தமிழர் படை தோற்காது
வரலாற்றில் மற்றுமொரு
கருப்புப் பக்கத்தை
துப்பாக்கி ரவைகளால்
எழுதிவிட்டார்கள்
வழக்கம் போலவே
போராட்டத்தை வன்முறையாக்கிவிட்டார்கள்
முழக்கங்களையெல்லாம்
ஓலங்களாக மாற்றிவிட்டார்கள்
கூட்டம் கலைக்கும்
தடியடிக் காட்சிகள் மட்டுமே
வேடிக்கை பார்த்து
அலுத்துக் கொண்ட ஆட்சியாளர்கள்
அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்டார்கள்
உள்ளிருக்கும் குரூரத்தை
வெளிக்காட்டிப் பார்க்கிறது பொம்மை
பன்னாட்டு நிறுவனம் காக்க
பதிமூன்று உயிர் குடித்து
பல்லிளித்துக் கிடக்கிறது ஜனநாயகம்
படுகொலைகள் செய்துவிட்டு
பண உதவி அறிவித்து
அரிப்பை நீக்கிக் கொள்கிறார்கள்
எதிராகக் குரல் கொடுத்தால்
குரல்வளை நெறிப்பதும்
மீறித் திமிறினால்
கொலையில் முடிப்பதும்
அதிகாரத் தந்திரப் பாதை
சுடு என்று சொன்னவுடன்
நெஞ்சைக் குறிபார்த்து
சுட்டவன் யார் ?
உயிரில்லா எந்திரமா ?
கூலிப் படையே சொல்
தாயைக் கொல்லச் சொன்னால்கூட
தயங்காமல் சுடுவீரோ ...
அப்பாவிகளைக் கொன்று தீர்த்துதான்
குறி பார்க்கும் திறமையை
உறுதி செய்து கொண்டீரோ ...
வீடு சென்று சீருடை களைகையில்
பயப்படும் குழந்தைக்கு
பதில் என்ன சொல்வீர்கள் ...?
துப்பாக்கி தூக்கிப் பிடித்தவனே
உனக்கு இதயமில்லையா
செத்துக் கிடப்பவனும்
உன் போல் மனிதனில்லையா ?
மரண ஓலச் சத்தங்கள்
காதில் கேட்கவில்லையா ?
துருப்பிடித்த மூளைக்குள்ளே
இரக்கம் இல்லையா ?
குறிபார்த்து விரல் அழுத்தும்போது
நெஞ்சம் பதறவில்லையா
சீருடைக்குள் இருப்பதெல்லாம்
நெஞ்சம் இல்லையா ?
மக்களாட்சி காக்குமென
நம்பி ஓட்டுப் போட்டால்
மனசாட்சி இல்லாமல்
நெஞ்சில் பாய்கிறது தோட்டா
பன்னாட்டு நிறுவனம் காக்க
சொந்த நாட்டு மக்களைச்
சுட்டுக் கொல்வதுதான்
மக்களாட்சியா ?
போராட்டத்தின் முடிவு என்றும்
அப்பாவிகளின் மரணக் காட்சியா ?
புலம்பலல்ல ... கதறலல்ல
சூளுரை இது
கொலைகள் எப்போதும்
புரட்சியைக் கொல்லாது
செந்நீரில் தான்
புரட்சிக்கான விதை
வேகமாக வளரும்
வரலாற்றில் மற்றுமொரு
கறுப்புப் பக்கத்தை
துப்பாக்கி ரவைகளால்
எழுதிவிட்டீர்கள்...
மக்களின் கோபத் தொடர்ச்சியை
வரலாறு சிவப்புப் பக்கங்களில்
பதியக் காத்திருக்கிறது ...

