தொடர்வேன் பயணத்தை

​கவிதைகள் பிறந்தன
கால நேரமின்றி
வரிகள் அணிவகுத்தன
வரிசை வரம்பின்றி
வாசிக்கத் தொடங்கினர்
ரசித்து மகிழ்ந்தனர் !

இடையூறாய் வந்தது
இடைவேளை தடையாக
அறிந்தவர் புரிந்ததால்
அமைதியும் காத்தனர்
அறியாதார் புரியாமல்
அறிந்திட துடித்தனர் !

வினவினர் விரைந்து
விரும்பினர் விடைதனை
பணிவுடன் பகிர்ந்தேன்
பதிலாக உரைத்தேன்
குழப்பம் உருவானதால்
குழுமங்களைத் தவிர்த்தேன் !

குழம்பிய நிலையால்
குதூகலம் குறைந்தது
எழுதிடும் எண்ணமும்
எழாமலே இருந்தது
திங்களொன்று கரைந்தும்
திரும்பாத நிலையேதான் !

முகநூல் நாட்டமும்
முன்பிருந்த அளவில்லை
அகத்தினில் கருத்துக்கள்
அளவின்றி கூடுகிறது
கருவும் உருவாகுது
கவிதையும் தோன்றுது !

பதிவுகள் குறைந்தது
பணபரிவர்த்தனை போல
நெஞ்சிற்குள் கூடுகிறது
மின்னணு வர்த்தகமாய்
கட்டுப்பாடுடன் மனது
தட்டுப்பாடு கற்பனைக்கு !

மாறுதல் தேவைதான்
ஆறுதல் அடைந்திடவே
மாற்றங்கள் அவசியம்
வாட்டங்கள் வற்றிடவே
அடையாளம் மறையாது
கடுகளவும் குறையாது !

புரியாது பலருக்கும்
புதிராகத் தோன்றிடும்
அறிந்திடுவர் சிலரும்
அழியாத நினைவால்
தொடர்வேன் பயணத்தை
தொடரில்லாத் தொடராக !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Mar-17, 3:26 pm)
பார்வை : 387

மேலே