பத்து உலக மஹா இலக்கிய அதிசயங்கள்

உலக மஹா அதிசயம் இந்தியாவில் நடந்தது. அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. இது இந்திய நாகரீகத்தின் தனித் தன்மையைக் காட்டுகிறது. அதற்குப் பின்னர் மேலும் சில அதிசயங்கள் நடந்தன. சுருக்கமாக விளம்புகிறேன்.



ஒரு நாட்டின் நாகரீக முன்னேற்றத்தைக் காட்டும் அளவுகோல் எது?

அந்த நாட்டின் இலக்கியங்கள் ஆகும்.



அதிசயம் 1

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியில் சுமார் 450 புலவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேலான கவி தைகளை எழுதினர். அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் இன்னும் 400 புலவர்கள் கவிபாடினர். அவர்கள் பாடியவை ஆயிரத்துக்கும் மேலான துதிப் பாடல்கள் ஆகும். இது முதல் அதிசயம் ஆகும். ஏனெனில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு 850 புலவர்கள் கூட்டாகக் கவி பாடியதில்லை. சங்க இலக்கியப் புலவர்கள் அத்தனை பேருடைய பெயர்களும் நம்மிடம் இருக்கின்றன இதே போல உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதம் பாடிய 400 கவிஞர்களின் பெயர்களும் நமக்குக் கிடைத்தன.

அதிசயம் 2

இரண்டாவது உலக அதிசயம் இதிலுள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை! உலகில் வேறு எங்கும் இவ்வளவு பெண்பாற் புலவர்களின் குழுவைக் காண முடியாது. தமிழில் குறைந்தது 25 பெண்பாற் புலவர்களையும் வேதத்தில் குறைந்தது 20 பெண் புலவர்களையும் காண்கிறோம்.



இந்த இரண்டு அதிசயங்களும் காட்டும் உண்மை என்ன?

உலகிலேயே மிகப் பழமையான நாகரீகம் இந்து அல்லது இந்திய நாகரீகமே. எந்த ஒரு நாடும் இவ்வளவு அறிஞர் பெருமக்களை அக்காலத்தில் அளிக்கவில்லை.



பழமையான நாகரீகம் என்பதோடு மிகவும் முனேறிய நாகரீகம் என்பதும் இதனால் அறியப்படுகிறது.



தமிழர்களுக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் எழுதி இருந்தாலும் தமிழர்களைப் போல அவர்கள் மாபெரும் சங்கம் வைத்து மொழியை வளர்க்கவில்லை . வேதங்களோ கிரேக்க மொழிக்கு மிக மிக முந்தியவை.



அதிசயம் 3

மூன்றாவது இலக்கிய அதிசயம் வேதங்களைப் பாதுகாத்த முறையாகும்; பிரமாண்டமானதொரு இலக்கியத்தை — அதாவது 400 க்கும் மேலான புலவர் பாடியவை- ஆயிரத்துக்கும் மேலான துதிகளைக் கொண்டவை — உலகில் எங்குமே வாய் மொழியாகப் பாது காக்கப் படவில்லை இதுவும் இந்திய மக்களின் அறிவாற்றலுக்குச் சான்று பகரும்.





அதிசயம் 4

நாலாவது அதிசயம் பிரம்மாண்டமான இலக்கியக் குவியலாகும். தமிழர்களும், கிரேக்கர்களும், எபிரேயர்களும் எழுதுவதற்கு முன்னதாக பிரம்மாண்டமான துதிப்பாடல் தொகுப்பை- சமய உரை நடைத் தொகுப்பை– வேத கால இந்துக்கள் உருவாக்கிவிட்டனர். அதாவது நான்கு வேதங்களில் மட்டுமே 20,000 க்கும் மேலான மந்திரங்கள்; அதற்குப் பின்னர் பிராமண இலக்கியங்கள், ஆரண்யகங்கள் உபநிஷத்துக்கள் என்னும் உரை நடை இலக்கியங்கள் தோன்றின. இதையும் ஒப்பற்ற முன்னேற்றம் என்று சொல்லலாம்.



