மதில் மேல் ஏறி ஓடிக் கொண்டிருந்தான்….. அவன் யாரென்று நினைக்கிறீர்கள்….. சாட்சாத்… அது நானேதான்……. இப்பொழுது புரிகிறதா ஏன் என் பெயரை உங்களிடம் சொல்லவில்லை என்று…… சரி பெயரை விடுங்கள்…..

மீண்டும் அந்த செய்தியினை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்…. அந்த செய்தி வாசித்த பெண்ணையே நான் முறைத்து பார்த்துக் கொண்டிருக்க அவள் அதை பொருட்படுத்தாது செய்தி வாசித்துக் கொண்டிருந்தாள்…

கொலைக்கான காரணம் தெரியவில்லை…. போலிசார்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்…. விரைவில் கொலையாளியை பிடித்துவிடுவோம் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்……

அந்த செய்தியை பார்த்துக் கொண்டிருந்த என் உதட்டில் ஒருவிதமான குரூரப் புன்னகை…… கொலைக்கான காரணம் தெரியவில்லையாம்…. கண்டிப்பாக அவர்களால் அந்த காரணத்தை கண்டு பிடிக்க முடியாது….
ஏன் என்கிறீர்களா… தொடர்ந்து படியுங்கள்……

நான் யார்……? கூலிப் படையைச் சேர்ந்தவனா……? இல்லை…. எனக்கும் அந்த பெண்ணிற்கும் முன் விரோதமா….? இல்லை…… அவள் மீதான ஒருதலைக்காதலா…..? இல்லை….. இல்லை…. இல்லை…..

பிறகு ஏன்….? அவள் ஒரு பெண் என்பதைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை….. நான் செய்தது இந்த ஒரு கொலை மட்டுமல்ல….. இதுவரை பதினோரு பெண்களை கொலை செய்திருக்கின்றேன்….

ஏன்…..ஏன்…..ஏன்…….. எனக்கே தெரியவில்லை….. அப்படி என்றால் நான் சைக்கோவா…. என்று கேட்கிறீர்கள்…… ஆமாம் நான் சைக்கோதான்….. அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்…..

நான் கொலை வாழ்கையை ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் ஆகிறது… ஆரம்பத்தில் பெண்கள் மீதான ஒருவித எரிச்சல் என்னை ஆத்திரத்திற்குள்ளாக்கியது……. அந்த ஆத்திரமே…. என்னுள் கொழுந்துவிட்டெறிந்து என்னை கொலை வெறியனாய் மாற்றியது….

என்னோட முதல் கொலை….. பெசென்ட் நகரில்…. மணி ஒன்பது…. பஸ் ஸ்டாப்….. நான் அங்கு நின்றிருக்கும் பொழுதுதான் அவள் வந்தாள்….
என்னையும் அவளையும் தவிர அங்கு வேறு யாரும் அல்ல….. அவளை பார்த்துக் கொண்டே இருந்தேன்…..

எனக்குள்ளே…… ஏதோ ஒரு மாற்றம்….. பொதுவாக பெண்ணை ஒரு ஆண் பார்த்தால்…. பட்டாம்பூச்சி பறக்கும்….. காதல் பூக்கும்…… சில ஆண்களுக்கு காமம் கொப்பளிக்கும்…. ஆனால் எனக்கு மட்டும் கொலை வெறி ஏற்பட்டது…… அந்தப் பெண்ணை துடிக்கத் துடிக்க…. இரத்தம் வடிய வடிய….. அவள் அலற அலற….. சாகடித்தால் என்ன என்பது போல் என்னுள்ளே எண்ண ஓட்டங்கள்…… சுற்றிப் பார்த்தேன் என்னைப் போன்ற ஒரு வெறி நாயைத் தவிற…. யாரும் இல்லை……
நேரம் ஆக ஆக….. என் கொலை செய்யும் வெறி அதிகமாகிக் கொண்டே சென்றது……. கண் சிவக்க ஆரம்பித்தது……. முகத்தில் பயங்கர கொலை வெறி….. சில நொடிகள்தான்…… வேகமாக அவள் மீது பாய்ந்தேன்……. அவள் கத்தாதவாறு அவள் வாயை பொத்திக் கொண்டேன்…… அவள் துப்பட்டாவை உருவி…. அவள் கழுத்தை சுற்றி இருக்கத் தொடங்கினேன்…… அவள் உடல் துடிக்கத் துடிக்க….. நாக்கு வெளியே தள்ள….. கண் முழி பிதுங்க…. அதை நான் கொடூரப் புன்னகையோடு இரசித்தவாறு அவளை கொன்றேன், அவள் முகத்தில் தெரிந்த அந்த மரண பயம்….. எனக்குள்ளே ஒருவித ஆனந்தத்தை கொடுத்தது……. ஐந்து நிமிடம்தான் எல்லாம் முடிந்தது…..
வேகமாக அந்த இடத்தை விட்டு…… அகன்றேன்….

