நதிக்கரையின் நினைவலைகள் கவிஞர் இரா இரவி

நதிக்கரையின் நினைவலைகள்!

கவிஞர் இரா. இரவி !



நதிக்கரையில் நாகரிகம் பிறந்தது என்றார்கள்
நதிப்பங்கீட்டில் நாகரிகம் இல்லை இன்று!



இருவேறு நாடுகள் ஆறுகளை நாளும்
இனிதே பகிர்ந்து கொள்கின்றனர் வெளியே !



அண்டை மாநிலமோ அடாவடி செய்கின்றது
உச்சநீதிமன்றம் உரைத்தும் அடங்க மறுக்கின்றது !



நடுவணரசோ நையாண்டி செய்து வருகின்றது
நாடுகின்றது நீதிமன்றத்தை கடைசி நாளில் சந்தேகமாம்!



அரை நூற்றாண்டுகளாக நடந்து வரும் சண்டைக்கு
அடித்துச் சொன்னது தீர்ப்பு மேலாண்மை வாரியமே தீர்வென்று!



தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விதமாக
தமிழ்நாட்டிற்கும் கர்னாடகத்திற்கும் போக்குக் காட்டுகின்றனர்!



பாய்ந்து வரும் தண்ணீர் எல்லோருக்கும் பொதுவானது
பாய்ந்து வந்து தடுக்கின்றனர் இரக்கமின்றியே!



விவசாயி இங்கே செத்து மடிகின்றான் நாளும்
வேடிக்கை பார்ப்பது விடுத்து விடிவிற்கு வழி காணுங்கள்!



முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில்
முயலுங்கள் மேலாண்மை வாரியம் அமைத்திடுங்கள்!



வாக்கு வங்கி அரசியலுக்காக விவசாயிகளுக்கு
வாக்கரிசி போடுவது முறையா? சிந்தியுங்கள்!



கீழ்தரமான அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்
காவிரித்தாயின் கால்விலங்கை கழற்றி எரியுங்கள்!



பகைநாட்டில் கூட பகிர்தலில் சண்டை இல்லை
பக்கத்து மாநிலத்தில் பகிர்தலில் சண்டை சரியோ?



உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை துச்சமென நிலைக்கின்றனர்
உச்சநீதிமன்றத்தின் மாண்பை சிதைத்து வருகின்றனர் !



யாருடைய அப்பன் வீட்டு சொத்தல்ல காவேரி
யாவருக்கும் பொதுவான நதி தான் காவேரி !



குடிக்கத் தண்ணீரின்றி தாகத்தில் தவிக்கிறான் தமிழன்
குடியானவனும் வேதனையில் மூழ்கி வெந்து நொந்து விட்டான்!



நதிக்கரையின் நினைவலைகள் நினைத்தால் சோகம்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (16-Apr-18, 9:41 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 98

மேலே