நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-03

....நெஞ்சோடு கலந்திடு....

அத்தியாயம் : 03

அவன் என் கையைப் பிடித்து நிறுத்தியும் நான் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை...அந்த நிலையிலேயே அவனுடனான வாக்குவாதத்தை தொடர்ந்தேன்...

"கைய விடு வருண்..."

"நான் இன்னும் பேசி முடிக்கலை நித்தியா..."

"இதான் நீ பேசுற இலட்சணமா..??கைய விடு முதல்ல..."

அவனிடமிருந்து கையை விடுவிக்க எவ்வளவு போராடியும் என்னால் அவனிடமிருந்து என் கைகளை விடுவித்துக் கொள்ள முடியவேயில்லை...

"நான் சொல்றதை முதல்ல கேளு நித்தியா...அப்புறமா உன் கையை விடுறதா...விட வேண்டாமான்னு நீயே சொல்லு...."

"நீ உன் இஸ்டத்துக்கு என்னவேணும்னாலும் பேசுவ...அதை நான் நின்னு கேட்டிட்டு இருக்கனுமா...?.."

"நான் பேசினதில எந்தத் தப்பும் இருக்கிறதா எனக்குத் தோனலை..."

இவ்வளவு நேரமும் இறங்கி வந்து கொண்டிருந்த அவன் குரல் மறுபடியும் உச்சத்தை தொட்டது...

"திமிரைப் பார்..."

"நீ எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோ நித்தியா...நீ வாய் வார்த்தைக்கு கூட என்னைவிட இன்னொன்றை பிடிக்குதுன்னு சொல்றதை என்னால ஏத்துக்க முடியல..."

அவனது குரலில் இருந்த எதுவோ ஒன்று அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது...அவனது இரு விழிகளும் என்னிடம் எதையோ சொல்வதற்காய் காத்துக் கொண்டிருந்தன...அவனது உதடுகள் அதைச் சொல்வதற்காய் துடித்துக் கொண்டிருந்தன...

அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்...சில விநாடிகளுக்கு எங்களிருவரையும் மௌனமே சூழ்ந்து கொண்டது...அந்த மௌனத்தை முதலில் நானே உடைத்தெறிந்தேன்...

"ஏன்...??.."என் குரல் கூட அவ்வளவு மென்மையாக ஒலிக்குமென்று அன்றுதான் நானும் தெரிந்து கொண்டேன்...

ஆனால் நான் கேட்டது அவனுக்குப் புரியவில்லை போலும்...அதனால் என் மீது புரியாத பார்வையொன்றைப் படரவிட்டான்...

"ஏன்...உன்னால ஏத்துக்க முடியல்ல...??..."

"ஏன்னு உனக்குத் தெரியாதா நித்தியா...??..."என்றவனின் பார்வை என் விழிகளை ஊடுருவிச் சென்றது...

"தெரியல சொல்லு..."நான் சொல்வது பொய் என்று அறிந்தும் நான் அதைச் சொன்னேன்...அதை அவனது உள்ளமும் அறியும்...ஆனாலும் அதற்குமேல் அவன் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை....

பதினெட்டு வருடங்களாக எனக்குள் சுழன்று கொண்டிருந்த வார்த்தைகளை,அந்த அழகிய நேரத்தில்...கொட்டிக் கொண்டிருந்த அடை மழையினுள்...என் கண்களை நேருக்கு நேராய் சந்தித்தவாறு அவன் சொன்னான்....

"ஏன்னா....ஏன்னா நான் உன்னைக் காதலிக்குறேன் நித்யா...."

"இன்னைக்கு நேத்து இல்லை...எப்போ எனக்கும் உனக்குமான உறவு துளிர்விடத் தொடங்கிச்சோ....அந்த விநாடியிலிருந்து நான் உன்னைக் காதலிச்சிட்டு இருக்கேன் நித்தியா...உன்னைவிட இந்த உலகத்தில எனக்கு வேற எதுவுமே முக்கியமில்லை....."

"இது தான் காதல்னு தெரியாத வயசில இருந்தே நீ மட்டுமேதான் எனக்குள்ள இருந்திருக்க...என்னைக்குமே நீ மட்டுமேதான் இருப்ப நித்தியா..."

"எனக்கு இந்த காதல் வசனமெல்லாம் பேசி என்னோட காதலை வெளிபடுத்தத் தெரியல நித்தியா....என் மனசில என்ன இருந்திச்சோ அதை அப்படியே சொல்லிட்டேன்..."

"காதல் வசனம் பேசத் தெரியாமலிருக்கலாம்...ஆனால் உன்னைக் காதலிக்கத் தெரியும் நித்தியா....உன்னை உனக்காக மட்டுமே காதலிக்கத் தெரியும்...."

"இப்போ சொல்லு நித்தியா,உன்னோட கையை விடட்டுமா??இல்லை வாழ்க்கைபூராவும் பிடிச்சுக்கிட்டுமா...??..."

இவ்வளவு அழகாகக் கூட ஒருவனால் காதலைச் சொல்ல முடியுமா...??முடியும் அது அவனால் மட்டுமே முடியும்...காரணம் எங்கள் இருவருக்குள்ளும் இருந்த காதல் அவ்வளவு அழகானது...

ஆனால் அவனது காதலை அந்த அழகான தருணத்தில் ஏற்றுக்கொள்ளத்தான் என்னால் முடியவில்லை...அப்படியே அவனை அள்ளி அணைக்க வேண்டும் போல் எனக்குள் எழுந்த உணர்வலைகளை அப்படியே எனக்குள் அடக்கிக் கொண்ட நான்,என் மனதை மறைத்து அவனிடம் பொய்யுரைத்தேன்...

அந்த வார்த்தை அவனை எவ்வளவு காயப்படுத்தும் என அறிந்தும் அதை நான் சொன்னேன்....

"விட்டிரு...."ஒரு துடிப்பே இல்லாமல் என்னிடத்தில் இருந்து வந்து விழுந்தது அந்த வார்த்தை...

"நித்தியா...."என்று விளித்தவனின் குரலிலும் முகத்திலும் சொல்ல முடியாத வேதனையும் வியப்பும் ஒட்டிக் கொண்டிருந்தது....

"கையை விட்டிரு வருண்...."

அதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை...என் கையை விட்டுவிட்டான்...நானும் அதற்குமேல் அந்த இடத்தில் நிற்கவில்லை...வந்து விழத் தொடங்கிய கண்ணீரையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து வேகமாக என் சைக்கிளை நோக்கி நடக்கத் தொடங்கினேன்...

நான் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள அவனுக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டிருக்க வேண்டும்...ஆனால் அதன் பின் அவன் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் காதுகளில் தெள்ளத் தெளிவாகவே விழுந்தது...

"உன்னோட கையை வேணும்னா நீ என்கிட்டையிருந்து எடுத்திருக்கலாம் நித்தியா....ஆனால் எனக்குள்ள வாழ்ந்துக்கிட்டு இருக்கிற உன்னை,என்னைக்குமே உன்னால என்கிட்டயிருந்து எடுத்துக்க முடியாது...."

"இன்னைக்கு உன்னோட உதடுகள் பொய் சொல்லியிருக்கலாம்...ஆனால் உன்னோட ஒவ்வொரு துடிப்பும் எனக்கு உன்னோட காதலைச் சொல்லியிருக்கு நித்தியா...."

"இப்போ என்கிட்டயிருந்து மறைச்சிட்டு போற உன்னோட காதலை,நீ என்கிட்ட திறந்து காட்டும் வரைக்கும்...நான் உன்னைத் தொடர்ந்திட்டே இருப்பேன்...உன் பின்னாடி நிழல் மாதிரி வந்திட்டே இருப்பேன் நித்தியா..."

"இந்த உலகத்தை விட்டு என்னோட உயிர் பிரிஞ்சாலும்,உன்னை நான் காதலோட தொடர்ந்து வந்திட்டே இருப்பேன்....இதை உன்னோட ஞாபகத்தில என்னைக்குமே வச்சுக்கோ...."

அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை இடியாகத் தாக்க,சைக்கிளில் ஏறி வேகமெடுத்துக் கிளம்பினேன் நான்...



நினைவுத்தூறல்கள் தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (30-Nov-17, 8:34 am)
பார்வை : 439

மேலே