உயிரே உன்னை காதலிக்கிறேன்

நீ சொல்லாமல் சொன்ன
காதல் சம்மதத்தின் பின்பே
திரையகன்ற என் மனமும்
தன்னிலை உணர்ந்ததுவோ!..

என்னை பிடித்திருப்பதை - உன்
உணர்வுகள் எனக்குரைத்த நேரம்
தடுமாறித்தான் போனேன் அன்பே...

சற்று வலிக்குமளவுக்கே
என்னை கிள்ளிப் பார்த்தேன்
காண்பது கனவா என்றே!..

ஆயிரம் முறை கேட்டுப்பார்க்கிறேன்
என் மனதை நானே...
அழகன் உன் அன்பை பெறும்
அதீத வரம் பெற்றவளா நான்..!

நினைக்கும் தருணத்திலெல்லாம்
இனிக்கின்ற உறவு நீதானன்பே...
நான் வாழும் நாட்களுக்கு
அர்த்தம் தருபவன் நீதானன்பே!..

நிச்சயமாய் நீ உன்னதமானவன்...
உன் நேசம் கிடைத்த பின்பே
என்னையே நான் நேசிக்கிறேன்!..

என் தன்னம்பிக்கையை - தீண்டி
சுடர் விடச் செய்தது உன் அன்பு...
நானும் சற்று அழகானவள் தானென
அடையாளம் நல்கியது உன் காதல்...

நிமிடங்களை மணித்தியாலங்களாயும்
மணித்தியாலங்களை நாழிகையாயும்
அறிமுகம் செய்து வைத்தது உன் காதல்...

நீ உரைத்திடும் காதல் மொழிகளை
உன் அணைப்பினில் அடங்கியே
அனுபவித்திட பேராசை எனக்குள்...

ஓரிரு நிமிடம் உன் அருகிருந்து
உன்னை கொஞ்சி மகிழ்ந்திட
இன்னும் ஒரேயோர் வரம் தா...

நீ தந்த காதல் போதும் என்னவனே...
காலம் எனக்காய் வைத்திருக்கும்
சோதனைகள் யாவும் தாங்கிடவே...

காதலிக்கிறேன் உயிரே உன்னை...
என் உயிர்த் தீபம் அணையும் வரை
உருகி உருகி காதலிப்பேன் உன்னை!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 12:44 pm)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 102

மேலே