காதல் வாழ்க

புதிதாக கழுத்தைத் தழுவியிருந்த மாங்கல்யத்தை பார்க்கும் போதெல்லாம் "இது எப்படி சாத்தியம்" என்ற கேள்வியே மதுமதியின் நெஞ்சை ஆக்கிரமித்திருந்தது. அவளால் இன்னமும் கூட தனக்கு திருமணம் நடந்து விட்டது என்னும் விந்தையை நம்ப முடியவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பாக தான் காதலித்த தன் கல்லூரி நண்பனையே தனக்கு பெற்றோர் நிச்சயம் செய்ததும், ஒரு வருடம் கழித்து திருமணம் என்று முடிவு செய்ததும், இயற்கையின் சதியால் இனி தன் வாழ்வில் திருமணமே இல்லை என்ற முடிவிற்கு வந்ததும் இப்பொழுது தான் என்பது போல் அவளது கண்களில் நீர் சுரந்தது. நிச்சயமாய் அது துயரக் கண்ணீர் அல்ல. ஆனந்தக் கண்ணீர். அன்று அப்படி ஆகியிருக்கா விட்டால் இன்று இப்படி உயிராய் நேசிக்கும் நல்ல கணவன் கிடைத்திருக்க மாட்டானே என்ற எண்ணமே அக்கண்ணீரில் கலந்திருந்தது. மெல்ல நடந்து வந்து கட்டிலில் ஆழ்ந்த துயிலில் இருந்த கணவனின் முகம் நோக்கி குனிந்து நெற்றியில் முத்தமிட்டாள். அவள் தொடுகை உணர்ந்து துயிலிலும் அவன் இதழ்கள் புன்சிரிப்பில் அழகாய் விரிந்தன. அதைக் கண்டு அவள் நெஞ்சம் மலர்ந்தது. நினைவுகள் அவனோடான சந்திப்புக்களை தேடி பின்னோக்கி பயணித்தன.
நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போன பொழுது அவள் அழவில்லை , ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. சொல்லப்போனால் வழமையை விட குதூகலமாய் இருந்தாள். இல்லை இல்லை குதூகலமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாள். ஏனென்றால் தன் ஒரு துளி கண்ணீர் கூட தன் மீது மட்டற்ற பாசம் வைத்திருக்கும் தன் குடும்பத்தாரை எவ்வளவு பாதிக்கும் என்பதை அவள் அறிந்தே இருந்தாள். அதனால் தன் மன வலியை தனக்குள்ளேயே புதைத்து வெளிக்கு சந்தோசமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள். தங்களது ஒரே செல்ல மகளின் இந்நிலை கண்டு ரத்தக் கண்ணீர் வடிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கூறி அவர்களை தேற்ற முனைந்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றாள்.
"அம்மா , அப்பா நீங்க ரெண்டு பேரும் இப்பிடி மூஞ்சிய தூக்கி வச்சிக்கிடுற அளவுக்கு எதுவுமே ஆயிடல்ல. இப்ப என்ன என்னோட கருப்பைய எடுக்கணும். அவ்வளவு தானே. அதுக்காக நான் கொஞ்சம் கூட வருத்தப் படல. ஏன் தெரியுமா? அன்னை தெரேசா, சொல்லி இருக்காங்க "கருவுற்றால் ஒருவருக்கு தாயாவாய். கருணையுற்றால் உலகுக்கே தாயாவாய்" அப்டின்னு. எனக்கு 'Endometriosis - இடமகல் கருப்பை அகப்படலம்' ஏற்பட்டது கூட அவரோட இந்த கூற்றுப்படி என்னை வாழச் செய்வதற்காகவும் இருக்கலாம். அப்டிப்பட்ட வாழ்க்கை வாழப் போறத நினைக்க எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. கடவுளுக்கு நான் நன்றி சொல்லிக்கிறன் இந்த வாய்ப்பை எனக்கு தந்ததுக்கு. அதோட இந்த கல்யாணம் நின்னு போனது முதல்ல ரொம்ப வருத்தமா தான் இருந்திச்சு. அப்புறமா யோசிச்சுப் பாத்தா அதுவும் நல்லதுக்கு தான்னு தோணிச்சுது. இதுவே கல்யாணத்துக்கு பின்னாடி எனக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குதுன்னு தெரிய வந்து என்ன அவங்க கைவிட்டிருந்தா அந்த கொடுமையை உங்களாலேயோ அல்லது என்னாலேயோ கண்டிப்பா தாங்கியிருக்க முடியாது. அதனால தான் சொல்றன் கவலையை விடுங்க. உங்க மக காலம் பூராவும் உங்க கூடவே இருக்கப் போறான்னு நினைச்சு சந்தோசப்படுங்க." அப்படி இப்படியாக பல நாள் கெஞ்சி கொஞ்சி பெற்றோரை சரிக்கட்டி நாளை கழித்துக் கொண்டிருந்தவளிடம் ஒரு விண்ணப்பம் கோரினான் மனோகரன், அவளுக்கு கருப்பையை நீக்கி சிகிச்சை அளித்து வந்த வைத்தியன். அந்த விண்ணப்பத்தில் அவன் கோரியிருந்ததோ அவள் கணவன் என்னும் பதவியை. எந்தவித எண்ணத்திற்கும் இடம்கொடாமல் அவன் விண்ணப்பத்தை நிராகரித்தாள் மதுமதி. அவனும் விடவில்லை. தான் ஒரு வைத்தியன் என்பதையும் மறந்து அவள் பின்னோடேயே அலைந்து கடைசியில் அவளை திருமணத்திற்கும் சம்மதிக்க வைத்தான். அதற்காக நீண்ட நெடிய மூன்று ஆண்டுகள் அவன் காத்திருக்க வேண்டியதாயிற்று.
