பெண்கள் தேவதைகள் ஆனா உங்க வீட்ல

பெண்கள் தினம் என்று வாழ்த்து செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது எல்லா பக்கத்திலும் . சாதனை பெண்களின் புகைப்படங்களை போட்டு வெற்றி முகங்களைக் காட்டிக் கொண்டு வாழ்த்துச் செய்திகள் சொல்லிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள். பெண்கள் தினம் என்று முழங்கி கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஏன் சில விளம்பரங்களும் கூட . எல்லாப் பக்கமும் பெண்கள் தினம் என்ற வாழ்த்துச் செய்தி வெகு பரவலாக மிக உற்சாகமாக ஓடிக் கொண்டிருக்கும்.

பெண்கள் எல்லாம் பெரிது பெரிதாக எதை எதையோ சாதித்தாக காட்டும் போது அதை பார்க்கும் இளம் தளிர்களுக்கும் இளம் பெண்களுக்கும் ஏன் வயது முதிர்ந்த பெண்கள் கூட அடையும் உற்சாகம் அலாதியானது தான் . இத்தகைய ஒரு நாள் ஒரு உணர்த்துதலோடு பெண்டிரின் சிறப்பை உலகுக்கு மட்டுமல்ல ஏன் பெண்களுக்குமே சொல்லிச் செல்கிறது. பெண்களுக்கு ஒரு கம்பீர உணர்வையே தந்து போகிறது . ஒரு ஆணின் விழி ஒரு பெண்ணை நிமிர்ந்து மரியாதையோடு பார்க்க செய்கிறது இந்த தினம் .இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் . அதே தருணம் இன்னும் எத்தனையோ பெண்களுக்கு மகளிர் தினம் என்ற இந்த நாளும் சாதாரண நாளாகவே கடக்கிறது .

சாய்னா நேவால் சாதித்து விட்டாள் என்று தொலைக்காட்சி அலறி அறிவிக்கும் போது அதே கணத்தில்
எத்தனையோ பெண்கள் சாய்ந்து அழுது கொண்டிருக்கிறார்கள். தன் அறை சுவற்றிடமும் தன் தலையணையிடமும் மட்டும் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விட்டு தன் உப்பு சுவை எல்லாம் அவற்றுக்குள் திணித்து விட்டு உதடுகளில் பூசிக்கொள்ளும் ஒரு லிப்ஸ்டிக் போல ஒரு போலி சிரிப்பை அப்பிக்கொண்டு அந்த தேவதை சிறகு உடைந்த தேவதையாக அந்த வீட்டிற்குள்ளோ அந்த அலுவலகத்திலோ அந்த பொது இடத்திலோ வலம் வந்து கொண்டிருக்கிறாள்.

ஒவ்வொரு வீடுகளிலும் தன் அப்பாவின் தங்க மீனாக வாழ்ந்து வந்த இந்த தேவதை புகுந்த வீடு என்ற ஒரு இல்லத்துக்குள் நுழைந்த பின் தான் எத்தனை எத்தனை வேடங்கள் . மனைவியாக தாயாக மட்டுமா மாறுகிறாள் சிறந்த நடிப்பு சாஸ்திரியாகவும் மாற வேண்டி இருக்கிறது. மாமியார் மாமனாருக்கு பிடித்த மாதிரி அந்த ஊருக்கு ஏற்ற மாதிரி அடக்கமா மாறுகிறார்களோ இல்லையோ நடிக்க தொடங்கி பின் அந்த வேஷத்தை வாழ்க்கை ஆக்கிவிடுகிறார்கள். அம்மா வீட்ல வீடு அதிருமளவுக்கு சிரித்த சிரிப்பெல்லாம் அடங்கி இங்கு உதடு மட்டும் விரியும் புன்னகையாக பலருக்குமாறி விடுகிறது

