சம்மட்டிகள் சுவர்கள் ஆணிகள்
அது ஒரு
அடர் மழைக்கால இரவு!
கிரீச்சிடும் பூச்சிகளின்
வினோத சத்தங்கள்!
அரசு ஊழியனின்
வாழ்வு போல
புலம்பி சுழலும்
மின் விசிறி!
ஒரேதிசையில் பயணிப்பதின்
அலுப்பில்...
தனக்காக எத்தனை
பேர் காத்திருந்தாலும்
யாருக்கும் காத்திராத
நன்றி கெட்ட நண்பனாய்
காலம்...
கடிகாரத்தில் ஏறி
டிக் டிக் சத்தத்துடன்
பயணம் கொண்டிருந்தது..
சுவரில் தொங்கிய
இறுதி விருந்து
இயேசு நாதர்
எதையோ உணர்த்த
முயன்று கொண்டிருந்தார்...
ஒரு புறம் கிருஷ்ணர்
படைப்பின் ரகசியத்தை
அர்ச்சுனன் வாயிலாக
எல்லோர் காதிலும்
எடுத்து உரைத்த வண்ணம்....
சம்மட்டிகளாய்...
சுவார்களாய்..
ஆணிகளாய்...
மனித பாத்திரங்கள்.
இறைவனின் கையில்...
இருப்பது போல்
தோன்றியது...
நிஜமன்றோ!
சில நேரங்களில் ஆணிகளாகிறோம்!
சில நேரங்களில் சுவர்களாகிறோம்!
சிலநேரங்களில் சம்மட்டிகளாகிறோம்!