அன்று ஆரம்பித்தது……. என் கொலை வாழ்கை…. தனியாக ஒரு பெண் நின்றால் போதும்….. எனக்குள்ளே உள்ள அந்த கொலைகாரன் தலை தூக்கத் தொடங்கிவிடுவான்….. இதே போல் பதினோறு பெண்களை கொன்றேன்…… ஒவ்வொரு பெண்ணிற்கும் வெவ்வேறு ஆயுதங்கள்…..

பாக்கெட் கத்தி…. பிளேடு…. உடைந்த பீர் பாட்டில்…. சட்டுவா கத்தி…. கட்டிங் ப்ளேர்… இரும்பு குண்டு…. சைக்கிள் செயின்… இன்னும் பல ஆயுதங்கள் பயன்படுத்தி கொன்றேன்…. ஆனாலும் என் இரத்த வெறி அடங்கவில்லை…… முன்பெல்லாம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வைத்து கொலை செய்தேன்…. ஆனால் அதிலெல்லாம் எனக்கு ஒரு த்ரில் இருப்பதாகத் தெரியவில்லை…….. அதனால் ஆட்கள் அதிகமுள்ள பொது இடத்தில் வைத்து கொலை செய்யலாம் எனத் திட்டமிட்டேன்…

அதே போல் முடித்தும்விட்டேன்….. எனக்கு எப்பொழுதும் ஒரு பழக்கம் ஏன் என்று தெரியவில்லை…… கொலை செய்யப் பட்ட அந்த பெண்களிடம் இருந்து எதையாவது அவர்களின் ஞாபகத்திற்காக எடுத்துச் செல்லும் பழக்கம் என்னிடம் இருந்தது…. அதனால்தான் அந்த பெண்ணின் செல்போனை எடுத்து வைத்துக் கொண்டேன்….. இன்னும் எனக்கு கொலை வெறி அடங்கவில்லை….. கொலை செய்யும் பொழுது அந்தப் பெண்கள் அலறும் அலறல் இருக்கிறதே அதைக் கேட்கவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் தெரியுமா……? அதற்கு நான் வைத்த பெயர்தான் மரண ராகம்……

இன்னும் இந்த கொலைக்கான காரணம் எனக்கே தெரியவில்லை….. இந்த போலிஸ்காரர்கள் எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்கள்…. எனத் தெரியவில்லை…

டீக்கான காசை கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றேன்…… அப்பொழுதுதான் என்னருகில் ஒரு போலிஸ் ஜீப் வந்து நின்றது……..
அதில் இருந்து இறங்கினார்….. என் அப்பா…… டி.எஸ்.பி… வரதராஜன்….

“ஹ்ம்ம் வண்டில….. ஏறு…..”

“எங்கேப்பா….”

“ஏறுன்றேன்ல…..ஏறு…”

அதற்குமேல் நான் கேள்வி கேட்கவில்லை…… வண்டியில் ஏறிக் கொண்டேன்….

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா……..? ஆம் நான் செய்த அத்தனை கொலைகளும் இவருக்குத் தெரியும்….. இதற்கு முன்னே நடந்த கொலைகளைப் பத்தின விசயங்களை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டவர் இவர்தான்……

“என்னடா மகனே புதுசா ஒரு கொலை பன்னிருக்க போல….”

“ஆமாம் பா….. அந்த பொண்ணை பார்க்க பார்க்க எனக்கு கொலை வெறி தலைக்கேறிடுச்சு…. அதான் அரிவாளை வச்சு ஒரே போடு…. முடிச்சிட்டேன்….”என்றவாறே அவர் முகத்தை பார்க்க அவர் முகம் பாறையை போல் இருகி இருந்தது…..

வண்டி…… ஒரு செங்கல் சூளையில் நின்றது…….

“ஹ்ம்ம்ம் இறங்கு…..”

நான் இறங்கினேன்……. சுற்றுமுற்றும் பார்த்தார்…… வேகமாக அவரது சைலென்சர் பொருத்தப் பட்ட பிஸ்டலை எடுத்து என் நெஞ்சை குறிப்பார்த்து ட்ரிக்கரை சுண்டிவிட்டார்……. எல்லாம் சில நொடிகளில் நடந்து முடிந்தது…

அவ்வளவுதான்….. ஒரு தோட்டா என் நெஞ்சை கிழித்துக் கொண்டு உள்நோக்கிப் பயனித்து உள்ளே என் கேபிள்களை கட் செய்து…. என் முதுகை பிய்த்துக் கொண்டு வெளியேறியது….