காலையில் இருந்து மாலை வரை நடக்கும் எல்லாவற்றுக்கும் சிரித்தபடியே சமாளித்து கொஞ்சம் நடித்து சில நேரம் அதையும் தாண்டி எதாவது வாய் திறந்து கூறி பின் அதற்கும் வருந்தி என்று பொழுதை கழிக்கும் அந்த தேவதை இரவில் தனியறையில் மட்டும் அவள் அப்பாவின் தங்க மீனாக மறுபடியும் மாறுகிறாள். தன் கணவனிடம் சிணுங்குகிறாள் ஒரு குழந்தையென . சில நேரம் ஒரு படி மேல்சென்று சண்டை போடுகிறாள் . எது எப்படியோ அங்கு மட்டும் அவள் நடிப்பதில்லை அவள் அவளாக இருக்கிறாள். அரவணைக்கும் கணவனாக இருந்தால் அந்த தேவதை இரவிலாவது இளைப்பாறிக்கொள்வாள் இல்லாதவர்கள் இரவிலும் நிம்மதி தொலைக்கின்றனர்.

எப்ப வருவீங்க , என்னங்க வேலையா என்ற அலைபேசி அழைப்பில் அவள் உங்களிடம் எப்போது வீட்டுக்கு வருவீர்கள் என்று கேட்பதற்கு மட்டும் அழைத்தாய் நினைத்து வரேன் வருவேன் என்று கனமான குரலில் தொலைபேசியை வைக்கும் அருமையான கணவன்மார்களிடம் அந்த பெண் சொல்ல விரும்புவது என்ன நான் உன்னை தேடுகிறேன் , அவர் பத்திரமாக வர வேண்டும் என்ற அக்கறை , இன்றைக்கும் தாமதம் ஆனால் போதை ஏற்றிவிடக்கூடாதே என்ற கவலை , உங்களுக்காக அவள் காத்திருக்கும் காத்திருப்பைச் சொல்ல , உங்களுடான உரையாடுலுக்காக உங்கள் அன்புக்காக இப்படி எத்தனையோ உணர்வுகளோடு உங்க மனைவி உங்களை அழைப்பது எத்தனை பேருக்கு புரிகிறது .

இப்படியான சூழ்நிலையில் வாழும் பெண்களுக்கு எப்போதும் சந்தோசத்தை நில்லாத அருவியென வாரி வழங்கி கொண்டிருப்பது குழந்தைகளின் முத்தங்களும் நில்லாமல் தொடரும் அவர்களின் குறும்புகளும் தான் . தாயாகி அவள் பூரித்துப் போகிறாள் தன்னை அவர்களுக்காக அர்பணிக்கிறாள் அதில் அவள் ஆனந்தமும் கொள்கிறாள். தாய்மையைப் போல எதிலும் இன்பம் இல்லை என்பது மறுக்கவியலா நிஜம் ஆனால் அவளும் ஒரு தாயின் குழந்தை . அந்த தேவதைக்கும் அடிக்கடி தாய் மடியும் தந்தையின் தோளும் தேடுவதால் தான் ஊருக்கு கிளம்புகிறாள் . தன் அம்மா வீட்டுக்கு போகும் போது மட்டும் அவள் மீண்டும் குழந்தை ஆகிறாள் எத்தனை வயதானாலும் கூட . அம்மாவின் முத்தங்களும் அம்மா கைகாலை காபிக்கும் அவள் எத்தனை வயதானாலும் குழந்தையென ஏங்குகிறாள் . அப்பாவின் அன்பை கொடுக்கும் கணவன் கிடைத்த பெண்கள் பாக்கியசாலிகள் . அம்மாவின் அன்பை ஒரு கணமேனும் அவரால் உணர்த்த முடிந்தால் அவள் பேரதிர்ஷ்டசாலி .

