ஆனந்தக் களிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
ஏழு மலைகளைத் தாண்டி - நிற்கும்
***எம்பிரான் சேவடி யைத்தொழ வேண்டி
பாழு மனத்திலோர் ஆசை - கொண்டு
***பாவிநான் பக்தியாய்ச் செய்தேனே பூசை !
கோவிந்தா கோவிந்தா என்றே - என்
***கூக்குரல் கேட்டதோ கூப்பிட்டான் இன்றே !
ஆவித் துடித்திடச் சென்றேன் - அந்த
***ஆன்மீக நாட்டத்தில் தேனமு துண்டேன் !
வேங்கட வாசனைக் கண்டேன் - என்
***மேனி சிலிர்த்திடப் பூரித்து நின்றேன் !
பாங்காய வன்திருக் கோலம் - வந்து
***பார்ப்பவர் நெஞ்சில் பதிந்திடும் நாளும் !
சங்குடன் சக்கரம் கொண்டு - சேவை
***சாதிக்கும் எம்பெரு மானெழில் கண்டு
பொங்கி வழிந்தது பாட்டு - நீயும்
***பூத்தாடு ஆனந்தத் தோடிதைக் கேட்டு !!
சியாமளா ராஜசேகர்