பாசமில்லா குடும்பம்

மூலையில் ஒடுங்கிப் போயிருந்த என்னை இப்போது சீந்துவாரில்லை. மனசெல்லாம் எனக்கு ரணகளமாகமாறி வலித்தது. யாரிடம் போய் என்னத்தச் சொல்றது? யாராவது நான் சொல்றதக் காது கொடுத்துக் கேபபாகளான்னா... கிடையாது. அவங்க அவங்க வேலை அவங்க அவங்களுக்கு. ஆயிரத்தெட்டுக் கவலைகளோட அலஞ்சு திரியறவங்களுக்கு என்னோட கஷ்டத்தக் கேக்கத்தான் முடியுமா? அல்லது அதுக்குப் பரிகாரந் தேடத்தான் முடியுமா? எனக்கு மனசே நொறுங்கி வலிச்சது. இதயம் இற்றுப் போனது போலிருந்தது. எப்படியெல்லாம் இருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி ஓடியது என் மனம். அடடா… எளம் பிராயத்துலே எப்படியெல்லாம் ஓடிஓடிச் சம்பாதிச்சேன். பருத்தி வியாபாரி பக்கிரிசாமின்னா சுத்துப்பட்டுக் கிராமத்துல சின்னப் புள்ளியில இருந்து பெரியாளு வரைக்கும் தெரியாதவங்களே இருக்க மாட்டாங்க. காலையில ஏந்திருச்சுச் சைக்கிள எடுத்துக்கிட்டுக் கௌம்புனா சாயந்தரம் இருட்டுறபோதுதான் வீட்டுக்குப் பருத்தி மூட்டைகளை வாடகை வண்டியில ஏத்திக்கிட்டு வருவேன். சில சமயங்கல்ல பருத்தி கொஞ்சமாத்தான் கெடைக்கும். அப்போது என்னோட சைக்கிள் கேரியர்ல வைச்சுகிட்டு வருவேன். இப்படியே வாயக்கட்டி
வயித்தக்கட்டி அஞ்சு ஏக்கரு நெலத்த வாங்கிப் போட்டேன். நல்ல நெலம். பொன்னுப் போட்டாப் பொன்னு வெளையும். என்னோட மனைவி அழகி. ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரி. அவ பேருக்கு மட்டும் அழகி இல்ல பாக்குறதுக்கு ரொம்ப அழகுதான். அவ கட்டுச் செட்டாக் குடும்பம் நடத்துனதாலதான் என்னால இப்படி நெலம் நீச்சுன்னு வாங்க முடிஞ்சது. எனக்கு மணியாட்டம் ரெண்டு பசங்க. மூத்தவன் கண்ணுச்சாமி. இளையவன் பொன்னுச்சாமி என்னோட அப்பா பேர மூத்தவனுக்கும் என் மனைவியோட அப்பா
பேர இளையவனுக்குமா வச்சோம். நானும் என்னோட மனைவியும் ஒடம்பக் கடம்பால ஒழைச்சு அவனுக ரெண்டு பேரையும் படிக்க வச்சோம்.

