மூக்குத்திகாதல்

பெண்மை அழகென்றால்
அந்த பெண்மைக்கு அழகுதான்
அந்த மூக்குத்தி

மூக்குத்திகளின் மீதான எனது காதல்
எங்கிருந்து வந்தது..

என் விழிகள் கண்ட முதல் முகம் அவள்
அவளின் அடையாளம் அந்த மூக்குத்தி

விவரமறியா வயதில்
அவள் முகங்களில்
தவழ்ந்து விளையாடியிருக்கலாம்.,
அவள் முத்தமிடும் நேரம்,
அந்த மூக்குத்தியும் என்னை முத்தமிட்டிருக்கலாம்..
எது எப்படியோ
மூக்குத்திக்கும் எனக்குமான இப்பந்தமே
என் வாழ்க்கையின் ஆரம்பம்.


இன்றும் நினைவிருக்கிறது
எனது இரண்டாம் வகுப்பின் பள்ளி நாட்கள்..

ஒரு வெளிவாசல்
இருபுறம் மரத்தட்டியால் மறைக்கப்பட்டிருக்கும் அந்த வகுப்பறையில்,
எத்தனை சிறு பெஞ்சுகள் என்று ஞாபகமில்லை.,
ஆனால் அவள் இருந்தது இரண்டாவது பெஞ்ச் ஓரம்.

சில உருவங்கள், ஆசிரியர்கள், காலை நேர கூட்டு பிரார்த்தனை, வாய்ப்பாட்டு நேரம் என எத்தனையோ இன்றும் மங்களாய் நினைவிருந்தாலும்.,
அன்றைய அவள் முகமும்
அந்த மூக்குத்தி அழகும்
இன்றும் மனதில் பிரகாசமாகவே மிளிர்கிறது.

அவள் இரத்த உறவுகள்கூட ஞாபகம் வைத்திருக்குமாவென தெரியவில்லை,
ஆனால்
எனக்குள் அவள் இன்றும் ஒளி குறையா காட்சிப்படங்களே..

அவளை நான் நேராக பார்த்திருக்கிறேன்,
அவளைவிடவும் அந்த மூக்குத்தியை.

ஏதோ ஓர் தகர டப்பாவில் இருக்கும்
இனிப்பு மாத்திரைகளை ஆசிரியர் கொடுக்க, அதை அவளிடம் கொடுத்திருக்கிறேன்.,
அவளுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன்.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே உள்ள பள்ளி அது

சில பிரம்படிக்கு பயந்து
குருட்டு மனப்பாடம் செய்த காலத்தின்
ஆரம்ப நாட்களில் ஆரம்பமான எனது வேண்டுதல்களில்,
எனக்கு அடி விழமென்ற கவலையை விட,
அடி வாங்கும் பெயர்பட்டியலில்
அவள் பெயர் இருக்கக்கூடாது என்று வேண்டிய நாட்களே அதிகம்.

எனது வேண்டுதல்களும் அதிகமாகவே பலித்துவிடும்,
அதில் ஓர் அலாதி இன்பம்.

காமம் அறியா பருவம் அது.,
உண்மையில் ஹார்மோன்களுக்கு சம்பந்தமில்லாததுதானோ இந்த காதல்.

எட்டாம் வகுப்பு முடிந்த பின்
அவள் வேறு பள்ளி நான் வேறு பள்ளி
பார்ப்பது அரிது


பின்,
காலம் கடந்து ஒரு சோதனைக்காலத்தில்,
சொந்த ஊரில் தலைமறைவாய் வாழும் வாழ்க்கை வாழ்ந்த நேரத்தில்
ஒரு நாள் அவளை காணும் வாய்ப்பு..

பள்ளிகாலத்தில் வெறும் நொடிக்கணக்கில் மட்டுமே பேசிய நான்,
இன்று சில மாற்றங்களுன் தொடர்ந்தேன்..

முடிவில்,
பலநாள் வெளிப்படுத்த வாய்ப்பில்லாத புன்னகை அன்று அதிகமாகவே என்னுள் பிரதிபலித்தது.

உண்மையில் இயற்கைக்கும் குழந்தைகளுக்குமானது என் புன்னகை,
இடையில் நீ வந்ததும் ஓர் ஆச்சர்யம்தான்.

அடுத்தமுறை அவளை காணும் வாய்ப்பு கிடைத்தால்,
”உனக்கு இந்த மூக்குத்தி ரொம்ப அழகா இருக்க்கு” என்று சொல்லவே ஆசை.

மூக்குத்தி சொந்தங்களில் அடுத்து
மூன்றாவதாய் வந்தவள் இவள்..

நானாய் காதலுரைத்த முதல் காதல் இவள்

என்னை அரைகுறை கவிஞனாக்கியவள்

பார்த்தேன்.. புன்னகித்தேன்
பதில்கிடைத்தது என்பது உண்மை
ஆனாலும்
சில முயற்சிகள் தோல்வியிலே முடிந்தது..

பேசுவதற்கான வாய்ப்புகளில்
இடையூறு ஏற்பட..
எழுத்துக்களைப் பயன்படுத்தினேன்.

முதன்முறை எழுதிய அந்த வார்த்தைதொகுப்பிற்கு
இன்றளவும் வேறேதும் இணையில்லை..

நான்குவரிகளில் அழகாய் அமைந்த
அந்த வார்த்தைதொகுப்பை
நான்காய்மடித்து
கண்-கை ஜாடைகளுடன் அவள்புறம் நீட்டினேன்..

சரியாய் அவள்புறம் விழுந்தது..

பனித்துளிகள் அதிகம் விழுந்துகொண்டிருந்த மாலைநேரம் அது..

எத்தனையோ மணித்துளிகள் ஓடின..

அவள் எடுக்கவேயில்லை..

அவளும் கடந்துசென்றாள்..

பின்
என் கைகள் கிழித்துப்போட்ட வலிகள்
அந்த கடிதம் மட்டுமே அறியும்..

அதன்பின்
அவள் சம்மதம் அடைந்த கதைகள் இருவருக்குமானது.,
பிரிந்துபோனதும்தான்.


அடுத்த
சில வருடங்களுக்கு பின் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஓர் நடமாடும் சிலையை கண்டபின்தான் என் வாழ்க்கை மறைமுகமாக மூக்குத்திகளைச் சார்ந்தே நகர்கிறது என்பதை அறிந்தேன்

பார்த்தேன்
கவிபாட நினைத்தேன்..

சிகப்பு நிற தாவணியுடன் பச்சை நிற சட்டை அணிந்திருந்தாள்..

குமரி பகவதியின் ஒற்றைக்கல் மூக்குத்தி போலவே, இவள் மூக்குத்தியும் அந்நிகரான ஓர் ஒளியுடன் சிரித்துக்கொண்டிருந்தது


ஆம், அந்த ஒற்றைக்கல் மூக்குத்தியின் புன்னகையில் முழுதாய் மயங்கி
அவள்புறம் விழுந்துவிட்டேன்.

உண்மையில், எங்கெங்கெல்லாம் மூக்குத்திகளை காண்கிறேனோ,
அங்கெல்லாம் ஏதோ ஓர் மகிழ்சி
மொத்தமாய் சூழ்ந்துகொள்கிறது..

அம்மா
தோழி
காதலி
அந்த சிகப்பு நிற தாவணி
என தொடரும் இந்த பட்டியல்
இன்னும் நீளவேண்டும் என்பதே
என் விருப்பம்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (27-Nov-17, 12:02 pm)
பார்வை : 385

மேலே