அழுகை எதற்கு
என்னை என் தங்கையின் அழுகுரல் இன்று துயில் எழுப்பியது !
எதற்கென் றறியாமல் - இங்குநீ
. ஏனடி அழுகின்றாய் ?
பதம் வலித்ததுவோ ? - எதைக்கண்டு
. பயந்து விட்டாயோ ?
கேட்ட பொருளையம்மாள் - இப்போது
. கிடையா தென்றாளோ ?
ஓட்ட மெடுக்கையிலே - தடுக்கியோர்
. ஓரம் விழுந்தாயோ ?
காலைப் பொழுதினிலே - வெண்ணிலவின்
. காட்சிக் கழுகிறாயோ ?
வேலை மொழிந்தாரோ - தென்றல்தான்
. வேதனை தந்ததுவோ ?
கன்னஞ் சிவந்திடவும் - நல்லிரண்டு
. கண்கள் நிறைந்திடவும்
புன்னகை தான்மறந்து - எதற்கடி
. புரண்டே அழுகின்றாய் !
விண்மீன் கொண்டுவந்து - சொட்டாங்கல்
. விளையாடத் தந்திடவோ ?
வண்ண வில்திரித்து - அணிந்திட
. வட்ட நகைதரவோ ?
அழுகை மறந்துவிடு - செல்லமே
. ஆனந்தம் சூடிவிடு !
விழுதலு மேதுக்கடி - செல்லமே
. விளையாட ஓடிவிடு !
பேடி அழுதிடலாம் - தைரியன்
. பேத்தி அழுவதுண்டோ ?
பாடி மகிழ்வமடி - இன்னொரு
. பாப்பா பாடலொன்றை !
-விவேக்பாரதி