சும்மா சொல்லக் கூடாது. அவனுக ரெண்டு பேரும் படிப்புல ரெம்பக் கெட்டிக்காரனுக. நாங்க நெனச்சதுக்கு மேலா நல்லாப் படிச்சாங்க. காலம் ஓடிருச்சு. பெரியவனும் சின்னவனும் பெரிய கம்பெனியில இஞ்சினியரா வேலைக்குச் சேர்ந்தாங்க. கைநெறயச் சம்பாதிச்சாங்க. சொந்தத்தில பெரியவனுக்குப் பொண்ணப் பாத்துக் கட்டி வச்சோம். மருமகளும் நல்ல பொண்ணாத்தான் இருந்தா.
சின்னவனுக்குத் தூரத்துச் சொந்தத்துல ஒரு பொண்ணப் பாத்துக் கட்டி வச்சோம். அவ மொதல்ல நல்லாத்தான் இருந்தா. அப்பறம் போகப் போக ரொம்ப மூஞ்சி மொகத்தக் காட்ட ஆரம்பிச்சுட்டா. சின்னவனும் அவன் மனைவி சொல்லறத வேதவாக்கா எடுத்துக்கிட்டான். பெரியவன் பெங்களுருலயும் சின்னவன் சென்னையிலுமா இருந்தாங்க அவனுக சம்பாதிச்சாலும் நான் மட்டும் என்னோட பருத்தியாவாரத்த விடல. தொடர்ந்து செஞ்சிக் கிட்டேதான் இருந்தேன். நானும் என்னோட மனைவி அழகியும் மட்டுந்தான் இருந்தோம். எனக்கும் வயசு எழுவத்திரண்டு ஆயிருச்சு. திடீருன்னு என்னோட வாழ்க்கையில புயலு வீச ஆரம்பிச்சிருச்சு. என்னோட மனைவி அழகி என்னத் தவிக்கவிட்டுட்டுப் போயிச் சேந்த்துட்டா. புண்ணியவதி என்னை அனாதையா விட்டுட்டுப் போயிட்டா. பிள்ளைங்க தங்களோட பொண்டாட்டி குழந்தைகளோட வந்து சீக்கிரமாக் காரியத்த முடிச்சிகிட்டுப் போயிட்டாங்க. நான் மட்டும் தனிமரமா நின்னு அழுதேன். ரெண்டு பயலுகளும் என்னை வாங்கப்பான்னு கூப்புடல. அவனவனுக்கு அவனவன் வேலையும் சொகமுந்தான் பெரிசாப்போச்சு. அவனுங்க என்னைத் தங்களோடஅழைச்சிகிட்டுப் போகாட்டியும் பரவாயில்ல. அதுக்கு அவனுக என்னிடம் சொன்ன காரணம்தான் என் மனசப் போட்டு இன்னமும் ரம்பமா அறுத்துக்கிட்டு இருக்குது. என்னோட மனசுக்குள்ள முள்ளு குத்தினமாதிரி ஆகிப்போச்சு. நான் மூத்தவன் மொகத்தப் பாத்து அழுதேன்.
அவன் என்னோட கண்ணீரைத் தொடச்சி விட்டுட்டு, அப்பா எங்க தன்னோட கிளம்பி வந்துருவாரோன்னு நெனச்சுக்கிட்டு, ‘‘ஒங்கள எங்ககூட அழைச்சிக்கிட்டுப் போகலாம் தான். இருந்தாலும் அந்த டவுனு வாழ்க்கை ஒங்களுக்கு ஒத்து வராதுப்பா. கோவுச்சுக்காதீங்க ஒங்களுக்கு அந்தக் கிளைமேட் வேற ஒத்துக்காதுப்பா. நான் பணம் அனுப்பறேன். அப்பப்ப வந்து வாத்துட்டுப் போறேன்னு
சொல்லிட்டு என்னைய விட்டுட்டுப் போயிட்டான்.

சின்னவன் என்னோட மொகத்தையே பாக்காம, ‘‘அப்பா என்னோட நெலமைதான் ஒனக்குத் தெரியுமில்லப்பா… ஒன்னோட மருமக அடங்காப்பிடாரிப்பா. கோவுச்சிக்காதப்பா. எனக்கு ஒன்ன அழைச்சிட்டுப் போகலாண்ணு ஆசைதான்… இருந்தாலும் என் பொண்டாட்டிய நெனச்சாத்தான் ரொம்பப் பயமா இருக்குப்பா… நானும் ஒனக்குப் பணம் அனுப்பறேன்பா… அப்பப்ப வந்து பாத்துட்டும் போறேம்பா…’’ என்று சமாதானம் கூறிவிட்டு நான் கூறுவதைக் கேட்பதற்குத் தயாரின்றி வேகமாக ஊருக்குக்
கிளம்பிவிட்டான். எமகாதகனுக. அப்பன வச்சிக் கஞ்சி ஊத்தத் துப்பில்ல. ஒண்ணுக்குமாகாத காரணங்களச் சொல்றானுக. இனி அவனுக என்ன வந்து வம்படியாக் கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டேன். வீடு வெறுச்சென்றிருந்தது. சிறுகுழந்தை போல் நான் என் மனைவி போன இடம், அவள் கோலம் போட்ட இடம், அவளும் நானும்
உட்கார்ந்து பேசிச்சிரித்த இடம் என ஒவ்வொரு இடமாகப் போய் அமர்ந்து அழுதேன். ‘‘அழகி பார்த்தியா… நாம பெத்த புள்ளகள… நீ இருந்திருந்தியின்னா இப்படி நடக்குமா? இல்ல….நடக்கத்தான் விட்டிருப்பியா?.... நான் அவனுக ரெண்டு பேருக்கும் பாரமா ஆயிட்டேன். என்னைய ஏதோ தீண்டத்தகாத பொருளு மாதிரி நெனச்சுட்டுக் கைகழுவிட்டுப் போயிட்டானுக…. என்ன
அவங்களோட கூட்டிட்டுப் போகாட்டியும் பரவாயில்லம்மா… அவனுக சொன்ன காரணத்தத்தான் என்னால ஜீரணிக்க முடியல… அவனுகல உருவாக்க நீயும் நானும் எத்தனை கஷ்டப்பட்டோம்…. எடுக்கா வேஷமெல்லாம் எடுத்தோம்… ஒரு ஒப்புக்காகவாவது அப்பா எங்க கூட வாங்கப்பான்னு சொல்ல அந்தப் பயலுகளுக்கு மனசு வல்லம்மா… தோளுமேல தூக்கி வளத்த அப்பா நானு… அவனுகளுக்கு என்னோட தயவு இப்பத் தேவையில்ல… அதனால என்னைய ஒதுக்கிப்புட்டாங்க… அவனுக கூப்பிட்டாலும் நா
போகமாட்டேன் அழகி… நாமரெண்டு பேரும் வாழ்ந்த இந்த வீட்ட பிட்டுட்டு ஒரு காலத்துலயும் போகமாட்டேன்மா…’’ என்று மனைவியின் புகைப்படத்தைப் பார்த்துக் கூறிக் கொண்டே அழுதேன். நேரம் போனதே தெரியவில்லை. எழுபத்திரண்டு வயதுலயும் இளைஞனைப் போன்றிருந்த நான் என்னோட அழகி இறந்தவுடனேயே தொண்ணூறு வயசுக் கெழவனா மாறிட்டேன். என்னோட மனைவி இருந்த வரையிலும் வராத முதுமை திடீர்னு வந்து என்னைய அமுக்கிருச்சு. நான் பருத்தியாவாரத்தை விட்டுட்டேன். ஊருக்குள்ள டீத்தண்ணியும், சாப்பாடு சாப்பிடவும் கடைக்குப் போவேனே தவிர மத்தபடி தேவையில்லாம ஊருக்குள்ளார போறது கெடையாது. முன்ன மாதிரி ஓடியாடி நடமாட முடியல என்னால. என்னத்தச் சொல்றது. காலம் ஒவ்வொருத்தரையும் எப்படியெல்லாம் ஆக்கினை பண்ணி வச்சுப்டுது. எனக்கு நாடி நரம்பெல்லாம் ஒடுங்கிப் போச்சு. மனசுல என்னோட அழகியச்
சுமந்துகிட்டே இருந்தேன். என்னோட மனைவி எதுத்தாப்புல நின்னுகிட்டு ‘‘வாங்கன்னு கூப்பிடுற மாதிரி ஒரு பிரமை…” ‘‘சீக்கிரமா ஒன்னோட என்னைக் கூட்டிக்கிட்டுப் போயிடு அழகின்னு’’ தெனம் மனசுக்குள்ளேயே சொல்லிக்கிடுவேன்.

