சாதிகள் கலைவோம்

உயர் சாதி என்றிவன்
மிடுக்குடன் எதிரில் வர,
கீழ் சாதி என்றிவன்
தலையில் கட்டியிருந்த
துண்டினை எடுத்து
அக்குளில் சொருகிக் கொள்ள வேண்டும்....

சுட்டெரிக்கும் வெயில் என்றாலும்
அவன் முன் செருப்பினை
கலட்டி கும்பிட வேண்டும்..

ரத்தம் எல்லாம் சுண்டும் வரை
உழைத்து கொட்ட வேண்டும்...

உயர் சாதி என்று
ஆளுமையுடன் நீ நடக்க
கீழ் சாதி என்று
அவன் உனக்கு சாமரம்
வீச வேண்டும்...

எவனோ வீசிச் சென்ற
சாதி குப்பையை கையில்
ஏந்தி திரியும் கூட்டமே!

நீ எந்த சாதியானாலும்
உன் பிறப்பின் வழி ஒன்றே !
உயர் சாதியானதால்
வாயின் வழி உன் பிறப்போ ?

நீயும் நானும் பிறக்கையில்
வருவது பச்சை வாசமே ,
உன் சாதியை வைத்துக்கொண்டு
சந்தன வாசமய் மாற்றிக் காட்டு
பார்க்கலாம்....

நாடாள நினைப்பவன்
கொளுத்தி போடும்
தீக்குச்சில் உன் குடிசையும்
சேர்ந்தள்ளவா பற்றி எரிகிறது...

இயற்கையின் படைப்பில்
ஆண் என்றும்
பெண் என்றும்
இரு பிரிவு மட்டுமே ..

சாதி கூண்டில் ஒடுங்கி
வாழாமல்
காதல் சிறகை விரித்து
பறக்க துடிக்கும் இதயங்களை கீறி
அவர்களின் ரத்தத்தை குடிக்கும்
மிருகமாய் அல்லவா
மாறிப்போனாய்.....

ஆண் என்றால் உயிரை பறிப்பது
பெண் என்றால் கற்பை பறிப்பது
என்ற கோட்பாடை வகுத்துவிட்டாய்...

ஏட்டில் எழுதி
படித்து திருந்தும்
விஷயமா இது....

சாதி என்னும்
களையை பிரித்து எடு,
நட்போடு பழகி
கை கோர்த்து நடந்திடு,
பெண்மையை போற்றிடு...

வளரட்டும் நம் சமூதாயம்
சாதி என்னும் சாத்தானின்
பிடியில் சிக்காமல்.....

எழுதியவர் : மதிமகள் (27-Sep-17, 2:53 pm)
பார்வை : 1073

மேலே