நான் சற்றும் இதை எதிர் பார்கவில்லை……. பொத்தென்று விழுந்தேன்..
அவர் என்னைப் பார்த்து பேச ஆரம்பித்தார்……

“போதும்டா…. போதும் நீ பன்ன கொலைகள் எல்லாம் போதும்……. முதலில் நீ மாட்டிக் கொண்டால் என் பெயர் கெட்டுப் போகும் என்றுதான் உன்னை காப்பாற்றினேன்…. அதற்கு அப்பறம்தான் தெரிந்தது நீ ஒரு சைக்கோ….. மனநோயாளின்னு…

நீ பாட்டுக்க…. வரிசையா பொண்ணுங்களை போட்டுத் தள்ளிட்டே போயிட்டு இருப்ப நான் உன்னை காப்பாத்திட்டே இருக்கனுமா……..? இன்னைக்கு அந்த சிசிடிவி வீடியோவை பார்த்ததும் கண்டு பிடிச்சிட்டேன் அந்த கொலையை பன்னது நீதான்னு….. எப்படியும் உன்னை போலிஸ் மோப்பம் முடிச்சிடுவாங்க அதான் இப்படி….” எனச் சொல்லிவிட்டு சில நொடிகள் நிதானித்தார்….

என் உடலில் இருந்து உயிர் பாதி வெளியேறி இருந்தது….. பயங்கரமாக வலித்தது….. அப்பொழுதுதான் உணர்ந்தேன் மரண வலி என்றால் என்ன என்பதை… அந்த வலி என்னுடலின் ஒவ்வொரு அனுவிலும் தெரிந்தது…. அதை அனுபவித்து உணர ஆரம்பித்தேன்…..

அவர் தொடர்ந்தார்……

“அந்த பொண்ணோட அப்பா பாவம்டா அந்த மனுசன்….. எப்படி கதறி அழுதார் தெரியுமா…..?... என்னோட மசையே உழுக்கிடுச்சுடா….. அதான் நான் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன்…. இதில என்னோட சுயநலமும் இருக்கு…. நீ போலிஸ்கிட்ட மாட்டிக்கிறதுக்கு முன்னாடி….. நான் உன்னை கொலை பன்னி உன் உடலை அழிச்சிட்டா….. என் பெயர் காப்பாற்றப்படும்…. கொலை செய்த உனக்கு தண்டனையும் கிடைச்ச மாதிரி….அதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்…”எனச் சொல்லிவிட்டு என்னை நெருங்கினார் என்னை தூக்கி தரையில் இழுத்துக் கொண்டே சென்றார்….. செங்கல் எறியூட்டுவதற்காக தயார் நிலையில் இருக்க…..

என்னை அதற்குள்…. தூக்கி வைத்து வைக்கோல் போரை என் மேல் தூவி மூடிக் கொண்டிருக்க…… தூரத்தில் இருந்து ஒரு வாகனம் எங்களை நோக்கி வரும் சத்தம் கேட்டது என் அப்பா திகைத்துப் போய் நிற்க….. நாளைந்து போலிஸார்கள் அதிலிருந்து இறங்கினார்கள்….. கையில் பிஸ்டல்

உடனே என் அப்பா அவர்களை நோக்கி பிஸ்டலை திருப்ப எத்தனிக்க…. அந்த நான்கு பேரின் பிஸ்டலில் இருந்து புறப்பட்ட தோட்டாக்கள் என் அப்பாவின் உடலை சல்லடை போட்டது….. அவரும் என்னருகே… துடிதுடித்து விழுந்தார்……

அவருடைய முகத்தில் வலி அப்பட்டமாகத் தெரிந்தது… முகத்தை வலியால் சுழித்துக் கொண்டே என்னை பார்த்து சொல்ல ஆரம்பித்தார்….

“எ….எனக்கு இது தேவைதான் உன்னை காப்பாற்றி பல கொலைகளுக்கு நானும் காரணமாக இருந்ததுக்காக……..இந்த த….தண்டனை எ…எனக்குத் தேவைதான்…..”என என்னைப் பார்த்துச் சொன்னவரின் கண்கள் மயக்கத்திற்கு உட்பட ஆரம்பித்தது…..

என் அப்பாவின் மரண ராகமும் என்னுடைய மரண ராகமும் சேர்ந்து ஒலித்தது…..
மரண ராகம் மடிந்தது…

எழுதியவர் : அபுவந்த்த் (10-Jul-16, 8:51 am)
Tanglish : marana raagam
பார்வை : 756

மேலே