துரோகம்

நம்பிக்கையால் வாழ்ந்து
நம்பிக்கையாலே வீழ்ந்து
நம்பிக்கையையே நம்பாமல்
இறுதியில் உலகையே
வெறுக்கும் வாழ்க்கையை பார்த்திருக்கிறாயா...

காதலில் நம்பிக்கை
நட்பில் நம்பிக்கை
வியாபாரத்தில் நம்பிக்கை
உறவுகளில் நம்பிக்கை
அரசியல் ஆட்சியில் நம்பிக்கை
தன்னம்பிக்கை
நம்பி நம்பி தோற்றுப்போகும்
நிலையில் மனிதன்
துரோகத்தின் சுவடுகளை
திரும்பி பார்க்கிறான்...

வளர்த்த கடா முட்டும்போது
இடிதாங்கும் நெஞ்சம் கூட
இதன் வலிதாங்க முடிவதில்லை
உண்ட வீட்டுக்கே ரெண்டகம்
கூட இருந்தே குழிப்பறிப்பது
இவ்வளவு நம்பினேனே
ஏமாற்றி விட்டானே
இந்த வார்த்தைகளை
எழுதினால் ஏட்டுக்கும் வலிக்கும்...

வேலியே பயிரை மேய்ந்தால்
பயிருக்கு ஏது பாதுகாப்பு
பாதுகாக்க வேண்டிய
கரங்களே துப்பாக்கியின்
விசையை அழுத்தினால்
உயிருக்கு ஏது தடுப்புசுவர்
மனிதம் பறித்து மனிதன்
உண்டால் தாங்குமா இந்த பூமி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (5-Mar-18, 5:19 am)
Tanglish : throgam
பார்வை : 498

மேலே