எசப்பாட்டு 4 மாட்டுத் தொழுவம் தூத்துக் கூட்டி
எசப்பாட்டு.. 4
மாட்டுத் தொழுவம்
தூத்துக் கூட்டி
கழுவிநல்லா விட்டுப்புட்டேன்
தங்கையா - நான்
அடுத்து என்ன
செய்ய வேண்டும்
சொல்லய்யா
வேப்பமரத்து எலபறிச்சு
மாட்டுத் தொழுவம் மேலகட்டி
மாடத்துல விளக்கேத்தி
ஊதுவத்தி புகபோடு
தங்கம்மா - நீ
ஊதுவத்தி புகபோடு
தங்கம்மா
சந்தையிலே பிடுச்சுவந்த
கறவைப்பசு நெத்திலிலே
கொழச்செடுத்த சந்தனத்த
பூசிவிட்டு பொட்டுவை
தங்கம்மா - நீ
பூசிவிட்டு பொட்டுவை
தங்கம்மா
கறவைப்பசு நெத்தியிலே
பூசிவிட்டேன் சந்தனத்தை
குங்குமத்து பொட்டுவெச்சேன்
சொன்னபடி செஞ்சுபுட்டேன்
தங்கையா - நீ
சொன்னபடி செஞ்சுபுட்டேன்
தங்கையா
வாங்கிவந்த பூமாலை
வாசம்மோந்து பாக்காம
கறவைப்பசு கழுத்திலிட்டுக்
காத்திருக்க வேணுமடி
தங்கம்மா - நீ
காத்திருக்க வேணுமடி
தங்கம்மா
தள்ளினிக்கும் கன்னுக்குட்டி
துள்ளிவந்து என்னருகே
என்முகத்தப் பாத்திருக்கு
ஏனென்று தெரியலையே
தங்கையா - அது
ஏனென்று தெரியலையே
தங்கையா
தாய்க்குசெய்த சேவையெல்லாம்
தனனுக்கும் செய்யபோறான்னு
துள்ளித்துள்ளி வந்துநின்னு
உன்முகத்தப் பாத்திருக்கும்
தங்கம்மா - கன்னு
உன்முகத்தப் பாத்திருக்கும்
தங்கம்மா
சந்தனத்தைப் பூசிப்புட்டு
அதுக்குமொரு பொட்டுவெச்சு
கழுத்திலொரு மாலையிட்டா
கன்னுக்குட்டி சுத்துமுன்ன
தங்கம்மா - கன்னு
சுத்துமுன்ன என்னைப்போல
தங்கம்மா
தடவியெண்ணெய் கையில்கொஞ்சம்
கறவைமடியில் நீர்தெளித்து
கண்டாங்கி மடிச்சுயிர்த்தி
காலிடையில் ஏனம்வெச்சு
தங்கம்மா - உன்
காலிடையில் ஏனம்வெச்சு
தங்கம்மா
காலிடையில் ஏனம்வெச்சு
கறவைமடியில் விரலிழைத்து
சுரக்கும்பாலு தெறிக்கமுகத்தில்
கண்சிமிட்டி மூடினியே
தங்கம்மா - நீ
கண்சிமிட்டி மூடினியே
தங்கம்மா
கண்சிமிட்டி மூடிக்கிட்டே
சரசரன்னு கறக்கும்போது
சுரக்கும்பாலு நுரைவழிய
கண்டாங்கி நனஞ்சதடி
தங்கம்மா -உன்
கண்டாங்கி நனஞ்சதடி
தங்கம்மா
கண்டாங்கி நனஞ்சபோது
உன்னழகைப் பார்த்திருக்க
கறவைப்பசுவக் கிள்ளினியே
என்ன நினச்சு கிள்ளின நீ
தங்கம்மா - நீ
என்னை நினைச்சுக் கிள்ளினியா
தங்கம்மா
- தர்மராஜன் வெங்கடாச்சலம்
20-12-2016