குவளைக் கண்ணன்
குவளைக் கண்ணன், தமிழ் நவீன கவிதைகள் புறக்கணித்த லயத்தையும் அமைதியான த்வனியையும் கொண்ட கவிதை களை எழுதியவர். சி.மணி,சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன், ஆனந்த் ஆகிய கவிஞர்களின் படைப்புகளால் ஊக்கம் பெற்றவர். கர்நாடக இசையில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர். கவிதை மட்டுமல்லாது தத்துவத்திலும், புனை கதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். தன் கல்லூரிக் காலத்தில் ஃப்ரெட்ரிக் நீட்ஷேயின் (Friedrich Nietzsche) ‘Thus Spoke Zarathustra’ என்னும் புத்தகத்தால் பெரிதும் கவரப்பட்டார். அந்த நூலைத் தமிழில் ‘ஜரதுஷ்டிரா இவ்வாறு கூறினான்’ என்று மொழிபெயர்த்துள்ளார். இது தமிழுக்கு அவர் நல்கிய கொடை.
இவை மட்டுமல்லாமல் கவிஞர் ஆனந்துடன் இணைந்து இத்தாலிய நாவலான ‘க’வை மொழிபெயர்த்துள்ளார். குற்றப் பரம்பரைச் சட்டம் தொடர்பான திலிப் டிசௌஸாவின் ‘Branded By Law’ என்னும் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘எங்கே அந்தப் பாடல்கள்’ என்னும் பெயரில் ஆப்பிரிக்கப் பெண் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழின் முன்னோடிக் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு நாவல் எழுதும் திட்டமும் வைத்திருந்தார். கடந்த மே 20-ம் தேதி காலமாகிவிட்டார்.