யதார்த்தத்தில் என்னவோ வேலைக்கு போகும் மனைவிக்கு கூட கணவன் காபி போட்டு தருவதில்லை. ஏன் கணவன் சீக்கிரம் வந்திருந்தால் கூட வந்திட்டியா மனைவியின் காபிக்கு காத்திருக்கிறேன் என்பார் இது தான் எதார்த்தம் .அட என்ன இது இப்போல்லாம் பெண்கள் கணவனை பெயர் சொல்லி தான் கூப்பிட்றாங்க. காலம் மாறிப்போச்சு . ஆண்கள் எல்லாம் இப்போது சமைக்கிறார்கள் என்று ஆயிரம் சொன்னாலும் எல்லாம் கல்யாணமான முதல் வருடம் மட்டும் தான் இது பல வீடுகளில் நடக்கிறது. அப்புறம் எப்பாவது ஞாயிறு அன்று மட்டும் சமைப்பார் அப்புறம் அன்றைக்கும் டயர்டு என்பார்கள் . இப்படி தான் ஆகிவிடுகிறது. அது என்னவோ மனைவி வேலைக்கு போனாலும் சரி வேலைக்கு போகாவிட்டாலும் சரி மனைவிக்கு முடியாத அந்த முன்று நாட்களில் கூட காலை காபி போட்டு மனைவியை எழுப்பாத அன்பான கணவன்கள் தான் உள்ளார்கள் என்பது தான் எதார்த்தம் . அவளுக்கு முடிகிறதோ இல்லையோ எப்படியோ பெட்ரோல் இல்லாட்டியும் மனைவிங்கிற வண்டி ஓடி தான் ஆகணும் .

காலம் மாறிப்போச்சு . பெண்களும் மாறிக்கொண்டிருக்கிறார்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் பல உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கிறார்கள் . ஆனால் பெண்கள் பற்றி ஆண்கள் ஆதி மனது எண்ணம் என்னவோ இன்னமும் அப்படி தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை . காலியில் தன் அலுவலக பெண்ணை மதிக்க தெரிந்த மனிதனுக்கு மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் தன் மனைவியை மதிக்க தெரிவதில்லை . இதெயெல்லாம் இந்த அடிப்படை அதிமேதாவி எண்ணத்தை இந்த தலைமுறையில் மாற்ற முடியுமா என்றால் சத்தியமாக இல்லை தான் . ஆனால்அடுத்த தலைமுறையில் கட்டாயம் மாற்ற முடியும் . இதை எல்லாம் இனி நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இதையெல்லாம் யார் சொல்லிக் கொடுக்க வேண்டும் . ஒவ்வொரு பெண்ணும் குழந்தையைப் பெற்று வளர்க்கும் அம்மாக்கள் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே பெண்கள் உனக்கு கீழ் இல்லை . நீயும் தங்கையும் சமம் னு சொல்லி வளர்த்தால் போதும் . அப்படியே பெற்றோர்கள் நடந்து கொண்டால் போதும் . பையனுக்கு வாங்கி கொடுக்கும் பாண்ட் சட்டயையை பெண்களுக்கு வாங்கி கொடுப்பதில் மட்டுமல்ல எல்லா விஷயத்திலும் பையன் பொண்ணு என்று மகனையும் மகளையும் ஒரே கண்ணோட்டத்தில் வளர்க்க வேண்டும் .

பெண்குழந்தைக்கு அது கேட்காமல் பொம்மை தான் பிடிக்கும் என்று நீங்களாகவே வாங்கி கொடுப்பதும் ஆண் குழந்தைக்கு கார் தான் பிடிக்கும் என்று நீங்களாக வாங்கி குடுப்பதைப்போல தான் குழந்தைகள் வளர்க்கும் குணங்களும் அவர்களின் மன நலன்களும் . தங்கையை சீண்டும் அண்ணனிடம் ஒரு பெண்ணின் மனநிலையை எடுத்துச் சொல்வது கூட அம்மாவின் கடமை தான். ஒரு பெண்ணின் உணர்வுகளை அண்ணனாய் தம்பியாய் புரிந்து கொண்ட ஒருவனால் நாளை ஒரு நாள் வரும் மனைவியின் சிணுங்கலையும் சிரமங்களையும் புரிந்து கொள்ள முடியும் .