எகிப்திய நாட்டில் பபைரஸ் (Papyrus) என்ற புல்லில் பல நூல்கள் உள. சுமேரியாவில் – மத்திய கிழக்கில் — 60,000 களிமண் பலகைகள் (Clay Tablets) உள. ஆயினும் இலக்கியம் என்று சொல்லும் நயமுள்ள பகுதிகள் மிகச் சிலவே.



அதிசயம் 5

ஐந்தாவது அதிசயம் உபநிஷத்துக்கள் என்னும் தத்துவ நூல்களாகும். இந்தியாவில் இந்த தத்துவ நூல்கள் உருவாகிய சில நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜொராஸ்டர், மோஸஸ், மஹாவீரர், புத்தர், கன்பூசியஸ் என்று உலகின் பல பகுதிகளில் மஹான்கள் தோன்றினர்.





அதிசயம் 6

ஆறாவது அதிசயம் மிக நீண்ட மன்னர் பட்டியலும், குருமார்கள் (Long List of Kings and Teachers) பட்டியலும் ஆகும். 140 தலைமுறைகளின் வரிசை அப்படியே புராணங்களில் உள்ளன. ஐம்பதுக்கும் மேலான ‘குரு’க்களின் பெயர்கள் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் உள்ளன. இப்படிப்பட்ட நீண்ட பட்டியல் உலகில் வேறெங்கும் இல்லை; வரலாற்று ஆசிரியர்களாகக் கஷ்டப்பட்டு நமக்குக் கொடுத்த பட்டியல்தான் உள்ளது– கி.மு இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரோரஸஸ் (Berossus) முதலியோர் கொடுத்த வரலாற்றுப் பட்டியல் பல முரண்பாடுகளுடன் இருந்ததை வரலாற்று ஆய்வாளர்கள் தட்டிக்கொட்டிச் சரிப்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் முன்னதாக கிரேக்க ஆசிரியர்கள் நம்முடைய 140 தலை முறை பற்றி வியப்போடு எழுதிவைத்துள்ளர்.





அதிசயம் 7

ஏழாவது இலக்கிய அதிசயம் அசோகர் கல்வெட்டுகளாகும் . கி.மு மூன்றாம் நூற்றன்டில் திடீரென ஆப்கனிஸ்தான் முதல் இலங்கையின் தென்கோடி வரை பிராமி லிபியில் (Brahmi script) பாலி மொழியில் கல்வெட்டுகள் தோன்றியதாகும். இதில் மிக முக்கியமான உண்மை வெளியாகியது. இந்தியர்கள் மஹா மேதாவிகள் — பட்டி தொட்டி தோறும் எழுத்தறிவு மிகுந்து இருந்தது. கர்நாடகத்தில் கூட அசோகர் கல்வெட்டுகள் கிடைத்து இருக்கின்றன. சீன யாத்ரீகர் குறிப்பிடும் காஞ்சீபுரக் கல்வெட்டுகள் மட்டும் படை எடுப்பில் அழிந்துவிட்டன. எழுத்தறிவு இருந்ததால்தான் இப்படி கல்வெட்டுகளைக் காண முடிகிறது. இது உலக அதிசயம் (Brahmi script from Afghanistan to Kandy in Sri Lanka). இப்படிப்பட்ட பெருநிலப்பரப்பில் உலகில் வேறு எங்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் காணக் கிடைக்காது. இந்தியர்கள் எந்த அளவுக்கு எழுத்து அறிவு பெற்று இருந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.



