பழித்தது போலப் புகழ்தல் அணி

இஃது இலேசத்தின் பாற்படும் என்ற பிறர்தம் மதம் பற்றிக் கொண்டது; ஒன்றைப் பழித்துக் கூறுவது போலக் குறிப்பால் புகழ்வது. வடநூலார் இதனை ‘நிந்தாஸ்துதி’ என்ப.

எ-டு : ஆடல் மயில்இயலி! அன்பன் அணிஆகம்
கூடுங்கால் மெல்லென் குறிப்பறியான் - ஊடல்
இளிவந்த செய்கை இரவாளன் யார்க்கும்
விளிவந்த வேட்கை யிலன்.

“தோழி! தலைவன் தனது அழகிய மார்பினை நாம் தழுவிக் கூடும்போது நமது மென்மையைக் கருதும் இயல்பிலன்; ஊடலில் தன் தகுதிக்குத் தகாத சொற்களைக் கூறி இரக்கி றான். அவன்வேட்கையை யாராலும் தணித்தல் இயலாது” என்று தலைவி கூற்றாக அமைந்த இப்பாடற்கண், தலைவன் காம நுகர்ச்சியில் தன்வயம் இழக்கும் சுவையறிந்தவன்; அவனால் தான் பெறும் இன்பமும் மிக இனியது என்ற புகழ்ச்சி, தலைவனுக்கு இழுக்குத் தோன்றும் பழிப்பு வகை யால் புலப்படுத்தப்பட்டமையால், இது பழித்தது போலப் புகழ்தல் ஆயிற்று. (தண்டி. 66-2)

எழுதியவர் : (2-Mar-18, 6:30 pm)
பார்வை : 87

மேலே