பணம் அனுப்புறன்னு சொல்லிப் போன ரெண்டு மகன்களும் கடிதங்கூடப் போடல. எப்பவாவது நெனப்புவந்தா டீக்கடையில இருந்த போனுல அவனுகளோடப் பேசுவேன். அப்பக்கூட எனக்கிட்ட அதிகமாப் பேசாம ரெண்டொரு வார்த்தைகள மட்டுந்தான் பேசுவானுக என்ன செய்யிறது. பாழாப் போன என்னோட மனசு கேக்கமாட்டேங்குது. மகனுகளே அப்பப்ப நெனக்காம இருக்க என்னால முடியல. திடீர்னு ஒரு நாளு என்னோட பையனுங்க ரெண்டுபேரும் வந்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நம்மளப் பாக்கணுமின்னு இப்பவாது இவனுக மனசுல ஆசை வந்துச்சேன்னு நான் நெனச்சுக்கிட்டேன். அந்த நினைப்புல என்னோட மனசு பூரிச்சுப் போச்சு. அந்த சந்தோஷம் ஒரு கணங்கூட நெலக்கலை. ரெண்டு பேரும் என்பக்கத்துல ஒக்காந்துகிட்டு, ‘‘அப்பா நாங்க
ரெண்டுபேரும் வீடு கட்றோம்பா… இருக்குற லோனெல்லாம் போட்டுட்டோம். கொஞ்சம் பணம் பத்தலப்பா… நம்ம நெலம் சும்மாதானே கெடக்குது. அதவித்துட்டு எங்களுக்குப் பணத்தக் குடுத்தீங்கன்னா ரொம்ப நல்லதா இருக்கும்பா…’’ என்று பெரியவன் பேச்சை ஆரம்பித்தான்.

