204 உலகோர் ஒவ்வாது பொய்யைத் தூண்டும் முயற்சி - பொய் 10

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

தற்புகழ்தல் புறங்கூறன் மிகஇருணம் வாங்குதல்பொய்ச்
..சான்று ரைத்தல்
பற்பலவாக் கட்சாடை சிரகரகம் பிதஞ்செய்து
..பசுமை பொய்போற்
பிற்பயன்றோன் றிடச்செய்தன் மெய்யுரைக்க வஞ்சிவாய்
..பேசி டாமல்
சற்பனையா யிருத்தல்பொய்க் கதைகூறல் கேட்டலெலாஞ்
..சலங்க ளாமோ. 10 பொய்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”தன்னையே புகழ்ந்து கொள்வது, ஒருவரைப் பற்றிக் கோள் சொல்வது, அளவுக்கு மிஞ்சிக் கடன் வாங்குவது, பொய்ச் சான்று சொல்வது, பலவிதமாக கண் சாடை, தலை கை முதலிய வற்றால் சாடை அசைவுகள் செய்து உண்மையைப் பொய் போல் தோன்றச் செய்து பயனிலதாக்குவது, மெய்சொல்ல அஞ்சி, வாய் பேசாது ஊமை போல் வஞ்சித்திருப்பது, நிகழ்வுகளைப் பொய்க் கதையாகச் சொல்வது, கேட்பது இவைகளெல்லாம் பொய் உரைக்கின்ற குற்றங்களாகும்” என்று இப்பாடலாசிரியர் சொல்கிறார்.

இருணம் - கடன். புறம் – கோள், சலம் - பொய்.
கம்பிதம் – அசைவு, சாடை, சற்பனை - வஞ்சனை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-18, 4:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே