திருமண நன்னாள்

வாரணம் ஆயிரம் வரிசையில் நின்றசைய - நல்ல
தோரணம் ஆயிரம் தென்றலில் தலையசைய
வான்முகில் வந்தே வாழ்த்திடும் நன்னாள்- நல்ல
தேன்தமிழ் பாடலாய் இனித்திடும் திருநாள்

தோள் சேர்ந்த மாலையோடு சுகம் காணும் நன்னாள்
வாள் போன்ற விழிகளுமே தோளோடு கிறங்கிடும் திருநாள்
மணவறையில் ஈருயிர்கள் மங்கலமாய் இணையும் நாள்
மன அறையில் இருந்த காதல் தனியறையில் தவழும் நாள்

இனியழகின் பொருத்தமெல்லாம் இவர்களென்று வாழ்த்தும் நாள்
தனியழகில் மொழிகளெல்லாம் குறைவென்றே தோன்றும் நாள்
இனி அழகே இவள்தானென்று கொண்டவனும் மகிழ்ந்திடும் நாள்
தனி அழகே மோகமென்று தலையணையும் நாணிடும் நாள்

பூப்பெய்தா கனவுகளும் பூப்பெய்தும் ஓர் பொன் நாள்
மூப்பெய்தா நினைவுகளாய் காலமெல்லாம் நிலைத்திடும் நாள்
பூக்களெல்லாம் புன்னகைத்தே உடல் கனத்தில் கசங்கிடும் நாள்
பாக்களெல்லாம் தணிக்கையாகும் இன்னும் அதை வர்ணித்தால்

-க.அர.இராசேந்திரன் =

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (24-Sep-16, 4:03 pm)
Tanglish : thirumana nannaal
பார்வை : 956

மேலே