மதம் பிடித்த மனிதா

மலர்வனம், பாலைவனம், சாக்கடை என பேதமின்றி
சரிவிகிதத்தில் அமுதம் பொழியும் மேகம்.

சூரியன், சிமிலி, சுருட்டு என பேதமின்றி
சுடரேற்றும் தீ.

வேம்பு ரோசா கள்ளிப்பூ என பேதமின்றி
வாய்வைத்து கள்ளருந்தும் பட்டாம்பூச்சி.

புல்லாங்குழல் நாசித்துளை சங்கின் செவியென
பேதமின்றி இசையை வருசிக்கும் பூங்காற்று.

பள்ளத்தாக்கு, மேடுபள்ளம் குண்டுகுழி பேதமின்றி
பாய்ந்து மட்டப்படுத்திக்கொண்டே விரைந்தோடும் நதிமகள்

இயற்கையின் மடியில் இருக்கும்
அஃறிணையெல்லாம் ஒரே லயத்தில் ஒரே சுதியில்
உச்சரித்துக்கொண்டு போகின்றன சமத்துவ கீதத்தை

இயற்கையின் சமத்துவதிலிருந்து
வலுக்கட்டாயமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு
அந்நியப்பட்டு கிடக்கும் மானுடனே!

உயர்திணை என்று
இறுமாந்து
இயற்கையின் பிடியிலிருந்து
நழுவிக்கொண்டிருக்கும்
மதம் பிடித்த மனிதா!

நீ மட்டும் ஏன்
பேதம் காட்டுகிறாய் கடவுளிடம்
மசூதி, மடாலயம், தேவாலயம் என்று ?

மனக்கோவிலுக்குள் வசிப்பவன் கடவுள்
எப்படி காட்சியளிப்பான்?
கண்ணை மூடிக்கொண்டு
கற்கோவிலுக்குள் தேடினால்...

எழுதியவர் : ஆனந்த் நாகராசன் (26-Oct-17, 5:16 pm)
பார்வை : 146

மேலே