நினைவுகளில் கரைந்து கொண்டிருந்தவள் கணவனிடம் அசைவை உணர்ந்து அவன் முகம் நோக்கினாள். அவன் இமை கொட்டாது அவளையே பார்த்த வண்ணம் இருந்தான். அவனது பார்வை கூச்சத்தை ஏற்படுத்த கட்டிலில் இருந்து எழுந்து வெளியே ஓடினாள். அவள் பின்னோடேயே வந்து அவள் தோளில் முகம் புதைத்தவன், "என்ன! காலையிலேயே அப்படி என்ன சிந்தனை?" என்று காதோரம் ரகசியம் பேசினான். 'ஒன்றுமில்லை' என்பதாக தலையை இடமும் வலமும் ஆட்டியவளின் முன்னே வந்து அவள் மூக்கை பிடித்து ஆட்டியவண்ணம் "அப்படி என்றால் ஏதோ இருக்கிறது!" என்று சொல்லி கேள்வியை நோக்கினான். "ம்.. பழசை எல்லாம் நினைச்சுப் பார்த்தேன்" என்றவளின் கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் வந்தது. அவள் கண்ணீரை கண்டவனுக்கு கோபம் வந்தது. கோபமாய் அவளை முறைத்துவிட்டு குளியலறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
அவன் கதவை அறைந்த சத்தத்தில் தன்னிலை உணர்ந்தவள் ஓடிச் சென்று குளியலறைக் கதவை தட்டினாள். நாலாம் முறை தட்டுவதற்கு முன்பாகவே கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவனின் கைகளை பிடித்துக் கொண்டு, "மன்னிச்சிடுங்க, இது தான் கடைசி. இனிமேல் பழைய எதையுமே நினைக்க மாட்டன். நினைச்சு அழமாட்டான்." என்றவாறு பாவமாக அவனைப் பார்த்தாள். அந்த பார்வை அவனை ஏதோ செய்ய "இனிமேல் அதையெல்லாம் நினைச்சு அழுதா கொன்னுடுவேன்டி உன்னை" என்று கூறி இறுக்கி அணைத்தான்.
அவனது அணைப்பும் அவன் வார்த்தையும் இருவருக்குமே காதல் கைகூடிய நாளை ஞாபகப்படுத்தின. இருவர் நினைவுகளும் இரண்டு மாதத்துக்கு முன்னரான ஒரு நாளை நோக்கி பறந்தன.
"மனோகரன்! சொன்னா புரிஞ்சுக்கோங்க? இந்த பிறவியில எனக்கு கல்யாணம் என்ற ஒன்று இல்லவே இல்லை." - மதுமிதா
"மது தயவு செஞ்சு யோசிச்சுப் பார். சந்தரப்ப சூழ்நிலைகளால உன்னோட கல்யாணம் நின்னு போயிருக்கலாம். அதனால நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும்னு என்ன அவசியம்?" - மனோகரன்
"புரியாம பேசாதீங்க மனோகரன், என்னோட கல்யாணம் நின்னு போனதப் பத்தி எனக்கு எந்த வருத்தமும் இல்ல. தாயாகும் தகுதி இல்லாத எனக்கு கல்யாணம் அவசியம் இல்லாத ஒண்ணு தான்" - மதுமிதா
"அறைஞ்சேன்னா தெரியும் இப்ப! குழந்தை இருந்தா தான் கல்யாண வாழ்க்கையா? அப்டின்னா இந்த உலகத்தில குழந்தை இல்லாத தம்பதிங்க எல்லாம் வாழ்ற தகதி அற்றவங்களா? நீ கூட இப்டிலாம் யோசிப்பானு நான் நினைக்கவே இல்லை. உன்னை காதலிச்சத நினைக்க வெட்கமாயிருக்கு" - மனோகரன்.
மனோகரன் கூறிய வார்த்தைகளை கேட்ட மதுமதிக்கோ நெஞ்சம் வெடிப்பது போல் இருந்தது. கண்களில் கண்ணீர் பொங்கி வரலாயிற்று. கைகளால் முகம் புதைத்து விம்மினாள். செய்கையற்ற ஆத்திரத்துடன் அவள் அழுகையை பார்த்துக் கொண்டு கைகட்டி நின்றான் மனோகரன். அரை மணி நேரமாக தேற்றுவாரின்றி அழுதவள் தானாகவே அழுகையை அடக்கி தலை குனிந்த வண்ணம் "உண்மையாவே என்னைக் காதலிச்சுத் தான் கல்யாணம் பண்ணிக்க கேட்குறீங்களா? இல்லை என் மேல பரிதாபப்பட்டு.." அவள் மேலும் கேட்கும் முன்னரே அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன், "இதுக்கு மேல ஏதாவது தப்பு தப்பா யோசிச்சு கேட்டா கொன்னுடுவேன்டி உன்னை."

பழைய நினைவில் இருவருக்குமே சிரிப்பு வந்தது. "எப்ப பாரு கொன்னுடுவேன் கொன்னுடுவேன்னே மிரட்டுறீங்க. உங்களை விவாகரத்து பண்ணா தான் சரி" செல்லமாக சிணுங்கியவாறே அவன் நெஞ்சில் குத்தினாள்.
அவர்கள் காதல் என்றென்றும் வாழ வாழ்த்தி விடைபெறுவோம்......

எழுதியவர் : துளசி (26-Jul-16, 12:20 pm)
Tanglish : kaadhal vazhga
பார்வை : 541

மேலே