அட உனக்கு ஒன்னும் தெரியாது. அவ கிட்ட என்ன கேட்டுட்டு என்று முரடாக நடக்கும் அப்பாவை நீ பேசாம போ என்று சத்தம் போடும் பாராட்டும் அதட்டும் அப்பாவை பார்த்து அந்த மகன் என்ன கற்றுக்கொள்வான் ?பெண்கள் என்றால் ஆண்கள் சொல்வதை கேட்டு நடப்பவர் என்று தானே . அந்த சமயத்தில் தாய் குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் நீயாவது நாளை உன் மனைவியிடம் மரியாதையை கலந்த நேசத்தை செலுத்து என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று கூட ஒரு அன்னை தன் மகனுக்கு சொல்லிக் கொடுப்பது கூட அவசியம்



ஆணும் பெண்ணும் இரு வேறு துருவங்கள் ஆனால் இறைவனால் இணைக்கப்பட்டவை. அப்படி இருக்க
அந்த ஆண் பெண்ணின் உடல்மொழியை புரிந்து கொண்ட அளவுக்கு அவள் உணர்வுகளின் மொழியை புரிந்து கொள்ளவில்லை . புரிந்துகொள்ள முற்படவுமில்லை . உங்கள் மனைவிக்குள் உங்கள் அம்மாவுக்குள் உன் சகோதரிக்குள் கோபம் தெறிக்கும் அவள் கண்களுக்குள் ஒரு குழந்தை இருக்கிறாள் . அந்த குழந்தையை அடிக்கடி ஒரு நாய்குட்டியைப்போல தடவிகொடுங்கள் . அனைத்துக்கொள்ளுங்கள் . எதிர்பாராமல் சமைத்துக்கொண்டிரும் உங்கள் மனைவியின் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்து விட்டுப் போங்கள் அல்லது வாசனை தூக்குது என்று இரு வார்த்தைகளை வீசிச் செல்லுங்கள் . இது தான் அவள் எதிர்பார்க்கும் பெரிய பரிசு அவள் இதயம் விரும்பும் மகளிர் தின பரிசு. உங்கள் அம்மாவின் அருகில் போய் அமர்ந்து சாப்பிடீர்களா என்று கேளுங்கள் . அவளிடம் ஏதாவது பேசி அவளை சிரிக்க செய்யுங்கள் எப்போதும் உனக்கு நான் இருக்கிறேன் என்று கைகளை பிடித்து உணர்த்தி செல்லுங்கள் இது தான் அந்த அன்னைக்கான பரிசு .

ஒவ்வொரு வீட்டு பெண்களும் அந்த வீட்டுக்குள் தேவதைகளாக எந்த மனப் புழுக்கமும் இல்லாமல் சுதந்திரமாக வலம் வருவதை விட பெரிய சிறகுகள் அவர்கள் எட்டிவிடும் எந்த சாதனையாலும் அவர்களுக்கு கிட்டப்போவதில்லை. எந்தப்பெண்ணுக்கும் எவ்வளவு சாதித்த பெண்களுக்கும் வீடே உலகம் . எனவே உங்கள் வகுப்பு தோழி , அலுவலக தோழி . முகநூல் நண்பர்கள், வாட்ஸாப்ப் குறுஞ்செய்தி என்று மகளிர் தினத்தன்று யாரையோ சிறப்பாக உணரச் செய்யும் நீங்கள் உங்கள் வீட்டுதேவதைகளை இனம் கண்டுகொள்ளுங்கள் முத்தங்களையும் நேசத்தையும் அன்பையும் நம்பிக்கையையும் அனுசரணையும் பரிமாறிக்கொள்ளுங்கள் . ஒவ்வொரு இல்லங்களிலும் பெண்கள் தேவதையானால் அவர்கள் போகும் தூரம் எல்லை இல்லா தூரமே .

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (8-Mar-18, 4:22 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 344

மேலே