அடப்பாவிகளா… என்னைய நல்லா இருக்கியான்னு கூடக் கேக்க நெனப்பில்லாம… பணத்துக்காக எனக்குச் சோறுபோடுற அந்த நெலத்தை விக்கச் சொல்றீகளே… இதுதான் நீங்க என்மேல காட்டுற பாசமா…? என்று கேட்க நெனச்சேன். இருந்தாலும் கேட்க மனசு வரல… அத அடக்கிக்கிட்டு அவனுக சொல்றதைக் கேட்டுக்கிட்டே இருந்தேன். அந்த நெலத்தைக் குத்தகைக்குவிட்டு அதுல வர்ற
வருமானத்தை வச்சுத்தான் என்னோட இறுதிக் காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன். அது அவனுகளுக்கும் தெரியும். இது இல்லன்ன நான் பிச்சைதான் எடுக்கணுமின்னும் தெரியும். தெரிஞ்சு கேக்குறாங்களே… அடப்பாவிகளா ஒங்களாலதான் எனக்கு ஒதவ முடியல… நான் கஷ்டப்பட்டு வாங்கின நெலந்தான் எனக்கு ஒரு வாய்க் கஞ்சி ஊத்துத. அதுலயும் நீங்க மண்ணள்ளிப் போட
வந்துட்டிங்களேடா… பாவி…’’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நான் யோசிப்பதைப் பார்த்த இருவரும், ‘‘அப்பா நீ யோசிக்காதேப்பா ஒனக்கு நாங்க ரெண்டுபேரும் மாசாமாசம் ஆளுக்கு ஆயிரம் ரூபா அனுப்புறோம். ஒன்னத் தவிக்க விட்டுருவோமாப்பா…’’ என்று ஊரு ஆட்களையும் வச்சுப் பலவாறு கூறி என்னைச் சம்மதிக்க வைச்சு, நிலத்தை விற்றுப் பணத்தை
எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். நான் மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம, ‘சனியன் பிடிச்ச மூஞ்சூறு கெளுறப் புடுச்சு முழுங்கின மாதிரி வாய்மூடி மௌனியாக மனதிற்குள் அழுதவாறே அவர்களுக்கு விடை கொடுத்தேன். எனக்கு நிலம் விற்ற பணத்தில் சல்லிக்காசு கூட அவர்களிருவரும் கொடுக்கவில்லை. பணத்திற்காகப் பாசம் காட்டும் பிள்ளைகளைப் பார்த்து எனக்குச்
சரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு போனவர்கள் சில மாதங்கள் மட்டும் ஆளுக்கு ஆயிரம் ஆயிரம் என்று அனுப்பி வைத்தனர். பின்னர் இரண்டு மாதத்திற்கு ஒருதரம் என்று அனுப்பினர்… நான் தேவையற்ற பொருளாகி விட்டேன். நானே நினைத்துக் கொண்டேன். ‘‘பிள்ளைகளுக்குப் பெற்றோர் பாரமா? அவர்கள் மனம் ஏன் இப்படிக் குறுகிப்போனது.
அடப்பாவிகளா….எல்லாத்தையும் புடுங்கிக் கொண்டு என்னைய இப்படி ஒருவாய்க் கஞ்சிக்குக் கையேந்த விட்டுட்டிங்களடா? நீங்க…என் மனம் சாபம் கொடுக்க நினைத்தது. இருந்தாலும் பிள்ளைப் பாசத்தால் அடக்கிக் கொண்டு போறானுக. அவனுகளுக்கு என்ன கஷ்டமோ…பாவம்… என்று தானகவே சமாதானம் ஆகியது. நான் இப்ப எல்லோருக்கும் ஒரு வேண்டாத பொருளாகி விட்டேன். இப்ப யாரிடமும் பருத்தி வியாபாரி பக்கிரிசாமியத் தெரியுமான்னு கேட்டா ஒருத்தருக்கும் தெரியாது... எல்லோரும் என்னைய மறந்துட்டாங்க. நான் வீட்டின் மூலையில் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தேன். யாராவது ஏதாவது நினைவு வந்து என்னையப் பாத்து ஏதாவது சாப்பிடக் கொடுத்தால்தான் உண்டு… என்ன செய்ய… வாசல்ல வந்து குத்தவச்சு ஒக்காந்துகிட்டு போறவுக வாரவுகளப் பாத்துக்கிட்டே இருப்பேன். யாராவது ஏதாவது வாங்கித் தரமாட்டாகளான்னு. தெரிஞ்ச முகம் ஏதாவது போனா அவங்களை அழைத்துப் பேசுவேன். தெரிந்தவர் என்றால் வந்து என்னையப் பாத்துப் பேசிவிட்டு எனக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துவிட்டுப் போவர் இல்லை என்றால் இல்லை. ஆமாங்க…இதெல்லாம் ஏன் சொல்றேன்னா என்னோட நெலமை ஒங்களுக்கும் வந்துடக் கூடாதுங்க.. நல்லாப் பாத்துக்குங்க. என்னங்க அப்படிப் பாக்குறீங்க… என்னோட பாசமில்லா ரெண்டு
மகனுகளுகிட்டச் சொல்லி என்னைய வந்து பாக்கச் சொல்றீங்களா… என்னங்க…என்ன… இந்தக் கெழவனுக்காக ஈரமனசோடு இதைச் செய்யுங்க… என்னங்க… செய்றீங்களா…!

எழுதியவர் : (28-Feb-18, 5:21 pm)
பார்வை : 847

மேலே