எங்கனம் உணர்த்துவேன்

வேஷம் போட ஏதுமில்லை எனதன்பு இறைவா.
காணும் இடமெல்லாம் நீ..
காணும் காட்சியெல்லாம் நீ...
பொய்யல்ல.
மெய்யிலிருந்து மெய் கண்ட உண்மை இயற்கை விளக்கம் நீ.

உன்னை உணர்ந்தபின் ஏதுமில்லை எனதன்பு இறைவா.
சுத்தமான தண்ணீரில் நீ.
ஆரோக்கியம் தரும் உணவில் நீ.
மெய் கொடுத்து மெய்யுணர்த்திய இறைவா,
கடையன் நான் வாழ்வுக் கடலை நீந்தி கரை சேரி கலங்கரை விளக்கமானாய் நீ...

உன்னை அறியாது ஏதுமில்லை எனதன்பு இறைவா.
மாயை விலக்கி அறிவுக்கு அறிவூட்டுவாய் நீ..
நடைமுறை எதுவாயினும் நல்லதும், கெட்டதும் பிரித்தறிந்து அறிவிப்பாய் நீ..
நீயின்றி நான் கண்ணில்லா குருடன்,
நாவன்மையில்லா ஊமை,
காதறுந்த செவிடன் என்று உண்மையுணர்த்தும் ஞானமானாய் நீ...

உண்மையில் என்னை அறிந்தது உன்னைத் தவிர வேறு யாருமில்லை எனதன்பு இறைவா.
இம்மையிலும் அறிந்தாய் நீ.
மறுமையிலும் அறிந்தாய் நீ..
எம்மையிலும் அறிவாய் நீ...
உன்னை மறந்து எவரிடத்திலே நிரந்தர அன்பு கொள்வேன்?
உலகமெங்கும் நீ.
உயிர்கள் யாவும் நீ..
எறும்பைக் கொன்றால் உன்னைக் கொல்கிறேன்.
ஒரு இலையைக் கிள்ளி எறிந்தால் உன்னைக் கிள்ளுகிறேன்..
என்னை வருத்தினாலும், உன்னை வருத்துகிறேன்.
எங்கனம் நானும் உலகிற்கு உணர்த்துவேன்?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Dec-17, 8:52 am)
பார்வை : 658

மேலே