அதிசயம் 8

எட்டாவது உலக அதிசயம் பிராமி என்னும் எழுத்தாகும். இந்த லிபி மூலம் தமிழ் உள்பட தெற்காசிய எல்லா மொழிகளுக்கும் லிபியை/ எழுத்தை அளித்த இலக்கிய அதிசயம் ஆகும். இது பீனிசிய எழுத்தில் இருந்து வந்ததாகவும் வரவில்லை என்றும் இரு வேறு கருத்தூக்கள் உண்டு– ஆயினும் இதைக் கண்டு வெளிநாட்டினர் வியக்கின்றனர். ஏனெனில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய சம்ஸ்கிருத எழுத்து முறைக்குத் தக, அகர (alphabet) வரிசைப்படி, இந்த எழுத்து முறை அமைந்துள்ளது– மற்ற மொழி எழுத்துக்கள் இப்படி அமையவில்லை என்பது அவர்கள் கூற்று.









அதிசயம் 9

ஒன்பதாவது உலக மஹா இலக்கிய அதிசயம் பாணினியின் அத்புதமான ஸம்ஸ்கிருத வியாகரணம் ஆகும் அஷ்டாத்யாயீ என்னும் இந்த இலக்கண நூலைக் கண்டு வியக்காதோர் உலகில் இல்லை. பாரதி தனது பாடல்களில் வேத முரசு உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்று சொன்னதோடு பாணினியையும் உபநிஷத்துக்களையும் தனியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் வேறு எந்த மொழிக்கும் இலக்கண நூல் என்பதே இல்லை; இலக்கணம் இருந்ததா (?!?!) என்பதும் ஐயப்பாடே.







அதிசயம் 10

பத்தாவது உலக மஹா இலக்கிய அதிசயமும் இந்தியாவில் நிகழ்ந்ததே! மொழி தொடர்பான விஷயங்களை உவமையாகக் காட்டுவது, எண் தொடர்பான அடையாளக் குறியீடுகளை (Number symbolism) வைத்துப் பாடுவது. மொழி இயல் கருத்துக்களை (Linguistic remarks) வேதம் போன்ற துதிப்பாடல்களில் கூடச் சேர்ப்பது வேறு எங்கும் காணாப் புதுமை ஆகும். ஒரு சமுதாயம் இலக்கியத்திலும் மொழியிலும் (Language), மொழி இயலிலும் (Linguistics) வளர்ச்சி அடைந்தால்தான் இத்தைகய ஜாலங்களைச் செய்ய இயலும். சொல் வேட்டுவர்களையும் வில் வேட்டுவர்களையும் ஒருங்கே கண்ட நாடு இது— அரசர்களும் கவி பாடிய நாடு இது. சங்கேத மொழியில் பாடுவதே (Secret, hidden language) எங்கள் தொழில் என்று வேத கால முனிவர்கள் ஆடிப்பாடிய நாடு இது. இப்படிப்பட்ட ரஹஸிய விஷயங்கள் இருந்ததால் வேதத்தை எழுதாக் கற்பு என்றும் மறை (Secret, hidden meaning) என்றும் மொழி பெயர்தான் தமிழன்.



இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அ திசயங்கள். எகிப்திலும் பாபிலோனியாவிலும் கல் ஓவியம் இருக்கலாம்; சொல் ஓவியம் இல்லை. ஒரு தத்துப் பித்து ஜில்காமேஷை (Gilgamesh) வைத்துக் கொண்டு கூத்தாடலாம். ஆனால் ரிக் வேதத்தின் க டைசி துதிப்ப்பாடலுக்கு அது ஈடு இணையாகாது.



வேதத்தில் மொழி, மொழி இயல் பற்றி வரும் குறிப்புகளையும் உலக நலன் பற்றி வரும் வேதத் துதிகளின் எண்களையும் குறிப்பிட்டு கட்டுரையை முடிப்பேன்



மொழி இயல் கூறும் துதிகள்

RV 1-164, 4-58, 8-59, 8-100, 10-71, 10-114, 10-125, 10-177



மொழி / பேச்சு பற்றிய துதிகள்

RV 1-164, 10-71, 4-3, 10-125

உலக நலன் பற்றிய துதிகள்

10-191, , YV 36, AV 19-60, AV 7-69, AV 3-30,



வாழ்க இந்தியா! வளர்க இலக்கியம்!!



ஸ்வாமிநாதன்

எழுதியவர் : (4-Jan-18, 11:39 pm)
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே